Tuesday, 21 April 2026

பள்ளியும் சமூகமும்

பள்ளி நடத்தும் நண்பரிடம் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது நண்பர் என்னிடம் ஒரு வினாவை எழுப்பினார். அதாவது, ‘’நீங்கள் முன்வைக்கும் விதத்தில் நடக்கும் பள்ளிகள் எவை?’’ என்று கேட்டார். எல்லா வினாக்களுக்கும் ஒரு விடை உண்டு என அறிந்தவன் நான். வினாக்களிலிருந்து விடைகளை நோக்கிச் செல்வதே அறிதல். உடனடியாக நான் சில பள்ளிகளின் பெயரையும் குறிப்பிட்டேன். அதில் ஓரிரண்டு பள்ளிகளை நேரடியாகச் சென்று காண்பது என்றும் முடிவு செய்தோம்.  இருப்பினும் நண்பர் கேட்ட கேள்வி என் மனதில் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. நேற்று மாலை அந்தக் கேள்விக்கான கூடுதல் பதில்கள் ஒவ்வொன்றாக எழுந்தன. 

நாம் பள்ளி எனக் கூறும் போது நம் சமூகத்தில் அது ஒரு குருநிலை என்னும் அர்த்தத்திலும் புரிந்து கொள்ளப்படுகிறது. குருநிலை என்பது நம் சமூகத்தில் 5000 ஆண்டு கால தொன்மை வாய்ந்தது. இருப்பினும் நாம் இப்போது ஐரோப்பிய பாணியிலான ‘’மெக்காலே’’ பாணி கல்வியையே பயின்று கொண்டிருக்கிறோம். மெக்காலே பாணி கல்வி என்பது மாணவனுக்கு ஆங்கில மொழியையும் கணக்கு அறிவியல் அடிப்படைகளையும் கற்பிக்கும். பள்ளிக்கல்வி நிறைவு செய்தால் ஓர் அரசு வேலை நிச்சயம். இந்த முறை பல ஆண்டுகளாக - சில நூற்றாண்டுகளாக - நடப்பில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்றிய போது ஒரு விதமாக இருந்தது - 1857 ஐ ஒட்டி ஒரு விதமாக இருந்தது - முதல் உலகப் போர் சூழலில் ஒரு விதம் - இரண்டாம் உலகப் போரை ஒட்டி ஒரு விதம் - என இருந்தது. அப்போதைய உலகச் சூழல் தேச சூழல் சார்ந்து பள்ளிக்கல்வி இருந்தது. அதன் பின் நாடு சுதந்திரம் பெற்ற பின் கல்வி சமூகம் முழுமைக்கும் சென்றடைய அரசு நடவடிக்கை எடுத்தது. பள்ளியின் இடத்தை கல்லூரி பிடித்தது. முதலில் கலைப் பாடங்கள் விரும்பி படிக்கப்பட்டன. பின்னர் வணிகப் பாடங்கள். அதன் பின் அறிவியல் பாடங்கள். இப்போது தொழில்நுட்பமும் மருத்துவமும். அதாவது எல்.கே.ஜி சேர்க்கப்படும் மாணவன் அவன் என்ன பட்டம் பெற்று என்ன உத்யோகத்துக்குச் சென்று ஊதியம் பெறப் போகிறான் என்னும் எதிர்பார்ப்பே அவனது பெற்றோருக்கு இருக்கிறது. இந்த உத்யோக அம்சம் நம் சமூகத்தில் பள்ளிக் கல்வியில் இருந்து கொண்டே இருக்கும். அதனை கருத்தில் கொள்ளாமல் வேறு ஏதும் திட்டமிட முடியாது. 

இந்த சூழ்நிலையில் ஒரு பள்ளி, தன்னிடம் பயிலும் மாணவனுக்கு அதிக லௌகிகத் திறன்கள் பயிற்றுவிக்கும் விதமாக  தனது இயங்குமுறையை அமைத்துக் கொள்ளலாம். நம் சமூகத்தில் அதுவே சாத்தியம். உதாரணத்துக்கு, ஆரம்பப் பள்ளியில் 200 மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் அதில் 20 பேர் சைனிக் பள்ளியில் சேரும் விதமாக தயார் செய்யலாம். இதைப் போல ஒன்று ஒன்றாக சேர்த்துக் கொள்ள முடியும். 

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் பள்ளிக்கல்விக்கும் கல்லூரிக் கல்விக்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. மாணவர்கள் தான் ஆர்வமாக இருக்கும் விஷயங்கள் குறித்து அதில் மேலும் பயில்வார்கள். நம் சமூகம் அவ்விதமான அமைப்பு குறித்து சிந்திக்க வேண்டும்.