நீண்ட மோட்டார்சைக்கிள் பயணங்கள் மேற்கொண்ட போது ஊரிலிருந்து கிளம்புகையில் காலை 7 மணி அளவில் தான் கிளம்பியிருக்கிறேன். நீண்ட மோட்டார்சைக்கிள் பயணங்களை ஊரில் துவக்கும் போது துவக்க நாளன்று ஏதேனும் ஓர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு பயணத்தைத் துவக்குவதே எனது வழக்கம். அவ்வழக்கத்துக்கு காலை 7 மணியே உகந்தது ; அந்த நேரமே கோவில் நடை திறக்கும் நேரம். அடுத்த நாளிலிருந்து பயணம் நிறைவு பெறும் நாள் வரை காலை 6 மணி அல்லது காலை 6 மணிக்கு முன்னால் எவ்வளவு முன்னர் கிளம்ப முடியுமோ அவ்வளவு முன்னால் கிளம்புவது எனது வழக்கம். அதில் ஒரு நாள் கூட மாற்றம் இருந்ததில்லை. அது ஒரு சுய கட்டுப்பாடு ; ஒழுங்கு. அதிகாலை 5 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரிலிருந்து புறப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த காலைப் பொழுது அந்த உணர்வு நிலை அனைத்தும். 5.15, 5.30, 5.45, 5.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு விடுவேன். ஊர் விழிக்கத் துவங்க வேண்டும். எந்த ஊரிலும் கதிரவன் உதிக்கும் முன் எழுந்து நடமாடுபவர்கள் கணிசமாக இருக்கவே செய்கிறார்கள். வட இந்தியாவில் குழுவாக பெண்கள் தண்ணீர் பிடிக்க தண்ணீர் குடங்களுடன் செல்வார்கள். அவ்வாறு செல்லும் பெண்களின் காட்சி துல்லியமாக நினைவிருக்கிறது ; மகாராஷ்ட்ரா மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில நகரங்களாக இருக்கக் கூடும். ஊரின் சிற்றாலயங்களுக்கு மக்கள் அதிகாலையில் சென்று வழிபடுவதையும் கண்டிருக்கிறேன்.
இங்கே 40 , 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டுச் சென்றதுண்டு. அதில் பெரிய மாற்றம் உணரப்படாது.
நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரிலிருந்து ஒரு பயணம் புறப்படுகிறேன். ரயிலில் செல்ல உத்தேசித்திருந்தேன். பின்னர் அதனை மோட்டார்சைக்கிள் பயணமாக மாற்றிக் கொண்டேன். வாகன எரிபொருள் கலனை நிரப்பி வந்தேன். இரு சக்கரங்களிலும் காற்றின் அழுத்தத்தைப் பரிசோதித்து காற்று நிரப்பினேன். வாகனத்தை ஈரத்துணியால் துடைத்து வைத்து வாகன ஆடியின் மேல் தலைக்கவசத்தை வைத்து விட வேண்டும்.
அதிகாலை 3.30க்கு அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும். 4.30 லிருந்து 4.45 க்குள் தயாராகி விடலாம். காலை 5 மணிக்குக் கிளம்பினால் காலை 10 மணிக்குள் 200 கி.மீ பயணிக்க வேண்டும். அதன் பின் இன்னொரு 40 கி.மீ.
செவ்வாயன்று மாலையோ அல்லது புதன்கிழமை காலையோ ஊர் திரும்ப உத்தேசம்.