Saturday, 28 December 2024

சிறுகதை - மனித தெய்வம் - துரோணன்

தங்கை கொலை செய்யப்படுகிறாள். தங்கையைக் காக்க இயலாமல் போனோமே எனக் கதறும் அண்ணன் மீதே கொலைப்பழி சுமத்தி பல ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி வைக்கிறான் கொலையாளி. சிறைவாசம் முடிந்து ஊர் திரும்புகிறான் அண்ணன். சிறையிலிருந்த ஒவ்வொரு கணமும் கொலை என்ற எண்ணத்தை மட்டுமே அடை காத்திருக்கிறான். கொலையாளி வீட்டுக்கு வரும் போது அந்த வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொலையாளியின் மகள் தீயில் சிக்கியிருக்கிறாள். உள் நுழைய யாருக்கும் துணிவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த கைதி தீக்குள் நுழைந்து தன் உயிரைத் தந்து அவள் உயிரைக் காக்கிறான். கொலை எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்த மனம் எந்த கணத்தில் தனக்கு துயரம் தந்தவன் மகளை காக்க வேண்டும் என முடிவெடுத்தது? அந்த கணம் தான் மனிதன் தெய்வமாகும் மாயக் கணமா?