Thursday, 9 April 2026

விசும்பின் துளி

 விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்ப அரிது என்பது திருக்குறள். ஆகாயத்தின் ஒரு துளி மண்ணில் வீழாமல் போனால் இங்கே ஒரு புல் கூட முளைக்க முடியாது என்பது அதன் பொருள். வள்ளுவர் விசும்பு என்கிறார். வானம் என மானுடர் உணர்வது அவர்கள் கட்புலனுக்குத் தென்படும் பரப்பை. விசும்பு மானுடப் பார்வைக்கும் மானுட அறிதலுக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்டம் என்பதால் அதனைக் குறிப்பிடுகிறார். 

இன்று சீர்காழியில் ஒரு இடத்தை அளக்க நண்பருடன் சென்றிருந்தேன். ஏற்கனவே உருவாகி இருக்கும் குடியிருப்பு நகருக்கான விரிவாக்கமாக ஒரு பகுதியை அமைக்கிறார்கள். மொத்த பரப்பு 2 ஏக்கர் இருக்கக் கூடும். நண்பர் தன் அதி நவீன் அளக்கும் கருவியில் இடத்தின் எல்லைகளை பதித்துக் கொண்டார். ஒரு கோலை எல்லைப் பகுதியில் நடுவதே வேலை. கோல் அளவீடுகளை உருவாக்கிக் கொள்கிறது. நடுவது கூட அல்ல தொடுவதே வேலை. தொட்டால் அளவை எடுத்துக் கொள்கிறது. நண்பர் வேலையைத் தொடக்கினார். 

அப்பரப்பில் ஒரு மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

‘’எத்தனை ஆடு உங்க கிட்ட இருக்கு அம்மா?’’

’’8 ஆடு. 2 குட்டி’’

‘’பங்குனி வெயில் காய்ச்சலா காயுதே ; இதுல என்னத்த மேயும்?’’

’’மேயற வரைக்கும் மேயட்டும். வானம் கருணை வச்சா புல் முளைக்கும்’’

இந்த 10 ஆடுகள் பசியாறக் கூட வானத்தின் கருணை வேண்டும். 

வள்ளுவன் ஏன் பேராசான் என்பது எனக்கு அக்கணத்தில் புரிந்தது.