Friday 24 May 2024

காட்டுக்கேது தோட்டக்காரன் ?

இசை மொழி  ) நண்பர் (அனுபல்லவி சரணம்) வீட்டுக்கு வந்திருந்தார். 

’’தெய்வம் தந்த வீடு’’ என்ற கண்ணதாசன் பாடலை மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அனேகமாக முதல் நாள் இரவு காரைக்கால் வானொலியில் கேட்டிருப்பார். 

அமைப்பாளர் அவரிடம் கீழ்க்கண்ட நான்கு வரிகளை கவனித்தீர்களா என்றார். 

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம் ? 
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல்வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி
காட்டுக்கென்ன தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

இசைமொழி நண்பர் நன்றாகத் தெரிந்த வரிகள் தானே என எண்ணினார். 

அமைப்பாளர் பேசத் தொடங்கினார். ‘’ கவிஞர் வெறும் கோயில்னு சொல்றதை முழுமையா புரிஞ்சுக்கணும்னா கோலாகலமாக பூஜையும் பிராத்தனையும் நடக்கற கோயில் நம்ம நினைவுக்கு வந்து அதுக்கப்பறம் வெறும் கோயில் நம்ம ஞாபகத்துக்கு வரணும் . கோலாகலமான கோயில் என்னும் இமேஜ் வெறும் கோயில் என்னும் வார்த்தையோட நிழலா அந்த வார்த்தைல அமர்ந்திருக்கு. ஒரு காலத்துல ஐந்து கால பூஜையும் நடந்த கோயில் தான் வேறொரு காலத்துல வெறும் கோயிலா ஆகுது. ஹம்பியை நேர்ல பாத்தவங்களுக்கு அந்த விஷயம் தெரியும். ஸ்வாமியே இல்லாத கோயில். அதிலென்ன அபிஷேகம். உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல்வேஷம் வரில ஒரு சுவாரசியமான அம்சம் இருக்கு. தெருக்கூத்து பாக்க மக்கள் திரண்டு போவாங்க. திருவிழாவோட ஒரு அம்சமா தெருக்கூத்து நடக்கும். எல்லாரும் திரண்டு போய் பாப்பாங்க. தெருக்கூத்து தெருவில நடக்கும். புராண கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் சாமானியர்களோட தெருவுக்கு வந்து கூத்துல வாழ்வாங்க. மேடை இல்லாம தெருவுல நடக்குறது தெருக்கூத்து. பொதுமக்களால திரண்டு போய் பார்க்கப்படுறது. பகல்வேஷம் என்னும் கலை எப்படின்னா புராண கதாபாத்திரங்களா வேஷம் போட்டுட்டு சாமானிய மக்களோட வீடுகளுக்கு முன்னால போய் ஒவ்வொரு வீட்டு முன்னாலயும் புராணத்துல இருந்தும் இதிகாசத்துல இருந்தும் சில பாடலை பாடிட்டு அந்த வீட்டுல இருக்கறவங்கள ஆசிர்வதிப்பாங்க. கவிஞர் தெருக்கூத்து பகல்வேஷம் இரண்டையும் அடுத்தடுத்து வைக்கறதுல ஒரு கிரியேட்டிவ் ஆர்டர் இருக்கு. கள்ளிக்கென்ன முள்ளில் வேலி ? கள்ளி பக்கத்துல போனால கையை உடம்பை கூர் முள்ளால கிழிக்கும். அது வளர வேலி தேவையில்லை. தோட்டம் சீராக பராமரிக்கப்படுவது. காடு தன்னியல்பில் தானாக வளர்வது.  தோட்டத்தையும் காட்டையும் கவிஞர் ஈக்குவேட் செஞ்சு காட்டறார். உள்ளதை உள்ளபடி சொல்லும் யதார்த்தமே என் கட்சி என கவிதை செல்கிறது ‘’ என்றார். 

இத்தனை விஷயங்கள் இந்த நான்கு வரிகளிலேயே இருக்கிறதா என எண்ணத் தொடங்கினார் இசைமொழி நண்பர்.