Sunday, 6 July 2025

கோதாவரி

 ஆந்திர நிலம் கண்டு வந்ததிலிருந்து கோதாவரி தீரத்தின் நினைவு இருந்து கொண்டேயிருந்தது. கோதாவரிக் கரையில் ஒரு வாரமாவது தங்கி நீராட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. நதியில் மூழ்கும் போது நம் அகம் கரைகிறது. யாவற்றுக்கும் மூலமான ஒன்றுடன் நாம் தொடர்பாகிறோம். மானுடன் ஒவ்வொரு மூச்சிலும் அதனை உணர முடியும் ; ஒவ்வொரு மூச்சிலும் யாவற்றுக்கும் மூலமான ஒன்றுடன் தொடர்பு கொள்ள முடியும். எனினும் நாம் எளியவர்கள். நம் மனம் உலகியலுடன் தன்னை ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. நம் வாழ்வில் உலகியல் அளிக்கும் தடைகள் இருக்கவே செய்யும். அவற்றைக் குறைத்துக் கொள்வதற்கான செயலே நதியில் மூழ்கி எழல். ஒவ்வொரு முறை நதியைக் காணும் போதும் நதியில் மூழ்கும் போதும் நான் நினைப்பதுண்டு ; எத்தனை கோடி மக்களுக்கு நதி உணவளித்திருக்கிறது ; வாழ்வளித்திருக்கிறது என. மானுடனின் கலை நுண்கலை பண்பாடு ஆகியவற்றில் நதிகளின் பங்களிப்பு மிகப் பெரியது. சமீப நாட்களில் கோதாவரிக் கரை கிராமம் ஒன்றில் வாழ்வின் எஞ்சியிருக்கும் பகுதிகளைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகத் தோன்றியுள்ளது. 

கோதாவரியின் நினைவில் இன்று மாலை காவிரியில் மூழ்கி எழுந்தேன்.