Monday, 30 June 2025

நற்பணி

 எனது நண்பன் ஒருவன் வெளிமாநிலத்தில் வசிக்கிறான். அவனது உறவினர் அவனைக் காண அங்கு முதல்முறையாக வருகிறார். அவர் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி. ரயில் ஏறும் போதே நண்பன் அலைபேசியில் அவருக்கு ஒரு குறிப்பை வழங்கியிருக்கிறான். அதாவது, வண்டி தமிழகத்தைத் தாண்டியதும் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யவும் என்று. ரோமிங் வசதி கிடைப்பதற்கு அவ்வாறு செய்யச் சொல்லியிருக்கிறான் ; ரயில் நிலையத்தில் தொடர்பு கொள்வதற்கு வசதியாக. அந்த மூதாட்டி 12 மணி நேரப் பயணத்தை அந்த ரயிலில் மேற்கொண்டிருக்கிறார். ஃபோனை ஆஃப் செய்து ஆன் செய்தும் ரோமிங் கிடைக்கவில்லை. அவராலும் ஃபோன் செய்ய முடியவில்லை. அவருக்கும் ஃபோன் செய்ய முடியவில்லை. நண்பன் சற்று பதட்டமாகி விட்டான். உறவினர் மேலும் பதட்டமாகி விடுவாரே என்ற பதட்டமும் சேர்ந்து கொண்டது. ரயில்வேவின் இணையதளத்துக்குச் சென்று அதில் இருந்த 139 என்ற எண்ணுக்கு டயல் செய்திருக்கிறான். அதில் என்ன உதவி தேவை என்று கேட்டிருக்கிறார்கள். இன்ன ரயிலில் இன்ன பெட்டியில் எனது வயது மூத்த உறவினர் வருகிறார் ; அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை ; தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறான். 15 நிமிடத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் காவலர் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார். அவரும் விபரம் கேட்டுக் கொண்டார். பின்னர் அந்த பெட்டியின் டிக்கெட் பரிசோதகர் தனது அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயணியின் இருக்கை எண் கேட்டு அவரைச் சென்று சந்தித்து நண்பனிடம் அவரைப் பேச வைத்திருக்கிறார். டிக்கெட் பரிசோதகரிடம் நண்பன் இன்ன ரயில் நிலையத்தில் மூதாட்டியை இறக்கி விடுமாறு கூற அவ்விதமே செய்திருக்கிறார்கள். இவை அனைத்தும் 25 நிமிடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. நண்பன் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னிடம் இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டான்.