இன்று அஞ்சல் அலுவலகம் சென்றிருந்தேன். எனது கணக்கிலிருந்து இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு தொகையை மாற்றம் செய்ய வேண்டும். N E F T என்னும் முறையில் பணம் அனுப்ப அங்கே சென்றிருந்தேன். காத்திருந்த போது நான் முன்னர் சென்று முடி திருத்திக் கொண்டிருந்த சலூன் கடைக்காரரைச் சந்தித்தேன். அவர் கடையை விட குறைவான தூரத்தில் ஒரு புதிய சலூன் திறந்தார்கள் ; அவர்கள் காலையில் முன் நேரத்திலேயே கடையைத் திறந்து விடுவார்கள். ஆதலால் அங்கு செல்ல ஆரம்பித்தேன். வெகுநாட்கள் கழித்துப் பார்க்கிறோம்.
என்னிடம் ‘’ என்ன அண்ணன்! பாத்து எத்தனை நாளாச்சு? ஏன் அண்ணன் கடைக்கே வர்ரது இல்லை’’ என்றார்.
‘’இந்த மாசம் முடி வெட்டிக்கும் போது வரேன்’’ என்றார்.
அவர் சலூன் கடைக்காரர் என்பதால் சில நாட்கள் முன்னர் நான் முடி வெட்டியிருக்கிறேன் என்பது அவருக்கு முதற்பார்வையிலேயே தெரிந்திருக்கும்.
அவர் கையில் இரு பாஸ்புத்தகங்கள் இருந்தன. நான் அதனைக் கவனித்தேன்.
‘’அண்ணன் ! இது செல்வ மகள் திட்டம் அண்ணன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? நீங்க கடைக்கு ஒருநாள் வந்திருந்தீங்க. அப்ப உங்ககிட்ட முதல் நாள் நைட் எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னன். அப்ப நீங்க போஸ்ட் ஆஃபிஸ்ல ‘’செல்வ மகள்’’னு ஒரு ஸ்கீம் இருக்கு. உங்க பெண் குழந்தை பேர்ல மாசா மாசம் டெபாசிட் செய்ங்கன்னு சொன்னீங்க. எனக்கு ஃபார்ம்லாம் கூட வாங்கிட்டு வந்து தந்தீங்க.’’ அவர் சொன்னது என் நினைவில் வந்தது.
‘’இன்னொரு பாஸ் புக்?’’
‘’போன வருஷம் ஒரு பையன் பொறந்தான் அண்ணன். அவன் பேர்லயும் கட்டறன்’’
பாஸ்புக்கை வாங்கிப் பார்த்தேன். மாதா மாதம் இரு குழந்தைகள் பெயரிலும் ரூ.1000 கட்டுகிறார். சில மாதங்கள் ரூ.1500ம் கட்டியிருக்கிறார்.
‘’நீங்க ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்ல தான் பணம் கட்டணும்னு இல்ல. கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்கும் எந்த போஸ்ட் ஆஃபிஸ்லயும் நீங்க பணம் கட்டலாம். உங்க சலூனுக்கு பக்கத்துல கூட ஒரு பிராஞ்ச் போஸ்ட் ஆஃபிஸ் இருக்கே. அங்க கூட பணம் கட்டலாம்’’
அவருக்கு நான் சொன்ன தகவல் புதிது. போஸ்ட் ஆஃபிஸ் ஊழியர் ஒருவரிடம் அழைத்துச் சென்று நான் சொன்ன விபரத்தை உறுதிப்படுத்தினேன்.
‘’சுகன்யா சம்ரிதி’’ என்னும் ‘’செல்வ மகள்’’ திட்டம் மிகச் சிறப்பான ஒரு திட்டம். பெண் குழந்தை பிறந்த நாள் முதல் குழந்தையின் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி மாதாமாதம் பணம் கட்டி வர வேண்டும். அந்த குழந்தைக்கு 18 வயது ஆகும் போது கல்விச் செலவுக்கென ஒரு தொகையையும் 21 வயதில் முழுத் தொகையையும் பெற முடியும்.
பெற்றோர் குழந்தை உறவின் உணர்வைப் பிணைப்பை அன்பை நேயத்தை வெளிப்படுத்தும் திட்டம் இது. நாடெங்கும் நான்கு கோடியே ஐம்பது இலட்சம் செல்வ மகள் கணக்குகள் நடப்பில் இருக்கின்றன. அதில் மூன்று இலட்சத்து முப்பத்து மூன்று ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.
பிறந்த கைக்குழந்தை பெயரில் கணக்கு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது இத்திட்டம் பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்ததற்கான காரணம். அவ்விதம் துவங்கப்பட்ட கணக்குகள் உணர்வின் அடையாளமாயின.
சலூன் கடைக்காரர் அதற்கு முன் அவருக்கு சொந்தமாகக் கூட வங்கிக் கணக்கு வைத்திருந்து அதில் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தியிருக்க மாட்டார். ஆனால் தன் குழந்தைகள் விஷயம் என வரும் போது கிரமமாக ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்துகிறார்.
இவ்விதமான திட்டத்தை வடிவமைத்த ஒருவர் நம் நாட்டு மக்களின் உளநிலையை உணர்வுநிலையை நன்கறிந்த ஒருவராக இருப்பார். அதனால் தான் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.