Saturday, 7 June 2025

மிக அவசரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

 நண்பர் ஒருவர் வெளியூர்க்காரர். இங்கே அவருக்கு இரண்டு கிரவுண்டுக்கும் கூடுதலான அளவுள்ள மனையை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவரது மனையின் ஆவணங்கள் வங்கிக்கு அளிக்கப்பட்டு அவற்றின் பேரில் கடன் பெறப்பட்டுள்ளது. நண்பர் ஆவணங்களின் நகல் என்னிடம் இருந்தது. நான் எல்லா அசல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டேன். நேற்று இரவு 7.55க்கு நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என்னுடைய அலைபேசிக்கு வந்தது. அதாவது, மனையின் ஆவணங்களின் நகல் வருமான வரி தாக்கலுக்காக அவருக்குத் தேவைப்படுகிறது. எனவே உடன் கூரியரில் அனுப்புமாறு கேட்டிருந்தார். விஷயம் மிக அவசரம் எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த நாளான சனிக்கிழமையான இன்று தான் கூரியர் அனுப்ப முடியும். அது அவருக்கு திங்களன்று கிடைக்கும். நான் ஸ்கேன் செய்து சேமித்து வைத்திருந்த ஆவணங்களை அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். மிக அவசரம் என்பதால் அவர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வார் என. எனவே மின்னஞ்சல் அனுப்பப்பட்ட விபரத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தேன். கொஞ்ச நேரத்தில் நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. ‘’நான் உங்களை கூரியரில் அனுப்பச் சொன்னேன்’’ என்றார். ‘’ரொம்ப அவசரம்னு மெசேஜ் செஞ்சீங்க. அதனால தான் மெயில் போட்டேன். உங்க மெசேஜ் வந்தப்ப நேரம் நேத்து நைட் 8 மணி. அதுக்கு மேல கூரியர் அனுப்ப முடியாது. சனிக்கிழமை புக் பண்ணா நடுவுல ஞாயிறு லீவு. திங்கட்கிழமைதான் உங்க கைக்கு கிடைக்கும். அது உங்களுக்கு ஓ.கே னா எனக்கும் ஓ.கே.’’ என்றேன்.