Tuesday, 24 March 2026

வாணி வாழ்த்து


நூல் : சரஸ்துதி (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கா.சிவா பக்கம் : 122 விலை:ரூ.230 பதிப்பகம் : வாசகசாலை பதிப்பகம், சென்னை-92. பதிப்பக மின்னஞ்சல் : vasagasalaipublication (at) gmail (dot) com  

***

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதல் வேறு
-திருக்குறள்

ஞாயிறு மாலைகளில் பூம்புகாரோ தரங்கம்பாடியோ செல்வது எனது வழக்கம். இளைஞனாயிருந்த போது நூல் பிடித்தாற் போல இருந்த வழக்கம், இப்போது குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு ஒருமுறை என்ற அளவிலேனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அலைகளும் வானமும் மேகமும் நிறைந்திருக்கும் அந்த வெளியை அகத்தில் நிறைத்துக் கொண்டால்தான் அடுத்த ஏழு நாட்களும் இனிதே இருக்கும் என்பது எனது நம்பிக்கை. ஞாயிறன்று காலை ஓஷோவின் ''Glimpses of a golden childhood'' என்ற நூலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஓஷோ கேட்கிறார். ‘’ உலகின் 10 சிறந்த நாவல்களை எவர் பட்டியலிட்டாலும் அதில் 5 நாவல்கள் ருஷ்ய நாவல்களாக இருக்கும். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ் ... சோவியத் யூனியன் அரசாங்கம் வந்தது. சோவியத் அரசு கலைஞனை எழுத்தாளனை போஷித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் பெரும் படைப்புகள் எவையும் வரவில்லையே. ஏன்?’’ ஓஷோ மேலே சொல்லிக் கொண்டு சென்றார். ‘’சில விஷயங்கள் இயல்பாக நடக்க வேண்டும். மலர்கள் மலர்வது. பனி பொழிவது. மலர்களை வரி அமைப்புக்குள் கொண்டு வந்தால் அவை மலராது. பனிப் பொழிவும் அப்படித்தான்.’’ சிந்திக்கும் மனம் கொண்டவர்களுக்கு ஓஷோவின் அவதானங்கள் சிறு விதைகள். அவற்றை மனதுக்குள் அமிழ்த்து வைத்தால் செடிகளாக வளர்ந்து பூக்கத் தொடங்கி விடும், நூற்றுக்கணக்காக. அன்று முழுக்க பெரும் படைப்பாளிகள் ஏன் சோவியத் ஆட்சிக்குப் பின் உருவாகவில்லை என்னும் கேள்வியை மனம் கேட்டுக் கொண்டேயிருந்தது. 

மாலை திருவாரூரிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவருடன் பூம்புகார் சென்றேன். நண்பர் என்னிடம் ‘’என்னால் எந்த சடங்கிலும் மனதை இணைத்துக் கொள்ள முடியவில்லை.’’ என்றார். ‘’இது ஆழமா கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். நாம இப்படித்தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருப்போம். ஆனா முழுக்க அப்படி இருக்க மாட்டோம். அந்த இடைவெளில நிறைய முக்கியமான பிரதானமான நமக்கு நம்ம பர்சனாலிட்டிக்கு ரொம்ப நெருக்கமான நமக்கு நிறைய பயன் தரக்கூடிய விஷயங்கள் இருக்கும். அத மிஸ் பண்ணிடக் கூடாது. அப்படி மிஸ் பண்றது நமக்கு இழப்பு’’ நண்பர் அமைதியாக இருந்தார். நான் தொடர்ந்து சொன்னேன் . ‘’தமிழ் சொஸைட்டில மரபான விஷயங்கள் மேல ஒரு ரெசிஸ்டென்ஸ் உருவாக்கிட்டாங்க. 90 பர்செண்ட் பியூபிள் மனசுல அந்த விஷயம் இருக்கு. அவங்க அத முழுசா தெரிஞ்சுக்கவும் இல்ல. கம்யூனிஸ்ட் உருவாக்குன ரெஸிஸ்டன்ஸ் அது. அதோட எஃபெக்ட் இப்பவும் இருக்கு’’. தான் எந்த சடங்கிலும் மனம் இணையாமல் இருப்பதற்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது நண்பருக்குத் தெரியவில்லை. ‘’முதல்ல சடங்குன்னு நீங்க எதை மீன் பண்றீங்க. அத வெளிப்படையா சொல்லுங்க’’. ‘’சாமி கும்பிடுறது’’. ‘’உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா ? நீங்க உங்களை நாத்திகர்னு உணர்றீங்களா?’’ ‘’நான் கடவுளை நம்பல. ஆனா ஒரு சக்தி இருக்குன்னு நம்பறன்’’. ‘’உங்க நம்பிக்கைக்கு யார் குறுக்க வந்தா? எல்லாரும் கும்பிடற மாதிரிதான் நீங்க கும்பிடணும்னு யார் சொன்னா? நீங்க நம்புற சக்தியை உங்களுக்கு உகந்த விதத்துல அணுகக் கூடாதுன்னு யாராவது ஏதாவது செஞ்சாங்களா?’’. நண்பர் அமைதியாக இருந்தார். இவ்விதமான எதிர்கொள்ளலை இப்போதுதான் சந்தித்திருப்பார். ‘’ ஆயிரம் வருஷம் ரெண்டாயிரம் வருஷம் முன்னால யாராவது எதையாவது எழுதியிருப்பாங்க. அதையே ஏன் இப்பவும் பெருசுன்னு நினைக்கனும். அதெல்லாம் ஒருத்தன் கற்பனையா எழுதனது. கற்பனைல இல்லாத விஷயத்தைக் கூட எழுத முடியும்.கவிஞர்கள் கவிதை எல்லாமே இல்லாதத எழுதறது தான்.  அத ஏன் நாம பெருசுன்னு நினைக்கனும். நம்ம அனுபவத்துல எது இருக்கோ நமக்கு எது பெருசோ நமக்கு எது முக்கியமானதோ அதான் அவசியம். மத்ததெல்லாம் தேவையில்லை’’. நண்பர் பட பட வென பேசி விட்டார். 

‘’நண்பரே ! எனக்கு உங்க உணர்வு புரியுது. உங்க கேள்வியும் புரியுது. உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க மனசுல இருக்கற கேள்விக்கான பதிலை நீங்க தேடிக் கண்டுபிடிச்சுட்டீங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா நிச்சயமாக உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க கேள்விக்கான பதில்னு எனக்கு தெரியறத சொல்றன். அது உங்களுக்கு உபயோகப்படலாம் ; உபயோகப்பட்டா பயன்படுத்திக்கீங்க. இல்லன்னா விட்டிருங்க. நீங்களே தேடி கண்டுபிடிங்க.’’

‘’சடங்கு, கடவுள், கவிதைன்னு அடுத்தடுத்து நிறைய பெரிய விஷயம் உள்ள வந்துட்டோம். நான் எங்கயோ ஒரு இடத்துல இருந்து ஆரம்பிச்சுக்கறன். நாம இப்ப கடலுக்கு போயிட்டு இருக்கோம். நம்ம மரபுல கடலுக்கும் நதிக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால நதியிலிருந்து ஆரம்பிக்கறன். நம்ம நாட்டுல ஒருத்தன் காலைல எழுந்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி ந்ர்மதை சிந்து காவேரி கோதாவரி’’ன்னு ஏழு நதிகளோட பேரையும் சொல்லணும்னு ஒரு வழக்கம் இருக்கு. இன்னைக்கும் நம்ம நாட்டுல அப்படி சொல்றவங்க இருக்காங்க. லட்சம் பேர் இருக்கலாம். ஆயிரம் பேர் இருக்கலாம். நூறு பேர் இருக்கலாம். 140 கோடி ஜனங்கள்ல ஆயிரம் பேர் சொல்றாங்கன்னே வச்சுக்கங்க. நம்பர்ல டிபேட் பண்ண வேண்டாம். அப்படி நதிகளோட பேரை சொல்றது ஒரு நம்பிக்கை. அத ஒரு சடங்குன்னு வேணாலும் உங்க தியரிபடி வச்சுக்கங்க. ஆனா இந்த வழக்கம் நம்பிக்கை சடங்கு குறைஞ்சது 4000 வருஷமா இருக்கு. 4000 வருஷம் முன்னாடி இந்த 7 நதியையும் ஒரு தடவை நேரா பாத்தவங்க குறைவா இருந்திருக்கலாம். இன்னைக்கு கூட இந்த 7 நதிகளையும் நேரா பாத்தவங்க எண்ணிக்கை நம்ம மக்கள்தொகையோட ஒப்பிட்டா குறைவா தான் இருக்கும். ஆனா ஒருத்தன் காலைல எழுந்ததும் பலபேருக்கு வாழ்க்கையைக் கொடுக்கற இந்த ஏழு நதிகளோட பேர சொல்ரான்னா அது ரொம்ப மகத்தான விஷயம்னு தான் நான் நினைப்பேன். அதே போல ஏழு நகரங்கள் புண்ணிய நகரங்கள். ‘’அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’. நம்ம மரபு மண்ணை நதியை வானத்தை மேகத்தை பூமியை காத்தை நெருப்பை தெய்வமா பாக்கற மரபு. நம்ம மரபோட பார்வையை நாம விரிவுபடுத்தி பாக்கலாம். அதுக்கான முழு சுதந்திரம் நமக்கு இருக்கு. ஆனா மரபுக்கு அன்னியப்பட்டு போகக் கூடாது.’’ 

பேசிக் கொண்டே வந்ததில் சாயாவனத்தைத் தாண்டி விட்டோம்.அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘’திருவாரூருக்கும் பூம்புகாருக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அது என்னன்னு தெரியுமா?’’. நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

‘’அதாவது, பாண்டியனோட அவையில கண்ண்கி வந்திருக்கறத வாயிற்காவலன் சென்று சொல்கிறான். வந்திருப்பவள் ‘’வெற்றிவேற் தடக்கை கொற்றவை அல்லள்;. அதாவது வந்திருக்கறது பத்ரகாளி இல்லன்னு சொல்றான். அவளைப் பத்தி சொல்லும் போது அவனுக்கு ஏன் பத்ரகாளி ஞாபகம் வந்ததுன்னு நாம யோசிச்சுக்கணும். அவைக்குள்ள கண்ணகி சென்றதும் பாண்டியன் யார்ன்னு கேக்கறான். அதுக்கு கண்ணகி சொன்ன பதிலா இளங்கோ எழுதறார். மன்னனைப் பாத்து ‘’தேரா மன்னா’’ அப்படிங்கறா. தேர்வு தேர்தல் எல்லாத்துக்கும் மூல வார்த்தை அது. அலசி ஆராயும் திறன் இல்லாத மன்னனே ‘’தேரா மன்னா’’. ஒரே வார்த்தை அதுல எத்தனை விஷயத்தைப் புரியவச்சுடான் இளங்கோ. தேரா மன்னா செப்புவதுடையேன் . ஆராய்ச்சி இல்லாத மன்னா நான் சொல்வதைக் கேள்.

 "தேரா மன்னா செப்புவது உடையேன்!
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்,
வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின்
மடித்தோன், பெரும்பெயர்ப் புகார் என் பதியே!"

(இந்தப் பாடல் எனக்கு மனப்பாடம். அதனை நண்பரிடம் அப்படியே சொன்னேன்.)

புள்-னா பறவை. புள்ளுறு புன்கண் தீர்த்தவன் சிபிச்சக்கரவர்த்தி. அதாவது, சிபி பேரரசனா ஆட்சி செஞ்சான். அவன் ஆட்சி தர்மம் தவறாம நடந்தது. அவனை சோதிக்க இந்திரன் ஒரு கழுகா மாறி ஒரு புறாவைத் துறத்திட்டு வந்தான். அந்தப் புறா சிபி உப்பரிகைல நின்னப்ப அவன் கிட்ட வந்து அபயம் கேட்டது. மன்னன் அபயம் கேட்டு வந்தவங்கள பாதுகாக்கணும். அது அவனோட தர்மம். அதனால அபயம் கொடுத்தான். அப்ப கழுகு கேட்டது. மன்னனே நீ புறாவுக்கு அபயம் கொடுத்துட்ட ; நானும் ஒரு ஜீவன் தான். என்னோட குஞ்சுகள் கூட்டுல பசியோட இருக்கு. அதுக்கு இந்த புறா மாமிசம் தான் உணவு. இப்ப புறாவுக்கு நீ கொடுத்த அபயத்தாலே அங்க கூட்டுல என் குஞ்சுகள் சாகப் போகுதே. நீ என்ன செய்யப் போற? சிபி தன்னோட உடம்பு சதையை அரிஞ்சு புறாவோட எடைக்கு சமமா தரன்னு சொல்றார். அவர் உடம்புல உள்ள எல்லா சதையையும் அரிஞ்சு வச்சாலும் தராசு முள் சமானமாகலை. கடைசி தசையையும் அரியப் போகும் போது இந்திரன் தன் சுயரூபத்தைக் காட்டுறான். அப்படிப்பட்ட சிபிச்சக்கரவர்த்தி சோழ மன்னன். அந்த சோழ நாட்டுல ‘’ஆராய்ச்சி மணியை பசுமாடு அடிச்சதுக்கு காரணம் கண்டுபிடிச்சு தன் மகனை தேர்க்கால்ல இட்ட மனுநீதி சோழன் ஆகியோர் வாழ்ந்த ஊர்னு பூம்புகாரைச் சொல்றார் இளங்கோ. மனுநீதி சோழன் தலைநகர் திருவாரூர். இருந்தாலும் ஒரே நாடு ஒரே அரசாட்சிங்கறதால பூம்புகாரை மனுநீதி சோழன் ஊர்னு சொல்றார். 

இளங்கோ தப்பா சொன்னார் ; மாத்தி சொன்னார் அப்படின்னா ஒருத்தர் புரிஞ்சுகிட்டா அத யாரும் போய் தடுக்க முடியாது. அவர் என்ன உணர்வுல சொன்னார். எந்த உணர்வு அப்படி சொல்ல வச்சுதுன்னு நாம யோசிச்சு அதுல ஆழ்ந்து போய் பாத்தோம்ணா நாம நிறைய விஷயங்களை உணர்ந்துக்க முடியும். தெரிஞ்சுக்க முடியும். 

எனக்கு சிலப்பதிகாரம் தெரியும்ங்கறதால என் மனசு திருவாரூரையும் பூம்புகாரையும் ஒன்னா பாக்கும். அது இளங்கோ எனக்கு கொடுத்த கிஃப்ட்.’’

***

படைப்பு மனத்துக்கு படைப்பு மனங்களுக்கு சொல்லன்றி வேறு துணையில்லை. எல்லா படைப்பு மனங்களும் சொல்லின் தெய்வத்திடம் ஓயாமல் உரையாடுகின்றன. ஓயாத உரையாடலையே துதியென முன்வைக்கின்றன. சொல் அன்னை அதை அவ்விதமே ஏற்கவும் செய்கிறாள்.

தமிழ்ச் சூழலில் கா.சிவா வின் ‘’சரஸ்துதி’’ ஒரு முக்கியமான ஆக்கம். 

***