மனிதர்களுக்கும் எந்திரங்களுக்குமான உறவு என்பது மனிதன் உருவான தொல்காலத்திலிருந்து மானுட வரலாற்றின் முக்கிய அம்சமாகவும் மானுடனுடன் தொடர்ந்து உடன் வருவதாகவும் இருக்கிறது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் ரூலர் கொண்டு பென்சிலால் மார்ஜின் போட்டு அதில் பேனாவால் எழுதுவது என்பது பிரத்யேகமான அனுபவம். எல்லையற்ற இந்த உலகின் ஏதேனும் ஒரு விஷயத்தை அல்லது சில விஷயங்களை அல்லது பல விஷயங்களை காகிதத்தின் மார்ஜினுக்குள் எல்லையிட்டு வைப்பது என்பது அதனை அல்லது அவற்றை கைக்கொள்வதன் முதல் முயற்சி என்று கூற முடியும். எழுதும் மனித மனத்துக்கும் எழுதுகோலுக்கும் இடையே மிக நுண் அளவிலேனும் ஓர் ஒருங்கிணைப்பு தேவை ; அது இருந்தால் மட்டுமே எழுதப்படும் விஷயம் எழுதப்படுகையிலும் எழுதப்பட்ட பின்னரும் மாயங்கள் நிகழ்த்தும். நேற்று நீண்ட நாட்களுக்குப் பின்னர் காகிதத்தில் ஒரு சிறுகதையை எழுதினேன். கணினித் திரையில் அட்சரங்கள் இருப்பதற்கும் நம்மால் தொட்டுணரக் கூடியதாக அட்சரங்கள் இருப்பதற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கவே செய்கிறது. எழுதப்பட்ட பிரதியை கணினியில் ஏற்றினேன். அப்போது சில மாற்றங்களை செய்ய முடிந்தது. மேஜையின் மேல் இருந்த பிரதியை அவ்வப்போது எடுத்து வாசித்துப் பார்த்தேன். எழுதப்பட்ட பிரதியைப் பார்த்து கணினியில் எழுதுவது என்பது அத்தனை குதூகலமான செயல் அல்ல எனினும் காகிதத்தில் எழுதுவது குதூகலம் தருவதாகவே இருக்கிறது.