Monday, 23 March 2026

கிராமமும் தேசமும்

பாரத நிலம் பலவிதங்களிலும் தனித்துவமானது. அனாதி காலமாக பாரத நிலமெங்கும் மானுடர் சேர்ந்து வாழ்கின்றனர். நிலத்தை தெய்வமென நினைக்கும் தன்மை பாரத நாட்டுக்குரிய தனி இயல்பு ஆகும். நதியை கடலை நீர்நிலைகளை இறைமையாகக் காணும் தன்மை இந்த நாட்டுக்கு எப்போதும் இருந்திருக்கிறது.  

இன்றும் ஒவ்வொரு 50 கி.மீ தூரத்திலும் இன்றும் ஒவ்வொரு 100 கி.மீ தூரத்திலும் மக்களின் வாழ்க்கைமுறை சிறு சிறு மாற்றம் கொண்டு இருப்பதை நான் அறிய முடியும் ; உணர முடியும். இன்றும் சாமானிய இந்தியன் விவசாயியே. இன்றும் கிராமமே நாட்டின் அடிப்படை அலகு ஆகும். 

நாட்டின் ஒவ்வொரு கிராமமும் நாட்டில் இருந்த மன்னர்களை பேரரசர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்திருக்கின்றன என்பதை நாட்டின் வரலாற்றை நோக்குபவர்களால் அறிய முடியும். ஏனென்றால் நம் நாட்டின் உற்பத்தி என்பது விவசாய உற்பத்தியே. இன்றும் விவசாயம் கிராமத்து விவசாயிகளால் ஏறக்குறைய சேர்ந்தே செய்யப்படுகிறது. நாட்டின் உலகின் பொருளாதாரத்தை ஆய்வு செய்பவர்கள் பாரதத்தின் இத்தகைய தன்மையை சேர்த்து பொருளியலை அரசியலைக் கவனிப்பதில்லை ; அவ்விதம் கவனிப்பதற்கான பயிற்சி அவர்களுக்கு இல்லை. 

ஒரு கிராமவாசி ஒட்டு மொத்த கிராமத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனே. அவன் தொழில்முறையிலும் வாழ்முறையிலும் ‘’தனியன்’’ இல்லை. ஒரு பெரும் கூட்டு வாழ்க்கையின் நுண் அலகே அவன். உலகில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவது என்பது மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய நாளிலிருந்து இருக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சுரண்டல் குறைந்த அளவு இருப்பது நம் நாட்டில் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். உலகின் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக அனாதி காலமாக இருப்பினும் அன்றும் இன்றும் ஒப்பீட்டளவில் நம் நாட்டில் சுரண்டல் குறைவு என்பது பொருளியலிலும் அரசியலிலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள். ஆய்வு செய்து மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.