நேற்று எனக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். அவரிடம் அவரது பெயர் என்ன என்று கேட்டேன். தனது பெயர் பிச்சாண்டி என்று கூறினார். அந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அவர் தன் பாட்டனாரின் பெயரைத் தனக்கு வைத்திருக்கிறார்கள் என்று கூறினார். சைவத்தில் பிச்சாண்டி எனப்படும் பிச்சாண்டவர் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டவர் என்பதை அவருக்குக் கூறினேன்.
தாருகாவனத்தில் முனிவர்கள் வேள்வி இயற்றி வந்தனர். வேள்வி இயற்றுவதில் தாங்கள் அடைந்திருக்கும் திறன் குறித்து அவர்கள் ஆணவம் கொண்டிருந்தனர். தாங்கள் வசித்த தாருகாவனத்தை மானசீகமான கோடொன்றால் எல்லையிட்டிருந்தனர். அவர்கள் ஆணவம் அழிக்க சிவன் ஒரு காட்டாளனாக அங்கே நுழைந்தான். அங்கிருந்தவர்களிடம் பிச்சை கோரினான். முனிவர்கள் அவனது மீறலைக் கண்டு சினந்து அவன் மீது வேள்வி மூலம் நாகங்களையும் படைக்கலன்களையும் ஏவினர். அவை அனைத்தையும் அவன் ஆபரணங்களாக்கிக் கொண்டான். உலகின் மொத்த இருளையும் ஒரு யானையாக ஆக்கி அவன் மேல் ஏவினர். அதனை அவன் உரித்துப் போர்த்தி கஜசம்ஹார மூர்த்தி ஆனான்.
இந்திய இலக்கியங்கள் எவ்விதம் பிச்சாண்டவர் கதையைக் கூறுகின்றன ; எவரெவரால் எவ்விதம் எந்த காலத்தில் கூறப்பட்டுள்ளன. நாடெங்கும் இருக்கும் பிச்சாண்டவர் சிற்பங்கள் என்னென்ன என காலத்தால் நீண்ட ஒரு பயணத்தை நிகழ்த்த முடியும். நாம் மரபை அறிந்திருந்தோம் எனில். மரபை அறிய ஆர்வம் கொண்டிருந்தோம் எனில்.