Wednesday, 13 May 2026

நற்செயலும் எதிர்பார்ப்பும்




தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 4765 அரசு சாராயக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 717 சாராயக் கடைகளை மூட  தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது தமிழக மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் செயல். இந்த முடிவு வரவேற்கத்தக்கது.  

இன்று தமிழக மக்கள் தொகை 7 கோடி எனில் அதில் தோராயமாக ஆண்கள் 3.5 கோடி பேர் இருக்கக்கூடும். அதில் 18 வயதுக்கு மேலே இருப்பவர்கள் 2.57 கோடி பேர் இருப்பார்கள். அதில் 90 சதவீதம் தோராயமாக 2.32 கோடி பேர் சாராயம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக சாராயத்தை ரேஷன் கடை வினியோகம் போல ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சேர்த்திருக்கிறார்கள். சாராயம் குடிக்கும் இந்த 2.32 கோடி பேரும் கூட இத்தனை சாராயக் கடைகளை விரும்புவதில்லை. கடைகள் குறைவாக இருந்தால் தாங்கள் சாராயம் குடிக்கும் அளவு குறையும் ; சாராயம் குடிக்கும் நாட்களும் குறையும் என்றே விரும்புகிறார்கள். 

தமிழகத்தில் உள்ள சாராயக் கடைகள் 4765ல் 717 சாராயக் கடைகள் என்பது 6.6 சதவீத அளவே ஆகும். 

இன்னும் 4048 கடைகள் தொடர்ந்து இயங்க உள்ளன.

மதுவிலக்கு என்பது ஒரு லட்சியவாத நிலை. இந்தியாவில் இன்றும் பீகாரிலும் குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. தமிழக ஆண்கள் 2.32 கோடி பேர் சாராயத்துக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக இங்கே மதுவிலக்கு கொண்டு வர இயலாது என்றாலும் மாவட்டத்துக்கு ஒரு சாராயக் கடை என்ற அளவில் தமிழகத்தில் 38 சாராயக் கடை மட்டுமே இயங்கும் விதமாக உத்தரவிட வேண்டும். அந்த 38 சாராயக் கடைகளிலும் அரசு சாராயம் விற்கக் கூடாது. 

சாராயம் அதனைக் குடிப்பவர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனை என்பதாக மட்டுமே தமிழ்நாடு அரசு பார்க்க வேண்டும். சாராய வருவாயில் தான் அரசு நிகழ்கிறது என்பதால் அந்த சாராய வருவாயை அரசு எதிர்நோக்குகிறது என்றால் கடந்த 20 ஆண்டு ஆட்சிகளின் மனோபாவத்துக்கும் புதிய ஆட்சியின் மனோபாவத்துக்கும் வேறுபாடு இல்லை என்றாகி விடும்.