உகிர்கள் சுவர் பற்றி
அமர்ந்திருந்தது
வால்காக்கை ஒன்று
மாலைப் பொழுதொன்றில்
வெளியே புறப்பட்டவன்
வீட்டின் கதவருகே நின்று கொண்டேன்
அதன் அமர்வைக் கலைக்க விரும்பாமல்
வினாடிகள் கடந்தன
நிமிடங்கள் போயின
நாழிகைப் பொழுதுக்கும் மேலாயிற்று
வால்காக்கை அசைவின்றி இருந்தது
குறிப்பிட்டு எதையும் பாராமல்
எதற்கும் விளைவாற்றாமல்
சுவாசத்தினால்
அதன் உடல் அசைந்ததை
உணர முடிந்தது
அவ்வப்போது
அதனைக் கண்டு நின்றிருந்த பொழுது
முக்கியமானது
அகம் சொன்னது
மூச்சு நிகழ்கிறது
எங்கள் இருவருக்கும்
ஜீவித்திருக்கிறோம்
நாங்கள் இருவரும்
அதனிடம் உரையாட அகம் விரும்பியது
அதனிடம் ஏதேனும் கேட்க அகம் விரும்பியது
என் உணர்வுகளை என் மௌனமாக்கினேன்
இந்த ஆழி சூழ் உலகில்
கம்பீரமாக வாழ்கிறது
வால்காக்கை
இறைமையின் துளி ஒன்றாக
வால்காக்கையே
நாம் இணைந்திருக்கும் புள்ளி
தீயின் ஒரு பொறி
அது அக்னிக் குஞ்சாகட்டும்
ஒளிரும் வான்மீனாகட்டும்
உதிக்கின்ற சூரியன் ஆகட்டும்