எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக பெரும் படிப்பாளிகள். நாட்டின் மிக உயர்ந்த படிப்புகளில் ஒன்றை மூன்று தலைமுறையினரும் படித்திருக்கிறார்கள். ஒருமுறை நண்பரைக் காணச் சென்ற போது அவருக்கு சட்ட மேதை ஃபாலி நாரிமன் எழுதிய ’’Before memory fades'' என்ற நூலை பரிசாக அளித்தேன். அந்த நூல் வீட்டின் நூல் நிலைய அடுக்கில் இருந்திருக்கிறது. நண்பரின் மகள் அந்த நூலை அடிக்கடி எடுத்துப் பார்த்திருக்கிறார். நேற்று நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது பல்கலைக்கழகத்தில் பயிலும் நண்பரின் மகள் நண்பருக்கு ஃபோன் செய்தார். அவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு குவிஸ் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். அந்த விபரத்தைத் தெரிவித்ததுடன் இன்னொரு விபரமும் தனது தந்தையிடம் கூறினார். அதாவது, அந்த குவிஸில் ஒரு புகைப்படத்தைக் காட்டி இது யார் எனக் கேட்டிருக்கிறார்கள். நண்பரின் மகள் ‘’ஃபாலி நாரிமன்’’ என சரியாக பதில் கூறியிருக்கிறார். இதனைக் கூறி ‘’ இந்த புத்தகத்தை நம்ம வீட்டு லைப்ரரில நாம் அடிக்கடி பாத்திருக்கன். வீட்ல இருக்கும் போது அந்த புத்தகத்தையும் யுனிவர்சிட்டி வரும் போது அதோட கிண்டில் எடிஷனையும் வாசிச்சிருக்கன். இத நமக்கு கிஃப்ட் பண்ணது உங்களோட மயிலாடுதுறை ஃபிரண்ட்’’ என்று நண்பரிடம் சொன்னார். நானும் நண்பரும் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த ஃபோன் வந்தது. நண்பர் இந்த விபரத்தை என்னிடம் சொன்னார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. என் நினைவுகளில் நண்பரின் மகள் 10 வயது சிறுமியாகவே இருக்கிறார். பல்கலைக்கழக மாணவியாக எண்ண முடியவில்லை.