Thursday, 30 April 2026
புள்ளரவம்
காவிரி தென்பெண்ணை பொருநை
ஒரு தமிழ்க் கவிஞரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அவரது முதல் கவிதைத் தொக்குப்பைக் கொண்டு வர அவர் முடிவு செய்த போது தொகுப்புக்கான கவிதைகளை புதுச்சேரியின் மீனவர் கிராமக் கடற்கரை ஒன்றில் அமர்ந்து நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி வாசித்தோம். நவீனக் கவிதையின் வடிவம் மௌனமான அக வாசிப்புக்கானது. ஐரோப்பியத் தாக்கம் அவ்விதமான தன்மையை உண்டாக்கியிருக்கிறது. தமிழ் உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று. நமக்கு 2500 ஆண்டு காலத்துக்கும் மேலாக உயிர்த்திருக்கும் மொழி இருக்கிறது. இங்கே கவிதை சொல்லப்பட்டிருக்கிறது ; பாடப்பட்டிருக்கிறது ‘ எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்படும் எழுதப்படும் கவிதை பாடப்பட்டிருக்கிறது. பாடப்படும் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அம்மரபினையொட்டி எழுதப்பட்ட அக்கவிதைகளை அந்தக் கடற்கரையில் மீன் வலைகளுக்கு மத்தியில் அலையோசை மெல்ல கேட்டுக் கொண்டிருக்க நெரித்த திரைகடலின் முன் அமர்ந்து நாங்கள் எங்கள் குரலில் வாசித்துக் கொண்டிருந்தோம். அந்நிகழ்வு நிறைவு பெற்றதும் அத்தொகுப்பு சிறந்த ஒன்றாக விளங்கும் என எங்கள் ஆழுளம் அறிந்தது. அவ்விதமே அத்தொகுப்பு அமைந்தது நல்லூழ்.
சில ஆண்டுகளுக்குப் பின் நண்பர் தன் இரண்டாம் தொகுப்பைக் கொண்டு வர இருக்கிறார். தொகுப்பினை இறுதி செய்ய சென்னை வந்து விடுகிறேன் என்று சொன்னேன். இருப்பினும் கடைசி நேரத்தில் முதல் தொகுப்பைப் போல கவிதை வாசிப்பை புதுச்சேரியில் வைத்து இறுதி செய்ய நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம். அவர் சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு காரில் புறப்பட்டார். நான் ஊரிலிருந்து அதே நேரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். 12 மணிக்கு புதுவை கடற்கரையில் இருக்கும் பாரதி பூங்காவினை நான் சென்றடைந்தேன். நண்பர் 1 மணிக்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத இனிமையாக நண்பருடன் அவரது இன்னொரு நண்பரும் வந்திருந்தார். மூவரும் முறையே காவிரி தென்பெண்ணை பொருநை நதிகளின் கரைகளில் பிறந்து வளர்ந்தவர்கள்.
அமைதியான காஃபி ஷாப் ஒன்றில் அமர்ந்து கவிதைத் தொகுப்பின் கவிதைகளை மாறி மாறி வாசித்தோம். நானும் நண்பரும் வாசிக்க மூன்றாவது நண்பர் அக்கவிதைகளை உள ஆழத்தால் பின் தொடர்ந்தது அத்தருணத்தை மிக மிருதுவானதாகவும் மென்மை மிக்கதாகவும் ஆக்கியது. தொகுப்பை இறுதி செய்து விட்டு நண்பர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துப் பிரிந்து ஊர் திரும்பினேன்.
வசந்தத்தின் நாட்குறிப்பு - 4
வசந்தத்தின் நாட்குறிப்பு - 3
வசந்தத்தின் நாட்குறிப்பு - 2
Wednesday, 29 April 2026
வசந்தத்தின் நாட்குறிப்பு
Monday, 27 April 2026
சிறப்பான வழிமுறை
Sunday, 26 April 2026
சலனங்களும் அலைகளும்
சில வாரங்களுக்கு முன், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அடுத்தடுத்து சந்திப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அவர் பல ஆண்டுகளாக ஒரு பள்ளியை நடத்துகிறார். அதில் இப்போதிருக்கும் 300 என்ற மாணவர் எண்ணிக்கையை 1200 என ஆக்குங்கள் என்று சொன்னேன். எனது எண்ணங்களை முன்வைத்தேன். பண்டைய இந்தியக் கல்விமுறையிலிருந்து இன்றைக்கு நிலவும் கல்வி முறை வரை பல விஷயங்களை அணுகி எடுத்துக்காட்டி எனது அபிப்ராயங்களையும் எண்ணங்களையும் அவரிடம் சொன்னேன். எனது தளத்தில் எழுதினேன். எழுதியவற்றை அவரும் வாசித்தார். குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை) யிலிருந்து அதிர்ச்சி அடைதல் என்னும் பதிவு வரைக்கும் கணிசமாக எழுதினேன். ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவது குறித்தும் நடத்துவது குறித்தும் என்னால் இப்போது ஒரு மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இவை இவற்றின் இலக்கை எட்டினவா? நண்பர் பள்ளியை மேலும் விரிவுபடுத்துவரா ? இந்த இரண்டும் முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதில் நண்பரின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தும் எதிர்கால முடிவுகளைப் பொறுத்தும் அமையும். என்னால் இயன்ற அளவில் ஒரு துவக்கச் சித்திரத்தை உருவாக்கியுள்ளேன். அவர் தொடர்ந்து சிந்தித்து இதனுள் உள் நுழைந்தால் திட்டமிடுதலில் மேலும் அவருக்கு உதவ முடியும்.
இன்று இந்த விஷயத்தின் மைய முடிச்சு ‘’தரக் கல்வி’’க்கும் ‘’பெருந்திரள் கல்வி’’க்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்பதை உணர்ந்தேன். அது குறித்து எழுத வேண்டும் என எண்ணினேன். மழை விட்டும் தூவானம் விடவில்லை.
அதிர்ச்சி அடைதல்
எண்கள் எப்போதும் சுவாரசியமானவை ; சமயத்தில் அதிர்ச்சி அளிப்பவையும் கூட. தமிழ் மூதாட்டி ஔவை ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ என்றாள். மானுட வரலாற்றில் மனிதர்கள் எண்களை கற்பனையில் உருவாக்கிக் கொண்டதே உலகியல் ஞானத்தின் அடிப்படையாகவும் துவக்கமாகவும் இருந்திருக்கக் கூடும்.
நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை நேற்று எழுதினேன். அதாவது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் பட்ஜெட்டைக் கொண்டு ஒவ்வொரு தமிழக மாணவனுக்கும் உலகின் அதி உயர் கல்வியை அளிக்க முடியும் என. இதனைக் கூறியவர் மிகவும் நம்பகத்துக்குரியவர். எனினும் இன்று காலை நான் அதனை நேரடியாக சோதித்துப் பார்க்க முடிவு செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் இணைய தளத்துக்குச் சென்று தமிழகத்தில் 1- 12 வகுப்பு படிக்கும் மாணவர் எண்ணிக்கை என்ன என்று பார்த்தேன். சுமார் 52,00,000 பேர். பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் ரூ.46,000 கோடி. ஒரு மாணவனுக்குத் தோராயமாக ரூ.90,000 செலவு செய்யப்படுகிறது.
அதாவது, இப்படி கற்பனை செய்து கொள்வோம். ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பு சேர வருகிறான். அவன் பெற்றோருக்கு அரசு ரூ.90,000 கொடுத்து நீங்கள் உங்கள் குழந்தையின் கல்வியை நீங்களே கொடுங்கள் எனக் கூறினால் அவர்கள் ஏதேனும் தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த மாணவனுக்கு ரூ.90,000 அரசு கொடுக்கும். 12 ஆண்டுகளில் அந்த மாணவனுக்கு ரூ.10,80,000 அளிக்கப்பட்டிருக்கும். அவன் கல்வியே பயிலவில்லை என்றாலும் 17 வயதில் அவன் கையில் ரூ.10,80,000 இருக்கும்.
தமிழகத்தில் 12 ஆண்டுகளாக பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்ற மாணவனால் 300 வார்த்தைகள் தமிழில் பிழையில்லாமல் ஒரு பத்தி எழுத முடியாது என்னும் நிலை இருக்கும் நிலையில் 12 ஆண்டுகள் தன்னிடம் பயின்ற மாணவனுக்கு குறைந்தபட்சக் கல்வியைக் கூட அளிக்க முயலாத உறுதி செய்ய முடியாத மாநில அரசு ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.10,80,000 12 ஆண்டுகளில் அளித்து விட்டு நேரடியாக கல்வி அளிக்கும் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தானே உகந்த செயல்?
Saturday, 25 April 2026
பள்ளிக்கல்வி - எச்சரிக்கை சமிங்ஞைகள்
நண்பருக்காக ஓர் உத்தேச மதிப்பீட்டை உருவாக்கிய போது எனக்கு அதிர்ச்சி தரத்தக்க அளவில் ஓர் உண்மை புரிந்தது. நண்பரிடம் நிலம் இருக்கிறது. பள்ளி இருக்கிறது. 300 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியை 1200 மாணவர்கள் படிக்கும் விதமாக மாற்ற வேண்டும் என்றாலே ரூ.56 கோடி தேவைப்படுகிறது. நிலம் இல்லாத ஒருவர் புதிதாக பள்ளி துவங்க விரும்பினால் மேலும் ரூ.10 கோடி தேவைப்படலாம். அதாவது 1200 மாணவர்கள் பயிலும் விதமாக ஒரு பள்ளி துவங்க குறைந்தபட்சம் ரூ.60 கோடி அளவில் முதலீடு தேவை.
இன்றைய சூழ்நிலையில் வணிகர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் மட்டுமே இவ்வளவு முதலீடு எளிதில் இருக்கும். வணிகர்களுக்கு எதிலும் ஒரு வணிகக் கண்ணோட்டம் கணிசமான அளவில் இருக்கும். தமிழக அரசியல்வாதிகள் ஊழலையும் சுரண்டலையும் மட்டுமே பழகியவர்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மாநிலமெங்கும் இருக்கின்றன. ஆனால் அரசு ஒவ்வொரு பள்ளியையும் நடத்த செலவு செய்யும் தொகையை மொத்தமாகக் கணக்கிட்டு அதனை பள்ளி மாணவன் ஒவ்வொருவருக்கும் அளித்தால் ரூ.2,00,000 செலுத்தி மிக உயர் தனியார் பள்ளியில் தமிழகத்தின் ஒவ்வொரு மாணவனும் பயில முடியும். அவ்வளவு தொகை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பட்ஜெட். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் : நீங்கள் சாலையில் நடந்து செல்லும் தமிழகத்தின் எந்த ஒரு மாணவனையும் அழைத்து தமிழிலோ ஆங்கிலத்திலோ 300 வார்த்தைகளில் ஒரு பத்தியை எழுதச் சொன்னால் 10ல் 9 பேருக்கு எழுத வராது. அவர்கள் அதற்கு பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு 17 வயது மாணவனால் 300 வார்த்தை கூட பிழையில்லாமல் எழுத வராது என்றால் பள்ளிகள் 12 ஆண்டுகள் பயிற்றுவித்தது என்ன?
முக்கியமான சமூகப் பிரச்சனையாகும் இது.
பள்ளி - உத்தேச மதிப்பீடு
Friday, 24 April 2026
படைப்பூக்கப் பயிற்சி
மகா பிரபஞ்சம்
நற்பாதை
Wednesday, 22 April 2026
நன்முடிவு
எனது நண்பர் ஒருவர் அவரது இன்னொரு நண்பரைக் குறித்து சொன்னார். எனக்கு அவர் சொன்ன விஷயம் மிக சுவாரசியமானதாக இருந்தது. அதாவது நண்பரின் நண்பர் அலைபேசி உபயோகத்துக்குள் வரவேயில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார் என்றாலும் அவர் அலைபேசி வைத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் தொழில் வாழ்வில் சில இடர்கள் உருவாகின்றன என்றாலும் அந்த இடர்களை எதிர்கொண்டு களைகிறாரே அன்றி அலைபேசி வைத்துக் கொள்ளலாமா என எப்போதும் யோசித்ததில்லை அவர் என்றார் என் நண்பர். அந்த முடிவு ஒரு நன்முடிவு என்பது என் அபிப்ராயம்.
Tuesday, 21 April 2026
இனிய நிகழ்வு
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக பெரும் படிப்பாளிகள். நாட்டின் மிக உயர்ந்த படிப்புகளில் ஒன்றை மூன்று தலைமுறையினரும் படித்திருக்கிறார்கள். ஒருமுறை நண்பரைக் காணச் சென்ற போது அவருக்கு சட்ட மேதை ஃபாலி நாரிமன் எழுதிய ’’Before memory fades'' என்ற நூலை பரிசாக அளித்தேன். அந்த நூல் வீட்டின் நூல் நிலைய அடுக்கில் இருந்திருக்கிறது. நண்பரின் மகள் அந்த நூலை அடிக்கடி எடுத்துப் பார்த்திருக்கிறார். நேற்று நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது பல்கலைக்கழகத்தில் பயிலும் நண்பரின் மகள் நண்பருக்கு ஃபோன் செய்தார். அவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு குவிஸ் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். அந்த விபரத்தைத் தெரிவித்ததுடன் இன்னொரு விபரமும் தனது தந்தையிடம் கூறினார். அதாவது, அந்த குவிஸில் ஒரு புகைப்படத்தைக் காட்டி இது யார் எனக் கேட்டிருக்கிறார்கள். நண்பரின் மகள் ‘’ஃபாலி நாரிமன்’’ என சரியாக பதில் கூறியிருக்கிறார். இதனைக் கூறி ‘’ இந்த புத்தகத்தை நம்ம வீட்டு லைப்ரரில நாம் அடிக்கடி பாத்திருக்கன். வீட்ல இருக்கும் போது அந்த புத்தகத்தையும் யுனிவர்சிட்டி வரும் போது அதோட கிண்டில் எடிஷனையும் வாசிச்சிருக்கன். இத நமக்கு கிஃப்ட் பண்ணது உங்களோட மயிலாடுதுறை ஃபிரண்ட்’’ என்று நண்பரிடம் சொன்னார். நானும் நண்பரும் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த ஃபோன் வந்தது. நண்பர் இந்த விபரத்தை என்னிடம் சொன்னார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. என் நினைவுகளில் நண்பரின் மகள் 10 வயது சிறுமியாகவே இருக்கிறார். பல்கலைக்கழக மாணவியாக எண்ண முடியவில்லை.
பள்ளியும் சமூகமும்
பள்ளி நடத்தும் நண்பரிடம் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது நண்பர் என்னிடம் ஒரு வினாவை எழுப்பினார். அதாவது, ‘’நீங்கள் முன்வைக்கும் விதத்தில் நடக்கும் பள்ளிகள் எவை?’’ என்று கேட்டார். எல்லா வினாக்களுக்கும் ஒரு விடை உண்டு என அறிந்தவன் நான். வினாக்களிலிருந்து விடைகளை நோக்கிச் செல்வதே அறிதல். உடனடியாக நான் சில பள்ளிகளின் பெயரையும் குறிப்பிட்டேன். அதில் ஓரிரண்டு பள்ளிகளை நேரடியாகச் சென்று காண்பது என்றும் முடிவு செய்தோம். இருப்பினும் நண்பர் கேட்ட கேள்வி என் மனதில் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. நேற்று மாலை அந்தக் கேள்விக்கான கூடுதல் பதில்கள் ஒவ்வொன்றாக எழுந்தன.
நாம் பள்ளி எனக் கூறும் போது நம் சமூகத்தில் அது ஒரு குருநிலை என்னும் அர்த்தத்திலும் புரிந்து கொள்ளப்படுகிறது. குருநிலை என்பது நம் சமூகத்தில் 5000 ஆண்டு கால தொன்மை வாய்ந்தது. இருப்பினும் நாம் இப்போது ஐரோப்பிய பாணியிலான ‘’மெக்காலே’’ பாணி கல்வியையே பயின்று கொண்டிருக்கிறோம். மெக்காலே பாணி கல்வி என்பது மாணவனுக்கு ஆங்கில மொழியையும் கணக்கு அறிவியல் அடிப்படைகளையும் கற்பிக்கும். பள்ளிக்கல்வி நிறைவு செய்தால் ஓர் அரசு வேலை நிச்சயம். இந்த முறை பல ஆண்டுகளாக - சில நூற்றாண்டுகளாக - நடப்பில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்றிய போது ஒரு விதமாக இருந்தது - 1857 ஐ ஒட்டி ஒரு விதமாக இருந்தது - முதல் உலகப் போர் சூழலில் ஒரு விதம் - இரண்டாம் உலகப் போரை ஒட்டி ஒரு விதம் - என இருந்தது. அப்போதைய உலகச் சூழல் தேச சூழல் சார்ந்து பள்ளிக்கல்வி இருந்தது. அதன் பின் நாடு சுதந்திரம் பெற்ற பின் கல்வி சமூகம் முழுமைக்கும் சென்றடைய அரசு நடவடிக்கை எடுத்தது. பள்ளியின் இடத்தை கல்லூரி பிடித்தது. முதலில் கலைப் பாடங்கள் விரும்பி படிக்கப்பட்டன. பின்னர் வணிகப் பாடங்கள். அதன் பின் அறிவியல் பாடங்கள். இப்போது தொழில்நுட்பமும் மருத்துவமும். அதாவது எல்.கே.ஜி சேர்க்கப்படும் மாணவன் அவன் என்ன பட்டம் பெற்று என்ன உத்யோகத்துக்குச் சென்று ஊதியம் பெறப் போகிறான் என்னும் எதிர்பார்ப்பே அவனது பெற்றோருக்கு இருக்கிறது. இந்த உத்யோக அம்சம் நம் சமூகத்தில் பள்ளிக் கல்வியில் இருந்து கொண்டே இருக்கும். அதனை கருத்தில் கொள்ளாமல் வேறு ஏதும் திட்டமிட முடியாது.
இந்த சூழ்நிலையில் ஒரு பள்ளி, தன்னிடம் பயிலும் மாணவனுக்கு அதிக லௌகிகத் திறன்கள் பயிற்றுவிக்கும் விதமாக தனது இயங்குமுறையை அமைத்துக் கொள்ளலாம். நம் சமூகத்தில் அதுவே சாத்தியம். உதாரணத்துக்கு, ஆரம்பப் பள்ளியில் 200 மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் அதில் 20 பேர் சைனிக் பள்ளியில் சேரும் விதமாக தயார் செய்யலாம். இதைப் போல ஒன்று ஒன்றாக சேர்த்துக் கொள்ள முடியும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் பள்ளிக்கல்விக்கும் கல்லூரிக் கல்விக்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. மாணவர்கள் தான் ஆர்வமாக இருக்கும் விஷயங்கள் குறித்து அதில் மேலும் பயில்வார்கள். நம் சமூகம் அவ்விதமான அமைப்பு குறித்து சிந்திக்க வேண்டும்.
Monday, 20 April 2026
கரைப்பார் கரைத்தால் ( ஹாஸ்யம்)
பள்ளி நடத்திக் கொண்டிருகும் நண்பரை இன்று சந்தித்தேன். சென்ற வாரம் பயணங்களில் இருந்ததால் அடிக்கடி சந்திக்க இயலவில்லை.
சந்தித்ததுமே என்னிடம் சொன்னார். ‘’நீங்கள் சொன்ன விஷயத்தை ஃபேமிலி மெம்பர்ஸிடம் சொல்லியிருக்கிறேன். எல்லாரும் அதைப் பத்தி இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்காங்க’’
வீட்டு பிளான்
எனது நண்பர் ஒருவர் வீடு கட்ட உள்ளார். நம் மாநிலத்தில் வீடு கட்ட உள்ள வீட்டு உரிமையாளர்கள் அடையும் அத்தனை உணர்ச்சிகரங்களுடன் மிகை மற்றும் பிழைப் புரிதல்களுடன் இருந்தார். அவரைத் தெளிவிப்பது எளிய செயலல்ல. இருப்பினும் வீடு கட்டுவதன் அடிப்படை விஷயங்களை அவருக்குக் கூறினேன்.
வீடு கட்டுவதை ஒரே செயல்பாட்டுக்குள் அடக்கலாம். வீட்டின் பிளான் எவ்விதமோ அவ்விதமே அந்த வீடு அமையும். எனவே வீட்டின் பிளானை உருவாக்கத் தேவையான காலம் எடுத்துக் கொண்டு அதனை இறுதி செய்ய வேண்டும். வீட்டு பிளானை வீட்டின் கட்டுமானம் தொடங்கிய பின் எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. அவ்விதம் மாற்றினால் பல விஷயங்கள் நாம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் போய் விடும்.
வீட்டைப் பயன்படுத்தப் போகும் நபர்கள் எத்தனை பேர் அவர்களின் இயல்பு என்ன என்பது வீட்டு பிளானை அமைப்பதில் கணிசமான பங்களிப்பை பெற வேண்டும்.
‘’எகானமி’’ வகை பொருகள் ஒப்பீட்டளவில் பலரால் பல காலம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகையான பொருட்கள் நெடுங்காலத்தில் நுகர்வோர் தேவைக்கான சிறு சிறு மேம்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பான செயல்பாடு கொண்டிருக்கும். ‘’லக்சுரி’’ வகைகளை விட ‘’எகானமி’’ சிறப்பானவை.
நடுத்தர வர்க்கத்தினர் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு அமைப்பை எழுப்பிக் கொள்வது நலம் பயக்கும். உயர் நடுத்தர வர்க்கத்துக்குரிய உயர் வர்க்கத்துக்குரிய வீட்டு அமைப்பை நோக்கிச் சென்றால் சில மாதங்களில் அந்த வீடுகள் புழக்கத்தில் நடுத்தர வர்க்க தன்மைக்கே வந்து சேரும்.
Sunday, 19 April 2026
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை சென்றிருந்த போது ஒரு விஷயத்தை உணர்ந்தேன். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மலையும் மலை சார்ந்த இடமுமாக இருந்ததிலிருந்து இன்று பேராலய நகரமாக இருப்பது வரை. அண்ணாமலை ஆலயம் பல்வேறு காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. விஜயநகரப் பேரரசே இப்போது இருக்கும் ஆலயத்தின் பெரும் கோபுரங்களை எழுப்பியது. இஸ்லாமியத் தாக்குதலுக்கு இந்த ஆலயம் உள்ளாகி இருளுக்குச் சென்றது. மராட்டியப் பேரரசு அதனை இருளிலிருந்து மீட்டது. அந்த நகரில் இருக்கும் போது அந்த நகர் பல்வேறு நூற்றாண்டுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது.
ஸ்ரீரங்கம் செல்லலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் இப்போது என்னுடைய பரிசீலனையில் உள்ள இன்னொரு நகரம் காஞ்சிபுரம்.
எனது நண்பர் ஒருவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது நண்பர் சொன்னார். தொல்பழம் காலத்தில் காஞ்சிபுரத்தின் பாலாறு இப்போது ஓடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் இருந்திருக்கிறது. பின்னர் நதியின் பாதை சற்று நகர்ந்து நகர்ந்து இப்போதிருக்கும் இடத்தில் இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் பாலாற்றின் மணல்சாரியான நிலம். வாழ்தலுக்கு மிக உகந்த நிலம் என்று சொன்னார்.
Friday, 17 April 2026
அறைக்கலன்
சென்னை நண்பர் மூன்று குழந்தைகள் நலனில் தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்குத் தேவையான அறைக்கலன் ஏதும் வாங்கித் தருமாறு என் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியிருந்தார். ஏகப்பட்ட உலகியல் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் நண்பர் பணித்திருந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அந்த குழந்தைகளின் ஊர் இங்கிருந்து 2 மணி நேர பயண நேரத்தில் இருக்கிறது. நண்பர் சொன்ன அறைக்கலனை இங்கிருந்து வாங்கி அங்கே எடுத்துச் செல்வது என்பதில் வண்டி வாகன வாடகையே நண்பர் அனுப்பிய தொகையில் கணிசமான பங்கை எடுத்துக் கொள்ளும். இந்த சூழ்நிலையில் ஒரு அறைக்கலன் செய்யும் தச்சரை சந்தித்தேன். அவர் இரும்புக் குழாய்களைக் கொண்டும் அறைக்கலன் செய்பவர். குழந்தைகளின் ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அவர் ஊர் இருக்கிறது என்பதை அறிந்தேன். குழந்தைகளின் ஊருக்குச் சென்று அறைக்கலனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அவ்விதமே செய்து கொடுத்தார். வேலையை முடித்ததும் நண்பர் ஒருவரிடம் சொல்லி மின்னணு பரிமாற்றம் மூலம் அவர் அலைபேசியிலிருந்து தச்சரின் கணக்குக்கு பணம் மாற்ற சொன்னேன். அவரும் அவ்விதமே செய்தார். நண்பரிடம் ரொக்கமாக தொகையை நேரில் சந்தித்து அளித்தேன். சென்னை நண்பருக்கும் பணி நிறைவு பெற்றது என்னும் தகவல் தெரிவித்தேன். அனைவருக்கும் திருப்தி.
Thursday, 16 April 2026
நிறையும் காட்சிகள்
ஒரு பயணம் நிகழ்ந்து முடிந்த பின் அடுத்து வரும் சில நாட்களில் பயணித்த போது நாம் கண்ட காட்சிகள் மேலும் துல்லியமாகி நம் அகத்தில் நிறைகின்றன. பயணத்துக்கு இணையான அனுபவம் அது.
அடுத்த பயணத்துக்குக் கிளம்ப மனம் குதூகலிக்கிறது.
Wednesday, 15 April 2026
கல்வி குறித்த யோசனைகள் - 5
வருடத்தின் எல்லா நாளும் இயங்கக்கூடிய விதத்தில் பொதுமக்களும் பயன்படுத்தக் கூடிய முறையில் ஒரு நூலகம் கல்வி நிலையத்தின் ஒரு பகுதியாக இயங்க வேண்டும்.
Tuesday, 14 April 2026
கல்வி குறித்த யோசனைகள் - 4
ஒரு கல்வி நிலையம் அனைத்து விதமான கல்வியையும் ஒரே இடத்தில் அளிக்க ஏற்பாடுகளுடன் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு கல்வியைப் பயில அல்லது தான் பயில விரும்பும் கல்வி குறித்த விபரங்களை அறிய ஒரு கல்வி நிலையத்துக்கு வந்தால் அவருக்கு அக்கல்வி அங்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது அவர் விரும்பும் கல்வி குறித்த ஆலோசனை அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
மலையேற்றமும் மலைவலமும்
மாம்பழப்பட்டு
இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் இருக்கக்கூடும். அப்போது பள்ளி மாணவனாக இருந்தேன். குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம். வீட்டுக்கு வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு சென்றார்கள். அவர்கள் சென்ற பின் திருமண அழைப்பிதழை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மணமகனின் ஊர் மாம்பழப்பட்டு என இருந்தது. இந்த ஊர் எனக்கு மிகவும் கேள்விப்பட்ட ஊராக இருந்தது. கேள்விப்பட்ட ஊர் என்பதை விட வாசிப்பின் மூலம் அறிந்த ஊர் என்று சொல்லலாம்.
அதாவது, பகவான் ஸ்ரீரமண மகரிஷி சிறுவனாயிருந்த போது அவரது ஊர் திருச்சுழியிலிருந்து திருவண்ணாமலை வருகிறார். வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பி விடுகிறார் ; பள்ளிக்கு செலுத்த தன்னிடம் அளிக்கப்பட்ட கட்டணத்தை எடுத்துக் கொண்டு செல்வதையும் அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். ரயிலில் பயணிக்கும் அவர் விழுப்புரம் ரயில் சந்திப்பை வந்தடைகிறார். அங்கிருந்து திருவண்ணாமலைக்குச் செல்ல பயணச்சீட்டு கேட்கிறார். ஆனால் அவர் கையில் இருந்த தொகையைக் கொண்டு திருவண்ணாமலைக்கு பயணச்சீட்டு அளிக்க முடியாது ; ஆதலால் விழுப்புரத்துக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் மாம்பழப்பட்டு என்னும் ரயில் நிலையத்துக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்க முடியும் எனக் கூறி அதனை அளிக்கின்றனர். ஸ்ரீரமணர் ரயிலேறி மாம்பழப்பட்டு வந்து சேர்கிறார். அங்கே அவரைக் காணும் ஒருவர் அவரிடம் அவரைக் குறித்து விசாரித்து அறிந்து திருவண்ணாமலைக்கு பயணச்சீட்டு எடுத்துக் கொடுக்கிறார். ரமணர் அண்ணாமலையை அடைகிறார். ரமணர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் குறித்து நூல்களில் வாசித்திருந்ததால் எனக்கு மாம்பழப்பட்டு என்னும் ஊர்ப்பெயர் மிகவும் பரிச்சயமானதாக இருந்தது.
சில வாரங்கள் கடந்தன ; நான் குடும்ப நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது நான் மாம்பழப்பட்டு ஊர் குறித்து வாசிப்பின் மூலம் அறிந்தது குறித்து கூறினேன். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. ‘’நாங்கள் 1000 கல்யாணப் பத்திரிக்கை கொடுத்திருக்கிறோம். அதில் நீயும் இன்னொருவரும் மட்டும் தான் மாம்பழப்பட்டு ஊர் குறித்து இந்த விபரங்களைக் கூறியிருப்பது. வேறு யாரும் அந்த ஊரைக் கேள்விப்பட்டிருக்கவில்லை.’’என்று கூறினர்.
Monday, 13 April 2026
கல்வி குறித்த யோசனைகள் - 3
பள்ளி அமைந்திருக்கும் பிராந்தியத்தின் பொருளியல் வளர்ச்சிக்கு அறிவுத்துறை சார்ந்து கல்வி பங்களிப்பாற்ற வேண்டும். விவசாயப் பயிற்சி மையம் பள்ளியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அங்கே பொதுமக்கள் விவசாயிகள் தினந்தோறும் வருகை தந்து ஏதேனும் பயிற்சி பெற வேண்டும்.
Sunday, 12 April 2026
இரு தினப் பயணம்
நீண்ட மோட்டார்சைக்கிள் பயணங்கள் மேற்கொண்ட போது ஊரிலிருந்து கிளம்புகையில் காலை 7 மணி அளவில் தான் கிளம்பியிருக்கிறேன். நீண்ட மோட்டார்சைக்கிள் பயணங்களை ஊரில் துவக்கும் போது துவக்க நாளன்று ஏதேனும் ஓர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு பயணத்தைத் துவக்குவதே எனது வழக்கம். அவ்வழக்கத்துக்கு காலை 7 மணியே உகந்தது ; அந்த நேரமே கோவில் நடை திறக்கும் நேரம். அடுத்த நாளிலிருந்து பயணம் நிறைவு பெறும் நாள் வரை காலை 6 மணி அல்லது காலை 6 மணிக்கு முன்னால் எவ்வளவு முன்னர் கிளம்ப முடியுமோ அவ்வளவு முன்னால் கிளம்புவது எனது வழக்கம். அதில் ஒரு நாள் கூட மாற்றம் இருந்ததில்லை. அது ஒரு சுய கட்டுப்பாடு ; ஒழுங்கு. அதிகாலை 5 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரிலிருந்து புறப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த காலைப் பொழுது அந்த உணர்வு நிலை அனைத்தும். 5.15, 5.30, 5.45, 5.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு விடுவேன். ஊர் விழிக்கத் துவங்க வேண்டும். எந்த ஊரிலும் கதிரவன் உதிக்கும் முன் எழுந்து நடமாடுபவர்கள் கணிசமாக இருக்கவே செய்கிறார்கள். வட இந்தியாவில் குழுவாக பெண்கள் தண்ணீர் பிடிக்க தண்ணீர் குடங்களுடன் செல்வார்கள். அவ்வாறு செல்லும் பெண்களின் காட்சி துல்லியமாக நினைவிருக்கிறது ; மகாராஷ்ட்ரா மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில நகரங்களாக இருக்கக் கூடும். ஊரின் சிற்றாலயங்களுக்கு மக்கள் அதிகாலையில் சென்று வழிபடுவதையும் கண்டிருக்கிறேன்.
இங்கே 40 , 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டுச் சென்றதுண்டு. அதில் பெரிய மாற்றம் உணரப்படாது.
நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரிலிருந்து ஒரு பயணம் புறப்படுகிறேன். ரயிலில் செல்ல உத்தேசித்திருந்தேன். பின்னர் அதனை மோட்டார்சைக்கிள் பயணமாக மாற்றிக் கொண்டேன். வாகன எரிபொருள் கலனை நிரப்பி வந்தேன். இரு சக்கரங்களிலும் காற்றின் அழுத்தத்தைப் பரிசோதித்து காற்று நிரப்பினேன். வாகனத்தை ஈரத்துணியால் துடைத்து வைத்து வாகன ஆடியின் மேல் தலைக்கவசத்தை வைத்து விட வேண்டும்.
அதிகாலை 3.30க்கு அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும். 4.30 லிருந்து 4.45 க்குள் தயாராகி விடலாம். காலை 5 மணிக்குக் கிளம்பினால் காலை 10 மணிக்குள் 200 கி.மீ பயணிக்க வேண்டும். அதன் பின் இன்னொரு 40 கி.மீ.
செவ்வாயன்று மாலையோ அல்லது புதன்கிழமை காலையோ ஊர் திரும்ப உத்தேசம்.
கல்வி குறித்த யோசனைகள் -2
’’மெக்காலே கல்வி முறை’’ என்பது பாடத்திட்டத்தில் மட்டும் இல்லை. பள்ளிகள் செயல்படும் முறையிலும் இருக்கிறது. பள்ளிகள் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை இயங்கினால் போதுமானது என்பது ‘’எழுத்தர்’’ பணிகளுக்கே உகந்தது. ஒரு மாணவனின் அக ஆற்றலை முழுமையாக வெளிக் கொணர பள்ளி உறைவிடப் பள்ளியாக இருக்க வேண்டும்.
காலை 4 மணிக்கு விழிப்பதிலிருந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை ஆசிரியர் மாணவர் ஆகியோர் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
Saturday, 11 April 2026
ஆசானும் மாணவனும் (நகைச்சுவைக் கட்டுரை)
ஆசானும் மாணவனும் மேற்கொண்ட உரையாடல் கீழே :
‘’சார் ! என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இல்ல. அதோட அடுத்த கட்டமா செல்ஃபோனே வேண்டாம்ங்கற முடிவுக்குத் தான் போவேன். இருந்தாலும் சின்ன சஞ்சலம். என் முடிவு சரிதான?’’
‘’என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இருக்கு. அதுல தான் மெயில் அனுப்புவேன். மெயிலுக்கு ரிப்ளை பண்ணுவன். பாட்டு கேப்பன். என் ஆஃபிஸ் ஃபைல்ஸ்ஸை மெயிண்டய்ன் பண்ணுவன். ஆனா அதை ஃபோன் பேச பயன்படுத்த மாட்டேன். ஃபோன் வந்தாலும் எடுக்க மாட்டன். ஒரு நாளைக்கு எனக்கு 100 ஃபோன் வரும். ஆனா எதையும் அட்டண்ட் பண்ண மாட்டேன்.’’
கல்வி குறித்த யோசனைகள் - 1
ஒரு தனியார் பள்ளி அதில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மிகச் சிறப்பான ஊதியம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 60,000 பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமாகத் தரப்பட வேண்டும்.
Friday, 10 April 2026
கல்வி குறித்த யோசனைகள்
நண்பரின் கல்வி நிலையத்தை எவ்விதம் விரிவாக்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் வரலாற்றில் கல்வி நிலையம் என்பதைத் துறவிகளே நடத்தியிருக்கிறார்கள். அரசுகள் அவற்றுக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. ஜனநாயக அரசியலில் அரசாங்கமே கல்வி நிலையங்களை நடத்துகிறது. தனியாராலும் கல்வி நிலையங்கள் நடத்த முடிகிறது. இன்று கல்வி நிலையம் நடத்துவது என்பது பெரும் முதலீடு தேவைப்படும் செயல். எனினும் அது ஓர் இலட்சியவாத செயல்பாடும் கூட.
சிறுவனாயிருந்த நாட்கள் முதலே மொழி மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். படைப்பூக்கம் கொண்ட மனநிலை கொண்டிருக்கிறேன். வணிகத்தில் ஈடுபடுகிறேன். இவையே இந்த யோசனைகள் உருவாகக் காரணம்.
Thursday, 9 April 2026
விசும்பின் துளி
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்ப அரிது என்பது திருக்குறள். ஆகாயத்தின் ஒரு துளி மண்ணில் வீழாமல் போனால் இங்கே ஒரு புல் கூட முளைக்க முடியாது என்பது அதன் பொருள். வள்ளுவர் விசும்பு என்கிறார். வானம் என மானுடர் உணர்வது அவர்கள் கட்புலனுக்குத் தென்படும் பரப்பை. விசும்பு மானுடப் பார்வைக்கும் மானுட அறிதலுக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்டம் என்பதால் அதனைக் குறிப்பிடுகிறார்.
இன்று சீர்காழியில் ஒரு இடத்தை அளக்க நண்பருடன் சென்றிருந்தேன். ஏற்கனவே உருவாகி இருக்கும் குடியிருப்பு நகருக்கான விரிவாக்கமாக ஒரு பகுதியை அமைக்கிறார்கள். மொத்த பரப்பு 2 ஏக்கர் இருக்கக் கூடும். நண்பர் தன் அதி நவீன் அளக்கும் கருவியில் இடத்தின் எல்லைகளை பதித்துக் கொண்டார். ஒரு கோலை எல்லைப் பகுதியில் நடுவதே வேலை. கோல் அளவீடுகளை உருவாக்கிக் கொள்கிறது. நடுவது கூட அல்ல தொடுவதே வேலை. தொட்டால் அளவை எடுத்துக் கொள்கிறது. நண்பர் வேலையைத் தொடக்கினார்.
அப்பரப்பில் ஒரு மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
‘’எத்தனை ஆடு உங்க கிட்ட இருக்கு அம்மா?’’
’’8 ஆடு. 2 குட்டி’’
‘’பங்குனி வெயில் காய்ச்சலா காயுதே ; இதுல என்னத்த மேயும்?’’
’’மேயற வரைக்கும் மேயட்டும். வானம் கருணை வச்சா புல் முளைக்கும்’’
இந்த 10 ஆடுகள் பசியாறக் கூட வானத்தின் கருணை வேண்டும்.
வள்ளுவன் ஏன் பேராசான் என்பது எனக்கு அக்கணத்தில் புரிந்தது.
Wednesday, 8 April 2026
எல்லைப் பயணம்
ஊரில் மதியம் 1.30 அளவில் பகல் விரைவு வண்டி இருக்கிறது. அதில் 6 மணி நேரம் பயணிக்க வேண்டும். இரவு 8 மணி அளவில் அவ்வண்டியின் கடைசி சேருமிடம் சென்றடைய முடியும். அங்கிருந்து இரவு 10 மணிக்கு ஒரு ரயிலைப் பிடிக்க வேண்டும். அந்த ரயில் 32 மணி நேரம் பயணிக்கும். இரண்டாம் நாள் காலை 7 மணி அளவில் சேருமிடம் சென்று சேரும். அங்கே 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும். மாலை 7 மணிக்கு ஒரு ரயில் புறப்படும். அந்த ரயில் 12 மணி நேரப் பயணம் செய்யும். அங்கே இருந்து ஒரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். அப்பேருந்து 30 மணி நேரம் பயணித்து ஒரு இடத்தில் சென்று சேரும். ஞாயிற்றுக்கிழமை ஊரில் கிளம்பினால் சனிக்கிழமை நான் செல்ல உத்தேசித்திருக்கும் இடத்தைச் சென்றடைய முடியும். அங்கே 3 நாட்களாவது இருக்க வேண்டும். அதன் பின் அதே விதமாக அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர வேண்டும். இந்தப் பயணம் நிகழ்ந்தால் என் வாழ்வில் மேற்கொண்ட மிகப் பெரிய பயணங்களில் ஒன்றாக இது அமையக் கூடும்.
Tuesday, 7 April 2026
காலை உணவு (ஹாஸ்யம்)
Monday, 6 April 2026
ஓய்வில் இருக்கும் நண்பர்
குடவாயிலில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இலக்கியம் இசை மற்றும் நுண்கலைகளில் தீவிரமான ஆர்வமும் ஈர்ப்பும் பயிற்சியும் மிக்கவர். கலைஞர்களுக்கே உரிய உணர்ச்சிகரமான அகம் கொண்டவர். அவரது உணர்ச்சிகர இயல்பு குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அவர் இயல்பு குறித்து புறவயமாக நோக்குமாறு அவரிடம் அவ்வப்போது மெலிதாக மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தேன். புதிய வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். வீட்டின் நிறைவுப் பணிகள் அவருடைய நேரத்தையும் மனத்தின் பெரும்பாலான பகுதியையும் எடுத்துக் கொண்டிருந்தது. வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு அளித்திருந்தார். நான் அன்று ஊரில் இல்லை ஆதலால் செல்ல முடியவில்லை. கிரகப் பிரவேசம் சிறப்பாக நடந்தது என பின்னர் அறிந்தேன். விழாவுக்கு 10 நாட்களுக்குப் பின் சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த போது சிறு சாலை விபத்து ஒன்று நண்பருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறு எலும்பு முறிவு. கட்டு போட்டிருக்கின்றனர். ஒரு மாத காலம் அதிகம் நடக்காமல் படுக்கையில் இருக்குமாறு மருத்துவ அறிவுரை. அதனை முறையாகப் பின்பற்றுகிறார். இன்று நண்பரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் நிறைவுப் பணிகள் பிரமாதமாக நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை போன்ற எழிலுடன் வீடு இருக்கிறது என அவரிடம் கூறினேன். நாள் முழுதும் நாதஸ்வர இசை கேட்டுக் கொண்டு இலக்கியம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இசையில் முழுமையாக மூழ்கியிருப்பதற்கான வாய்ப்பாக நிகழ் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன். என்னை இரண்டு நாட்கள் வந்து தங்கியிருங்கள் என்று சொன்னார். சென்று வர வேண்டும்.
Sunday, 5 April 2026
ஆனைமுகன் நீராட்டு
இன்று மாயூரநாதர் ஆலயம் சென்ற போது ஆகம பாடசாலை மாணவர்கள் 25 பேர் வேத மந்திரம் முழங்கிக் கொண்டு ஆலயத்தினுள் நுழைவதைக் கண்டேன். நான்கு வயது இருக்கும் சிறு குழந்தை சங்கீத அப்பியாசத்தைத் துவங்குவதைக் கண்டேன். அக்குழந்தையின் பெற்றோரும் ஆசிரியரும் உடனிருந்து அக்குழந்தைக்கு வழிகாட்டினர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் குடும்ப நலனுக்காக ஆனைமுகனை நீராட்டி வழிபட திரவியங்களுடன் வந்திருந்தனர். மாயூரநாதர் ஆலய ஆனைமுகன் உருவத்தில் மிகப் பெரியவர். ஏழடி உயரம் இருக்கக் கூடும். முதலில் நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் பொடி, நெய், தயிர், தேன், பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு சுடராட்டு நிகழ்ந்தது.
ஒரு குழந்தையை அன்னை நீராட்டி அலங்கரிப்பது போன்றதே தெய்வத்துக்கு மானுடர் நிகழ்த்தும் நீராட்டு.
பெருமாள் கோவிலில் உற்சவர் ஏகாதசி கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார்.
Saturday, 4 April 2026
பள்ளியும் கல்வியும்
குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை)
திட்டமிடல்கள் -2 (ஹாஸ்யம்)
Friday, 3 April 2026
ஊர் மாற்றம்
நமது மனம் பழக்கத்துக்கு உட்பட்டது. அதனை பழக்கப்படுத்த முடியும் ; ஒரு பிராணியைப் பழக்குவதைப் போல. பழகிய விஷயத்துக்கு மீண்டும் மீண்டும் உட்பட்டவாறே இருப்பது மனதின் இயல்பு. மனதுக்குப் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தினால் அதனை உடனே ஏற்காது. அதற்கு சில தடைகளை அளிக்கும். அதைத் தாண்டியும் நாம் உறுதியாக இருந்தால் புதியவற்றை மனம் ஏற்கத் துவங்கி விடும்.
நாம் முதல் நாள் இரவு ஒரு புதிய ஊருக்குச் சென்றிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். தூங்கி காலை விழிக்கிறோம். ஒரு நடை செல்கிறோம் எனில் நம் மனம் அங்கே இருக்கும் சிறு சிறு விஷயங்களையும் கவனிக்கும். பூத்து நிற்கும் மரம், சிறு செடிகள், மண்டிக் கிடக்கும் புல், வீதியில் திரியும் நாய்கள், அப்பகுதியின் கட்டிடங்கள், அதன் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் என அனைத்தையும் நம் மனம் நுட்பமாக கவனிக்கும். பார்க்கும் காட்சிகளில் மனம் லயிக்கும். நாம் வருஷக்கணக்காக வாழ்ந்த ஊரில் ஒரு புது ஊரில் ஏற்படும் லயிப்பு ஏற்படாது.
மனம் இயங்கும் விதத்தை ஒரு அளவீட்டுக்குள் கொண்டு வருவோமானால் அதற்கு 1 -10 வரை என அளவீடு அளித்தால் பல வருஷம் பழகிய ஊரில் அதன் உற்சாகம் 3 என இருக்கும் ; புதிய ஊரில் அதன் உற்சாகம் 7 என இருக்கலாம். வழமையை விட உற்சாகத்தை விரும்புபவர்கள் புதிய ஊருக்குச் செல்லலாம் என நினைப்பார்கள். பத்தாயிரத்தில் ஒருவருக்கே அவ்விதம் தோன்றும். ஏனென்றால் மனிதர்கள் பொதுவாக வழமையில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். புதிய ஒன்றை நோக்கிச் செல்ல தயங்குபவர்கள்.
நீங்கள் பல வருஷம் ஒரு ஊரில் வசித்திருக்கிறீர்கள். பின் 3 ஆண்டுகள் வேறு ஒரு ஊரில் இருந்து விட்டு அதன் பின் மீண்டும் பழைய ஊருக்கு வருகிறீர்கள் என்றால் அப்போது பழைய ஊரிலும் புதிதாக உணர வாய்ப்பு உண்டு.
Thursday, 2 April 2026
திட்டமிடல்கள் (ஹாஸ்யம்)
Wednesday, 1 April 2026
உத்தரவு கிடைத்தது
இன்று காலையிலேயே எழுந்து விட்டேன். அதிகாலை நேரத்தில் ஒரு நல்ல கனவொன்று கண்ட பின் எழுந்திருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்தேன். கலனில் நீர் நிரப்பி குடிநீர்த்தேவைக்கான ஏற்பாடுகளை செய்தேன். பின்னர் எனது உணவை சமைத்து விடுவோம் என முடிவு செய்து கேழ்வரகுக் களி கிண்டினேன். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களில் எனது உணவு தயாராகி விடும். ஒரு சிறு தட்டில் அதனை வைத்து அதன் மீது இன்னொரு சிறு தட்டை மூடி டயனிங் டேபிள் மீது கொண்டு சென்று வைத்தேன். இன்று காலை நேரத்திலேயே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என எண்ணியிருந்ததால் சிறு தூரம் மட்டுமே நடைப்பயிற்சி சென்று வந்தேன். அதன் பின் வீட்டுக்கு வந்து காலையிலேயே சில பதிவுகள் எழுதி தளத்தில் பதிவிட்டேன். நேரம் காலை 8 மணியாக இருந்தது. குளித்து விட்டு ஆலயத்துக்குச் சென்றேன்.
ஆலயம் சென்ற போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஊரின் மிகப் பெரிய கட்டுமானம் ஆலயம். இன்றும் கூட. இத்தனை பெரிய நிலமும் இத்தனை பெரிய கட்டுமானமும் இன்றும் ஊரில் ஒரே இடத்தில் இணைந்து இல்லை. ஒவ்வொரு ஆலயத்திலும் வேதம் படிக்கும் 100 மாணவர்களுக்கு மாதம் கணிசமான தொகை உதவித் தொகையாக அளித்து ஆலயத்தில் எப்போதும் வேத முழக்கம் கேட்கும் வகையில் ஏன் ஏற்பாடு செய்யப்படக் கூடாது? அதைப் போலவே திருமுறைகள், தமிழிசை, பரதம் முதலிய நுண் கலைகள் ஆகியவற்றுக்கு ஏன் ஆலயம் இடம் தரக் கூடாது? ஆலயத்துக்கு எவ்வளவோ வருமானம் இருக்கிறது. வேதக் கல்வியும் திருமுறைக் கல்வியும் நுண்கலைக் கல்வியும் ஆலயத்தின் வருமானத்தை பலவகைகளிலும் அதிகரிக்கவே செய்யும். ஆலய நிர்வாகம் என்பது அப்பிரதேசத்தின் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஆலயம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையமாகவும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.
உள எழுச்சியும் உள நெகிழ்ச்சியும் கொண்டிருந்த நிலையில் இன்று ஆலயம் சென்றிருந்தேன். நேற்று எழுதிய ‘’உத்தரவு’’ என்னும் பதிவு உருவாக்கியிருந்த மனநிலை. ஊரில் ஆலயத்தில் மஹாகணபதி சன்னிதி ஒன்று உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆனைமுகனைப் போல் இன்னொரு ஆப்த தெய்வம் இல்லை. ஆற்றல் கொண்டிருப்பவனும் குழந்தையாயிருப்பவனும். அவன் முன் சென்று நின்றேன். அவனிடம் என் துயரங்களைத் தெரிவிக்க நினைத்தேன். கடவுள் மிகப் பெரியவன். அவனிடம் என் லௌகிகத் துயரங்களைக் கூற வேண்டுமா என ஓர் எண்ணம். என் துயரங்களைச் சொல்ல என் வலிகளைச் சொல்ல என் வேதனைகளைச் சொல்ல அவனன்றி வேறு துணை இல்லை. சொல்வதை முழுதாகக் கேட்டுக் கொள்ளக் கூட அவனன்றி வேறு உறவு இல்லை. எதுவும் சொல்லாமல் தான் அவன் முன் நின்றிருந்தேன். அபயாம்பிகையை தரிசனம் செய்தேன். நான் சென்ற போது மயூரநாதருக்கு சுடராட்டு நிகழ்ந்தது. ‘’திருச்சிற்றம்பலம்’’ ‘’திருச்சிற்றம்பலம்’’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் இருப்பது மாயூரத்தில் ; திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரம். மாயூரத்தில் ஏன் சிதம்பரத்தைச் சொல்கிறோம் என நினைத்தேன். தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். திருமுறைகள் ஓதத் துவங்கும் போதும் நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். சிவ பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். எனவே எந்த ஊரிலும் திருச்சிற்றம்பலம் சொல்லலாம் என எண்ணினேன். ஆடலரசன் நடராஜன் ஆடுவது காஸ்மிக் நடனம். எனவே நடராஜன் சபையில் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அடக்கம். எனவே திருச்சிற்றம்பலம் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் குறிக்கும் மந்திரம் என எண்ணினேன்.
கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு பெண் கூடையில் வில்வ இலைகளையும் நாலலிங்கப் பூவையும் வைத்திருப்பதைக் கண்டேன். கர்நாடகாவில் சிவாலயங்கள் அனைத்திலும் வில்வ இலைகளும் வில்வ இலை மாலைகளும் பெருமளவில் விற்பனை ஆகும்.
மாயூரநாதர் கோவிலிலிருந்து திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்றேன். பெருமாள் கோயிலுக்கு மாலை செல்லலாமா என ஒரு கணம் எண்ணினேன். பெருமாள் தரிசனத்தை மாலை வரை தள்ளி வைக்க வேண்டாம் என முடிவெடுத்துப் புறப்பட்டேன்.
திருஇந்தளூர் கீழவீதி அருகே வந்த போது பரிமள ரங்கன் பக்தர்கள் வடம் இழுக்க தேர் பவனி வருவதைக் கண்டேன். இறைவன் எனக்கான உத்தரவை அளித்து விட்டான் என்பதை உணர்ந்த போது உளம் நெகிழ்ந்தது. பரமாத்மா ஜீவன்களுடன் ஆடுவது ஆடல் ; விளையாடல். தேரில் இறைவனைக் கண்ட கணம் அவனை என் குழந்தையாக எண்ணினேன். என் கடவுள் எனக்கு அனுமதி அளித்து விட்டான். புதிய நிலம் காண புதிய காட்சிகளைக் காண புறப்பட்டுச் செல் என்பதே அவன் எனக்கு அளித்திருக்கும் உத்தரவு. மூலவர் யோக நித்திரையில் சயனித்திருக்கிறார். உற்சவர் ஊர் உலகம் கண்டு வருகிறார். எனக்கு இன்று காட்சி கொடுத்தது உற்சவர்.
இறைவா ! உன் லோகங்களில் கோடானுகோடி ஜீவன்கள். அந்தக் கோடானுகோடி ஜீவன்களில் ஓர் எளிய ஜீவன் அடியேன். உன் திருவுளம் அடியேனையும் கருதுகிறதா ? உன் கருணை பெரியது இறைவனே. உன் கருணையால் தான் ஜீவன்கள் ஜீவித்திருக்கிறோம். அதனை நாங்கள் எப்போதும் உணர்ந்திருப்பதில்லை இறைவனே ! எப்போதாவது உணர்கிறோம். இறைவா உன் கருணை எங்கள் மீது எப்போதும் இருக்கட்டும்.
இறைவன் ஒரு குழந்தை
புதிய நிதி ஆண்டு
புதிய நிதி ஆண்டு பிறக்கிறது. வணிகர்களுக்கு நிதி ஆண்டு முக்கியமானது. நிதி ஆண்டு நிதி குறித்ததாகவே இருப்பதால் தொழில் தொடர்பான விஷயங்கள் முடிவுகள் முக்கியமானதாக ஆகிறது. 2025-2026 நிதி ஆண்டின் சிறப்பு அம்சம் என்பது எனது தொழிலில் ரியல் எஸ்டேட்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தது. கட்டுமானம் மனை வணிகம் இரண்டுமே இணையாக செய்யும் வகையில் இருந்திருந்தாலும் தற்போது ரியல் எஸ்டேட்க்கு அளிக்கும் நேரம் அதிகமாகி உள்ளது. கட்டுமானத்தில் தினந்தோறும் நாம் செய்யும் பணி நம் கண் முன்னால் வளர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். ஒரு வீடு கட்டுமானம் நடக்கிறது எனில் முதலில் இரண்டரை அடி உயரத்துக்கு சுவர் எழும்பும். அடுத்த நாள் மேலும் இரண்டரை அடி. மூன்றாம் நாள் இன்னும் இரண்டு அடி. அதன் பின் ‘’பீம்’’ அமைக்கும் பணி. பணி முன்னேற்றத்தைக் கண்ணால் காண முடியும். ரியல் எஸ்டேட்டில் நாம் செய்யும் பணி முன்னேற்றம் அடைகிறதா என்பதைக் கண்ணால் கண்டு அறிய முடியாது. சென்ற நிதி ஆண்டில் இரு ரியல் எஸ்டேட் பணிகளுக்கு தீவிரமான உழைப்பைச் செலுத்தியிருந்தேன். அதற்கான பலன் இந்த நிதி ஆண்டின் துவக்கத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வானத்தை நோக்கித் தொழுது புதிய நிதி ஆண்டில் நுழைகிறார்கள் நாட்டின் வணிகர்கள்.
அதிகாலைக் கனவு
இன்று அதிகாலை ஒரு கனவு கண்டேன். எவ்விதம் அது அதிகாலைக் கனவு என்று கூறுகிறேன் என்றால் கனவு கண்டவுடன் விழித்து விட்டேன். அப்போது நேரம் 4.45. கனவு என்னவெனில், சென்னை ஐ ஐ டி அல்லது சென்னை எஸ்.ஈ.ஆர்.சி போன்ற ஓர் உயர்கல்வி நிறுவனம். அங்கே எம்.ஈ அல்லது எம்.டெக் போன்ற மேல்படிப்புக்குத் தேர்வான மாணவர்கள் அங்கே இருக்கும் ஓர் ஆய்வகத்துக்குச் செல்கிறோம். நாங்கள் 25 பேர் இருப்போம். எங்கள் வகுப்புகளின் முதல் நாள் அன்று. அலுவலகத்தில் சேர்க்கை தொடர்பான பணிகளை முடித்து விட்டு அவர்கள் அளித்த குறிப்புகளின் படி ஆய்வகத்துக்கு வருகிறோம். அங்கே இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிறைய பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அலுவலகத்தில் எங்களை யாரைச் சென்று பார்க்கச் சொன்னார்களோ அவரைச் சென்று பார்க்கிறோம். அப்போது அங்கிருக்கும் ஆய்வகம் எங்களுக்கு ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. அதன் செயல்பாடுகளை கவனிக்கிறோம். அந்தப் பேராசிரியர் எங்களில் ஒருவரின் ஃபுல் சைஸ் நோட்டை வாங்கி அதில் ஒரு கணக்கை எழுதுகிறார். அது கணிதத்தில் ’’மேட்ரிக்ஸ்’’ என்னும் பாடத்தில் கேட்கப்படும் வினா. நாங்கள் அந்த வினா என்ன என்று பார்க்கிறோம். அந்த நோட்டை வாங்கி அக்கணக்குக்கான தீர்வை ஏழெட்டு படிகளில் கொண்டு வந்து நான் எழுதுகிறேன். அதனை அவரிடம் காட்டுகிறோம். ‘’சரியான விடை’’ என்று கூறுகிறார்.