Friday, 15 May 2026

காலமாற்றத்தின் ஒரு காட்சி

தமிழகத்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஒன்றை எனது பயணத்தில் கடந்து செல்ல நேரிட்டது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்தியப் பல்கலைக்கழகங்கள் பிரும்மாண்டமான பிரிட்டிஷ் பாணி கட்டிடங்கள். ஐரோப்பா கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளமாகக் கண்டது ; காலனிய அரசுகள் பல்கலை.களை தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தும் இடங்களாகவும் கண்டன. இந்தியாவில் பிரிட்டிஷார் எழுப்பிய பல்கலை.ளை விட சுதேச சமஸ்தானங்களும் காந்திய இயக்கத்தவரும் துவங்கிய பல்கலை. எண்ணிக்கையில் மிகுதி.  பல்கலை.யைக் கடக்கையில் இந்த நினைவுகள் எழுந்து கொண்டேயிருந்தன. 

அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் எழுத்தறிவு சதவீதம் 10 ஆக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின் மெல்ல எழுத்தறிவு அதிகமானது. 1960களை ஒட்டி நிறைய பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலை.களும் உருவாயின.’’தரக்கல்வி’’ (quality education) என்பது இல்லாமலாகி ‘’திரள்கல்வி’’ (mass education) என்பது நிலைபெற்றது. இன்று தமிழகத்தின் கடைசி கிராமத்துக்கும் பொறியியல் கல்வி சென்று சேர்ந்திருக்கிறது. அது பல நன்மைகளையும் பலருக்கும் உருவாக்கியிருக்கிறது. 

இந்திய மரபில் கல்வி என்பது அர்ப்பணிப்புடன் பிறிதொன்று இன்றி முழுமையாக ஈடுபடும் செயல். அவ்விதமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவனே மாணவன். ‘’திரள் கல்வி’’யில் அதற்கான இடம் இல்லை. தமிழகத்தில் ‘’தரக்கல்வி’’ பயில்வதற்கு இடம் இல்லை என்பதே யதார்த்தம். 

நான் கடந்து சென்ற பல்கலை.யில் அலரங்கார வளைவு ஒன்றின் முகப்பில் ‘’கவிதை இசை நாட்டியம் சிற்பம் கலைகோபுரம்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஐந்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இம்மண்ணில் கல்வியாக இருந்தன ; 2000 ஆண்டுகளுக்கு முன்னும் 1000 ஆண்டுகளுக்கு முன்னும் 500 ஆண்டுகளுக்கு முன்னும் இவை கல்வியாக இருந்தன. இன்று இவற்றை கற்க வேண்டிய முறைப்படி கற்பதற்கான சூழல் தமிழகத்தின் ‘’திரள்கல்வி’’ சூழலில் இல்லை என எண்ணினேன்.