Tuesday, 10 June 2025

திறப்பு


வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவரில் இருக்கும் இரும்பு gateக்கு ஒரு பூட்டும் சாவியும் உண்டு. தினமும் இரவு அதனைப் பூட்டுவேன். காலையில் திறப்பேன். தினமும் சில வினாடிகள் மட்டும் ஈடுபடும் செயல். சில நாட்களாக அதனைப் பூட்டித் திறப்பது இலகுவாக இல்லை. கடினப்பட்டு அதனைச் செய்வதைப் போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனை சரி செய்ய வேண்டும் என நினைப்பேன். இரவு உறங்கச் செல்லும் நேரம் , காலையில் விழித்ததும் சென்று திறக்கும் நேரம் என அந்த இரு சந்தர்ப்பங்கள் தவிர வேறு சந்தர்ப்பங்களில் அதனை கவனிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இன்று மாலை வீட்டு வாசல் படியில் அமர்ந்திருந்த போது அந்த பூட்டினைக் கண்டேன். கடைத்தெரு செல்லும் போது அதனை எடுத்துக் கொண்டு சென்றேன். பூட்டு பழுது பார்ப்பவர் ஒருவர் கடைத்தெருவில் சாலையோரத்தில் அமர்ந்திருப்பார். அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். அவர் இன்று வரவில்லை. வீட்டுக்கு வந்தேன். பூட்டின் உட்பகுதிகளில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் ஊற்றினேன். சில நிமிடங்களில் பூட்டு இலகுவாக இயங்க ஆரம்பித்தது. எளிய விஷயம் தான். என்றாலும் எனக்கு அது அளித்த மகிழ்ச்சி என்பது மிகப் பெரியது.  வாழ்க்கை இவ்விதமான சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளால் ஆனது என்பது என் எண்ணம்.