ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கும் போது சென்னையில் எனக்கு எதிர் இருக்கையில் ஒருவர் அமர்ந்தார். அவர் தனக்கு வந்த அலைபேசி அழைப்புகளை ஒரிய மொழியில் பேசிக் கொண்டிருந்தார். அவரது தோற்றம் அவர் ஒரியாக்காரர் என்றே கூறியது. ஒரு அலைபேசி அழைப்புக்கு அவர் சில வார்த்தைகள் தமிழில் பேசுவது கேட்டது. அவரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். ஒரிஸ்ஸாவில் பிறந்து வளர்ந்தவர் அவர். அவரது பெற்றோர் ஒரிஸ்ஸாவில் இருக்கின்றனர். அவர் ஈரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் பணிபுரிகிறார். ஈரோடு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. வருடத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ ஒரிஸ்ஸா சென்று வருவார். அவர் பேசும் தமிழ் கோயம்புத்தூர் தமிழ். அந்த பாணிக்கே உரிய ஏற்ற இறக்கங்கள். அவரிடம் தமிழில் பேச நேரும் எவரும் அவர் கோவைப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் என்றே எண்ணுவார்கள். அவரது பெயரைக் கேட்டேன். கணேஷ் என்றார்.