Saturday, 9 May 2020

கம்பன் - சுந்தர காண்டம் - 2


முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆயின் நல்குவாய்! (5208)

சீதை தன் புருவமும் தோளும் கண்களும் இராமனைக் கண்ட தினத்தில் துடித்தது போன்று இப்போது துடிக்கின்றன என்று திரிசடையிடம் கூறினாள்.

விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை! (5238)

கருமேகங்களுக்கு இடையே தோன்றும் வெண்மின்னல் போல
அரக்கியர்களுக்கு இடையே இருந்த சீதையை அனுமன் கண்டான்.

வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! ‘எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான். (5242)

தன் முயற்சி வெற்றி அடைந்ததை உணர்ந்த அனுமன் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான்.

வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான். (5275)

ஜெய கோஷம் எழுப்பினான் அனுமன்.

அன்னவன் தன்னை உம்கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,
பின்னவற்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன்  மந்திரத்து உள்ளேன், வானின்
நல்நெடும் காலின் மைந்தன், நாமமும் அநுமன் என்பேன். (5366)

இராவணனை வென்ற வாலியை ஒரு அம்பினால் மாய்த்த இராமன் சுக்ரீவனுக்கு அரசாட்சியை வழங்கினான். அந்த சுக்ரீவனின் மந்திரி நான். வாயுவின் மைந்தன். என் பெயர் அனுமன்.

நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின்
ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்
யாண்டையது கான்? ‘என இசைத்ததும் இசைப்பாய். (5396)

செல்வங்களைத் துறந்து அயோத்தி மாநகரை நீங்கிய போது நகர நுழைவாயிலைக் கடப்பதற்கு முன்னரே காடு எப்போது வரும் என கேட்டதை சீதையிடம் நினைவுபடுத்துவாயாக.

மீட்டும் உரை வேண்டுவன இல்லைஎன மெய் பேர்
தீட்டியது தீட்டு அரிய செய்கையது செவ்வே :
நீட்டு இது! ‘என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஒர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். (5398)

நுண்ணிய அழகிய வேலைப்பாடுகள் கொண்டதும் இராமனின் கணையாழியை சீதையிடம் அனுமன் காட்டினான். சீதை அதனைக் கண்களால் கண்டாள்.

வாங்கினள் : முலைக்குவையில் வைத்தனள் : சிரத்தால்
தாங்கினள் : மலர்க்கண் மிசை ஒத்தினள் : தடம்தோள்
வீங்கினள், மெலிந்தனள் : குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள் : உயிர்த்தனள் : இது இன்னது எனல் ஆமே? (5401)

கணையாழியை வாங்கி தன் மார்பில் சீதை வைத்துக் கொண்டாள். பின்னர் தன் சென்னி சூடினாள். மலர்க்கண்களால் அதனை ஒத்தினாள். மகிழ்ச்சியால் தோள்கள் துடிக்கப் பெற்றவனாள். மனம் குளிர்ந்து உயிர்த்தாள்.

பாழிய பணைத்தோள் வீர!
    துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய! வள்ளலே! யான்
    மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
    யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவு உற்ற ஞான்றும்,
    இன்று என இருத்தி! ‘என்றாள். (5407)

வீரனே! நான் மாசற்ற மனம் கொண்டவளெனில் நீ சிரஞ்சீவியாக என்றும் இருப்பாயாக.

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். (5470)

என் சொல் எல்லா உலகங்களையும் அழிக்கும். இலங்கை எனக்கு ஒரு பொருட்டல்ல. இராமன் வில்லிற்கு புகழ் சேர்க்கவே நான் அமைதி காத்துள்ளேன்.

இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன் : அந்த
மன்னன் ஆணை! இதனை மனக்கொள் நீ! (5481)

இராமன் வருகைக்காகக் காத்திருந்து நான் ஒரு மாதம் மட்டுமே ஜீவித்திருப்பேன். இது இராமன் மேல் ஆணை என்று சொல்வாயாக.

தொழுது வாங்கினன் சுற்றிய தூசினில் முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து
அழுது மும்மை வலங்கொடு இறைஞ்சினன்; அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள்; ஏகினன் இப்பால். (5536)

அனுமன் சூடாமணியைத் தொழுது வாங்கினான். தூசி படாமல் ஆடையில் முடிந்து கொண்டான். அழுத கண்களுடன் சீதையை மும்முறை வலம் வந்தான். அன்னையும் அனுமனை வாழ்த்த அனுமன் புறப்பட்டான்.

(தொடரும்)

Friday, 8 May 2020

கம்பன் - சுந்தர காண்டம் - 1


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ‘ அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்! (4847)

கம்பனிடம் இருக்கும் அத்வைத தாக்கம் இப்பாடலில் வெளிப்படுகிறது. சங்கரரின் கயிற்றரவு படிமம் இப்பாடலில் பயன்படுத்தப் படுகிறது. மாயையை விலக்குபவனும் மறைகளின் இறுதியாக விளங்குபவனும் ஸ்ரீராமன். அவன் கையில் வில்லேந்தி இலங்கையுடன் போர் புரிந்தவன்.

‘கண்டனென் இலங்கைமூதூர்! கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும்! ‘என்னா,
அண்டமும் திசைகள் எட்டும் அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான். (4849)

கடிபொழில் – காட்டரண்
மண்டல மதில் – வட்ட வடிவமான மதில். ‘’மண்டலம்’’ என்பது ஒரு சுற்றைக் குறிக்கும். கருநிலவு நாள் தொடங்கி அடுத்த கருநிலவு நாள் வரை முப்பது நாட்கள் என்பது ஒரு சுழற்சி. கருநிலவு தொடங்கி முழுநிலவு நாள் வரை பதினைந்து நாட்களும் ஒரு சுழற்சி. துவங்கிய இடத்தில் வந்து நிறைவதோ அல்லது அதன் உச்ச புள்ளியில் சென்று நிறைவதோ சுழற்சி. மண்டல மதில் என்பது பல்வேறு விதமான சுற்றுக்களைக் கொண்ட மதில்.
கொற்ற வாயில் – பிரதான நுழைவு வாயில்
களப மாட வீதி – யானைகள் செல்லும் வீதி
அனுமன் இலங்கையின் காட்சிகளாக இவற்றைக் காணுகிறான்.

4869. துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அறச், சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சத், திவலையது ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்து உற்று, இலங்கை மேல் தவழ்ந்த மாதோ! (4869)

அனுமன் இலங்கையை நோக்கி வானில் பறந்த வேகத்தின் விசையால் கடலின் அலைகள் பொங்கி இலங்கைக் கரையை அனுமன் செல்வதற்கு முன்பே அடைந்து அதனை விரைந்து தாக்கின.

விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்சச், செல்லும் மாருதி, மறம் உள் கூர,
‘அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னும்! ‘என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங் கிரியை ஒத்தான்! (4872)

வானவர்களின் முனிவர்களின் வாழ்த்தைப் பெற்ற – மானுடரால் வணங்கப்படும் அனுமன் இராவணனை அமுக்கிய திருக்கயிலாயம் போல் விளங்கினான்.
திருக்கயிலாயம் வானவர்களும் முனிவர்களும் வாழ்த்துவது. மானுடரால் வணங்கப்படுவது. அனுமனும் அவ்வாறே. இராவணன் ஆணவத்தை அனுமனும் தோற்கடிப்பான் என்பதை குறிப்பாகக் கம்பன் உணர்த்துகிறான்.

‘நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்! என்று நாடி
இற்றே, இறை! எய்தினன்; ஏயது கோடி என்னால்;
பொன்தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார்செயல் மற்றும் உண்டோ? ‘என உற்று உரைத்தான். (4904)

மைந்நாக மலை அனுமனிடம் உன் மேல் உன் தாயினும் அன்பு பூண்டவன் நான். என் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்க என்று கூறினான்.

பொன்கொண்டு இழைத்த? மணியைக்கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய? எனத் தரெிவு இலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்! (4942)

இலங்கையின் மாடங்கள் பொன் கொண்டு இழைக்கப்பட்டுள்ளனவா? மணிகளால் பதிக்கப்பட்டுள்ளனவா? மின்னும் மின்னல்களால் அமைக்கப்பட்டுள்ளனவா? கதிரொளி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவா? அவை எதனால் ஆனவை?

தேறல் மாந்தினர், தேன் இசை மாந்தினர், செவ்வாய்
ஊறல் மாந்தினர், இன் உரை  மாந்தினர், ஊடல்
கூறல் மாந்தினர், அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர், அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர்! (4972)

இலங்கை அசுரர்கள் இனிய கள் அருந்தினர். இன்னிசை கேட்டிருந்தனர். அசுரப் பெண்களின் சிவந்த இதழ்களை அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் ஊடும் சொற்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அப்பெண்களின் ஊடலால் அடைந்த சினத்தை பருகிக் கொண்டிருந்தனர்.

ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே! (4984)

தவத்தால் அருள் அடையாமல் பொருள் மட்டும் அடைந்தவனும் ஆராயும் திறன் அற்ற மனம் கொண்டவனும் அறிஞர்களின் அறிவுரையை கருதாதவனும் தனக்கு வரக்கூடிய மரணம் குறித்த பிரக்ஞை இல்லாதவனும் உள்ளத்தில் உண்மை இல்லாதவனும் சென்றடையும் இருள் போல இலங்கையில் இருள் நிறைந்தது.

துயில் அறக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயில் இடைத் தந்த விளக்கு என,  ஒளி இலா மெய்யாள்,
மயில் இயல் குயில் மழலையாள்,  மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து  அகப்பட்டது அன்னாள். (5179)

உறக்கமும் முழு விழிப்பும் இன்றி சோர்வுடன், பகலில் ஏற்றப்பட்ட விளக்கு போல முழு பிரகாசம் இன்றி இள மான் ஒன்று புலிகளின் கூட்டத்தில் சிக்கினால் மிரளுவது போல மிரண்டு காணப்பட்டாள் சீதை.



விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல் இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள். (5180)

உளத் துயர் உடலில் உண்டாக்கும் விளைவுகளால் சோர்வுற்றிருந்தாள் சீதை.

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு,
ஒப்பினான் தனை நினைதொறும்,  நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை.
வெப்பினால் புலர்ந்து, ஒருநிலை உறாத மென் துகிலாள். (5183)

இராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்தினாள் சீதை.

மெய்த் திருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்திரு துறந்து ஏகுஎன்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். (5195)

தாமரை இரவில் குவியக்கூடியது. சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை எப்போதும் மலர்ந்திருப்பது. இராமன் முகம் சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை போன்று எப்போதும் மலர்ந்திருப்பது. அரச பதவியை ஏற்க வேண்டும் என்ற போதும் அதனைத் துறந்து காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற போதும் அவன் முகம் சிறிதும் மாற்றமின்றி சித்திரத் தாமரையை ஒத்து இருந்தது. அப்படிப்பட்ட இராமனை நினைத்துக் கொண்டேயிருந்தாள் சீதை.

ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்
தூயநீ! கேட்டி! என் துணைவி ஆம்! ‘எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள். (5206)

கம்பன் திரிசடையை ‘’அன்பினால் தாயினும் இனியவள்’’ என்கிறான். குகனை இலக்குவன் ‘’தாயினும் நல்லன்’’ எனக் கூறுவது இங்கே நினைவு கொள்ளத் தக்கது.

(தொடரும்)

Thursday, 7 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 3


விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம். (4277)

குடும்பத்துக்காகப் பொருள் ஈட்டுவதற்காக வேற்றூர் சென்று திரும்பிய கணவனைக் காணும் பொழுதில் பெண்களின் முகம் எவ்வாறு மலர்ந்து மகிழுமோ அவ்வாறு உலர்ந்து கிடந்த மரங்களெல்லாம் தளிராய் மலர்ந்தன.

கம்பனுக்கு முன்னும் பின்னும் மரம் தளிர்த்தல் என்பதும் முகம் மலர்தல் என்பதும் எப்போதும் தமிழ்க் கவிதையின் முக்கியமான படிமங்கள்.

நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்;
குறைந்தன கருங்குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
மறைந்தன நெடுந்திசை; வருந்தினர் பிரிந்தார்;
உறைந்தன மகன்றில் உடன் அன்றில் உயிர் ஒன்றி. (4323)

கார்காலத்தின் மழையால் நெடுங்குளங்கள் நிறைந்தன. அலைகடலும் பொங்கியது. குயிலோசை குறைவாய்க் கேட்டது. இறுகிய மலைகளும் குளிர்ந்தன. திரண்ட கருமேகங்களால் திசைகள் மறைக்கப்பட்டன. பிரிந்திருந்த காதலர்கள் வருத்தம் பெருகியது. அன்றில் பறவைகள் இணையைத் தழுவியிருந்தன.

அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின்செல
சங்கை இல் இலக்குவன் தழுவி தம் முனின்
செங்கதிரோன் மகன் கடிதிற் சென்றனன். (4492)

அங்கதன் சுக்ரீவனுடன் சென்றான். வானர சேனை அவர்களுக்கு முன்னால் சென்றது. வானர மகளிரின் மனம் பின் தொடர்ந்து வந்தது. அவர்கள் கடந்து சென்ற பாதை பின்னால் அப்படியே இருந்தது. சுக்ரீவன் இலக்குவனுடன் தோளோடு தோள் இணைந்து சென்றான். இராமன் இருக்குமிடம் நோக்கி ஆர்வத்துடன் முன்னேறினர்.

ஒரு படை என்பது ஒரு வாகனம் போல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து தங்கள் பணியைச் செய்தால் மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். அங்கதன் சுக்ரீவனுக்கு காப்பாக உடனிருக்கிறான். சுக்ரீவன் இலக்குவனுடன் தோளோடு தோள் நிற்கிறான். சைன்யம் தலைவர்களுக்கு முன்னால் செல்கிறது. போர்வீரர் இல்லப் பெண்களின் மனம் அவர்களைப் பின் தொடர்ந்து வருகிறது. அவர்கள் கடந்த பாதை அப்படியே அங்கேயே இருக்கிறது.

ஒரே பயணத்தின் வெவ்வேறு காட்சிகள்.

எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்குறின் கண் நுதலானுக்கும் கதுவா;
மண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே. (4536)

இராமன் புகழ் பாடும் வானர சேனையின் அளவை முக்கண்ணனாகிய சிவனாலும் மூன்று கண்களால் கண்டு விட முடியாது. இப்படையின் பெருக்க்த்தை எழுபதாயிரம் பிரம்மர்களாலும் கற்பனை செய்து விட முடியாது. இப்படை உண்ணத் தொடங்கினால் அதன் பசிக்கு இந்த அண்டமும் போதாது.

ஒடிக்குமேல், வடமேருவை வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல் பெருங்காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். (4537)

வானர சேனை ஒடிக்க வேண்டும் என்று நினைத்தால் வடவரையை ஒடித்து எறியும். வானர சேனை இடிக்க வேண்டும் என்று நினைத்தால் மேலே இருக்கும் வானத்தை இடிக்கும். பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் சூறாவளியைப் பிடிக்கும். குடிக்க வேண்டும் என்று நினைத்தால் ஏழு கடலையும் குடிக்கும்.

‘ஏகி ஏந்திழை தன்னை இருந்துழி
நாகம் நாடுக; நால் நிலம் நாடுக;
போக பூமி புகுந்திட வல்லநின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். (4558)

சுக்ரீவன் அனுமனிடம் சீதையை நானிலம் முழுதும் தேடுக. நாகர்கள் வாழும் உலகிலும் தேடுக. வானவர் வாழும் சுவர்க்கத்திலும் தேடுக என்றான்.

‘குட திசைக்கண் சுடேணன்; குபேரன் வாழ்
வட திசைக்கண் சதவலி; வாசவன்
இட திசைக்கண் வினதன்; விறல் தரு
படையொடு ‘உற்றுப் படர்க எனப் பன்னினான். (4562)

சுக்ரீவன் இந்திரனுக்குரிய கிழக்கு திசையில் தேட வினதனையும் மேற்கு திசைக்கு சுடேணனையும் குபேரனுக்குரிய வடக்கு திசைக்கு சதவலியையும் சீதையைத் தேடுமாறு அனுப்பினான்.

‘மல்லல் மாநகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
கல்லின் மாமதில் மணி கடை கடந்திடுதல் முன்,
எல்லை தீர்வு அரிய வெங்கானம் யாதோ “ எனச்
சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.’ (4624)

வனவாசம் செல்ல அயோத்தி நகரை விட்டு நீங்கும் போது அரசமாளிகையிலிருந்து நகரின் காப்பரணாகிய மதிலைத் தாண்டுவதற்கு முன்பே சீதை இராமனிடம் காடு எங்குள்ளது என்று கேட்கிறாள்.

’’நின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு’’ என்று வினவிய சீதை இராமனைப் பிரிந்திருப்பது பெருந்துன்பம் என்பது அறிந்தவள். இராமனைப் பிரிந்திருக்கும் துன்பத்தை இராமனைக் கண்ட கணத்திலிருந்து மறுநாள் சுயம்வர மண்டபத்தில் காணும் வரை அனுபவித்தவள். அதனால் ‘’நின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு’’ என்கிறாள். ஆனால் சீதை அரண்மனை நீங்காதவள். முதல் முறை அரசபோகங்களைத் துறந்து நகர் நீங்கும் போது கணவனிடம் காடு எங்குள்ளது என்று கேட்கிறாள்.

பொதுவாக குழந்தைகளை ஏதேனும் ஊருக்கு அழைத்துச் சென்றால் கிளம்பிய சில நிமிடங்களில் ஊர் எப்போது வரும் என்று கேட்கத் துவங்குவர். சீதை குழந்தை மனம் படைத்தவள். ஆதலால் அப்படிக் கேட்கிறாள்.

இந்த உரையாடல் இராமனும் சீதையும் மட்டுமே அறிந்தது. அதை சீதையிடம் சொல்லுமாறு அனுமனை இராமன் கேட்டுக் கொள்கிறான்.

Wednesday, 6 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 2


இவ்வழி எண்ணி, ஆண்டு, அவ் இருவரும் எய்தலோடும்,
செவ்வழி உள்ளத்தானும், தரெிவு உற எதிர்சென்று எய்திக்
கவ்வை இன்றாக, நுங்கள் வரவு! ‘எனக், கருணையோனும்,
எவ்வழி நீங்கியோய்? நீ யார்? என, விளம்பல் உற்றான். (3866)

செம்மை மனம் கொண்டவனான அனுமன் இராம இலக்குவரின் எதிரில் சென்று வணங்கி ‘’தங்கள் வரவு துயர் நீக்குவதாக அமையட்டும்’’ எனக் கூற இராமன் அனுமனிடம் ‘’எங்கிருந்து வருகிறாய் நீ? நீ யார்?’’ என வினவினான்.

இப்பாடலில் கம்பன் ஓர் உணர்ச்சி நாடகத்தை அமைக்கிறான். அனுமன் செம்மை மனம் கொண்டவன். ஆதலால் நேரடியான அணுகுமுறை கொண்டவன். எனினும் சுக்ரீவனின் அச்சத்தால் இராம இலக்குவரை மறைந்திருந்து அவதானிக்க வேண்டியிருந்தது. அவர்களின் இயல்பை ஆற்றல் மிகு போர்த்தொழிலர்கள் என்பதிலிருந்து வேங்கையும் அரிமாவும் கனிந்து உருகும் கருணையாளர்கள் என்பது வரை உணர்ந்து கொள்கிறான். இராம இலக்குவர் எதையோ தேடுகின்றனர் என்பதையும் துயரின் சுவடுகள் அவர்கள் முகக்குறிகளில் தென்படுவதையும் அறிந்து அவர்களிடம் சென்று ‘’தங்கள் வரவு துயர் நீக்குவதாக அமையட்டும்’’ என்று சொல்கிறான். தான் யார் என வினவப்படுவோம். அப்போது சுக்ரீவனின் துயர் குறித்து கூறி அதனை நீக்க இராம இலக்குவரின் உதவியைப் பெறும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அவர்கள் தங்கள் துயர் குறித்து சொல்வார்கள் எனில் அதற்கு எவ்விதத்திலாவது உதவ முடியுமா என்ற பரிசீலனையையும் உள்ளடிக்கிய நற்சொல்லை அனுமன் உரைத்தான்.
  
“இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே ‘‘ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய! வீர! விரிஞ்சனோ? விடை வலானோ? (3870)

அனைத்தும் அறிந்த அறிஞனாகவும் முற்றும் உணர்ந்த ஞானியாகவும் விளங்கும் இந்த ‘’சொல்லின் செல்வன்’’ யார்? உலகில் இவன் அறியாயதது என்றும் கற்க வேண்டியது என்றும் எதுவும் இல்லை. இவன் பிரம்மனா? இவன் சிவனா?
அனுமனைக் கண்டதும் இராமன் அனுமனைப் பற்றி கூறும் முதற்சொற்கள் இவை. இவற்றிலிருந்தே இராமன் அனுமனுக்கு மனத்தில் என்ன இடம் கொடுத்தான் என்பதை அறிய முடியும்.

‘ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி, வேள்வி
தொடங்கின, மற்றும், முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே,
கொடுங் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும், நல்லது உண்டோ? ‘(3875)

வேள்வி செய்வதை விடச் சிறந்தது வலிய பகையின் நெருக்குதலால் அஞ்சியிருப்பவர்களுக்கு அபயம் அளிப்பது என அனுமன் இராமனிடம் கூறினான்.
இராம இலக்குவர் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை முதற்பார்வையிலேயே உணர்ந்த அனுமன் அவர்கள் தவ வடிவம் தாங்கியிருப்பதால் வேள்வியை விட அபயமளித்தல் சிறந்தது என்கிறான்.

நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே துன்பம் ஆனது; இன்பமும் எய்திற்று; இன்னும்,
வில்லினாய்! இவனைப் போலாம் கவிக்குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான்; அவன் நிலை சொல்லற் பாற்றோ? (3886)

துயருற்றிருந்த நாம் நம் துயர் நீங்கப் போவதன் கட்டியமாக நன்நிமித்தங்களைப் பெற்றோம். இனியவனாகிய அனுமனைப் பெற்றோம். அனுமனின் தலைவனாகிய சுக்ரீவனின் துணையும் நம்முடன் சேரும்.

 ‘மண் உளார், விண்ணுளார், மாறு உளார், வேறு உளார்,
எண் உளார், இயலுளார், இசை உளார், திசை உளார்
கண் உளார் ஆயினார்; பகை உளார், கழிநெடும்
புண் உளார் ஆருயிர்க்கு அமிழ்தமே போல் உளார். (3890)

சுக்ரீவனுக்கும் அவன் கூட்டத்தாருக்கும் இராம இலக்குவர் யார் என்பதை உரைக்க வரும் அனுமன் ஆனந்தக் கூத்தாடி வருகிறான். ஆனந்தத்தில் உள்ளவர் மனதில் இருந்து வெளிப்படும் சொற்பெருக்கு விரைவானதாக இருக்கும். அவ்வாறான விரைவில் இராம இலக்குவர் குறித்து உணர்ச்சி மேலிட வர்ணிக்கிறான்.

மண்ணில் இருக்கும் மனிதர்களில் மகத்தானவர்கள். விண்ணில் வாழும் தேவர்களில் சிறந்தவர்கள். பாதாளங்களில் வாழும் நாகர்களினும் திறன் கொண்டவர்கள். யக்‌ஷர் கந்தர்வர்களினும் மேம்பட்டவர்கள். எண்திசையையும் காப்பவர்கள். இவர்கள் அனைவராலும் மனத்தால் எண்ணப்படுபவர்கள். இவர்கள் அனைவரும் இயங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள். இவர்களால் துதிக்கப்படுபவர்கள். பகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமுதமாய் விளங்குபவர்கள்.


தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது ‘என்றே. (3906)

பிரம்மம் மண்ணுக்கு மானுட வடிவம் தாங்கி வந்தது. இதனால் பிரபஞ்சத்தின் மற்ற உயிர்களை மானுடம் வென்றது.
அனுமன் சொற்களால் இராமனைக் குறித்து கேட்டறிந்த சுக்ரீவன் இராமனைக் கண்டதுமே இராமனை பிரம்ம சொரூபமாய் உணர்ந்து இச்சொற்களைக் கூறுகிறான்.

கூட்டம் உற்று இருந்த வீரர், குறித்தது ஓர் பொருட்டு முன்னாள்
ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்;
வீட்டு வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்கக்,
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார். (3909)

இராம சுக்ரீவர் இணைந்து இருப்பது தவமும் முயற்சியும் இணைந்து இருப்பது போலவும் கல்வியும் ஞானமும் இணைந்து இருப்பது போலவும் இருந்தது என்கிறான் கம்பன்.
தவம் என்பது ஒன்றை மட்டுமே மனத்தில் உணர்வில் எண்ணத்தில் பற்றி பிற அனைத்திலிருந்தும் விலகியிருப்பது. கருதும் ஒன்றாகவே தான் ஆவது. முயற்சி என்பது எல்லா வகையிலும் முயல்வது. எல்லாமாகவும் தான் ஆவது. இரண்டுமே பெரியவை. தவம் கைகூடினால் எண்ணியதை எண்ணியாங்கு எய்த முடியும். தெய்வத்தால் ஆகாததையும் முயற்சி சாத்தியமாக்கும். அத்தகைய தவமும் முயற்சியும் ஒரு செயலில் ஒன்றிணையுமானால் எத்தகைய வலிமையோ அத்தகைய வலிமையை இராம சுக்ரீவர் இணை கொண்டிருந்தது என்கிறான் கம்பன்.

கல்வி என்பது ஆசிரியனால் கற்பிக்கப்படுவது. ஆசான் தான் கற்றவற்றை மாணவனுக்குக் கற்பித்திருப்பான். ஆசான் தான் கற்றதையும் தனது அனுபவங்களையும் மாணவனுக்கு அளித்திருப்பான். எனினும் மாணவன் தான் ஆசானிடமிருந்து அடைந்த கல்வியை தனது செயல்பாடுகள் வழியே அனுபவமாக மாற்றிக் கொள்ளும் போதே ஞானம் பெறுகிறான். அது எவ்வகையான ஞானமானாலும் சரி. உலகியல் ஞானத்திலிருந்து ஆத்ம ஞானம் வரை. ஆசானிடமிருந்து பெற்ற கல்வியும் தான் அடைந்த அனுபவமும் இணையும் போது முழுமை ஞானம் கைகூடும். இராம சுக்ரீவர் இணைவு என்பது கல்வியும் ஞானமும் இணைந்தது போல் இருந்தது.

ஆர்த்தது குரக்குச் சேனை; அஞ்சனை சிறுவன் மேனி,
போர்த்தன, பொடித்த ரோமப் புளகங்கள்; பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர்; மேகம் சொரிந்தன; அனகன் சொன்ன
வார்த்தை எக் குலத்து உளோர்க்கும், மறையினும் மெய் என்று உன்னா. (3915)

ஆர்ப்பரித்தது வானரப் படை. இராமனின் கனிவையும் உன்னதமான அச்சூழலையும் எண்ணி மேனி சிலிர்த்தான் அனுமன். தூறலிட்டன மேகங்கள். பூமழை பொழிந்தனர் விண்ணவர்.

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்,
ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கின என்ப,
ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்? “ என்று எண்ணி. (3983)

ஏழு மராமரங்களை இலக்காகக் கொண்ட இராம பாணத்தைக் கண்டு ஏழு கடல்கள் அஞ்சின. ஏழு உலகங்களும் அஞ்சின. ஏழு மலைகளும் அஞ்சின. ஏழு முனிவர்களும் அஞ்சினர். ஏழு குதிரைகள் அஞ்சின. ஏழு கன்னிகள் அஞ்சினர். இராம பாணம் ஏழை இலக்காகக் கொண்டுள்ளதே என்று!

இப்பாடல் ஒரு மிகுபுனைவு. இருப்பினும் இந்திய புராணங்களில் ஏழு கடல்கள் எவை என்றும் அவை உருவானது குறித்த கதைகளும் ஏழு உலகங்கள் யார் யாருக்கு உரியன என்பது குறித்த கதைகளும் எவை ஏழு மலைகளாக தொகுக்கப்பட்டன என்ற வரிசைப்படுத்தலும் ஏழு முனிவர்களின் தவ முறைகளும் ஏழு குதிரைகள் குறித்த வர்ணனைகளையும் ஏழு மாதர் வழிபாடு உருவாகி வந்த முறை குறித்தும் வாசகன் இப்பாடலிலிருந்து மேலதிக வாசிப்பின் மூலம் அறிய முடியும். அது இப்பாடலுக்கு மேலும் பொருள் தரும். அத்துடன் இப்பாடலின் மிகுபுனைவு அம்சத்தை மேலும் பெரிதாக்கும்.

தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி;
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல்
உருகினன் என்கிலம்; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்கொல் ஆம்? (4008)

தன் சீதையின் ஆபரணங்களைக் கண்ணால் நோக்கினான் இராமன். எரியும் தீயில் இடப்பட்ட மெழுகைப் போல அவற்றைக் கண்டதும் உருகினான். துயருற்றிருந்த இராமன் துயர் நீக்கும் அமுதம் போன்ற அவற்றை கண்களால் பருகினான்.

காதல் கனிந்த மனம் கொண்ட காதலன் தன் காதலியின் அணிகளையும் காதலியாகவே கருதுவான். காணும் எல்லா பொருளிலும் அவளின் தோற்றத்தையும் அசைவையும் அழகையும் காண்பான். பெண்கள் அணி கொள்ளுதல் என்பதே தம்மை விரிவுபடுத்திக் கொள்ளும் ஒரு செயலே. உடலுக்கும் அணிகளுக்கும் இடையே ஓர் ஒத்திசைவை உருவாக்குவது என்பதே அணிக்கலை. சீதையின் நகைகளைக் கண்ட இராமன் அவற்றின் மூலம் சீதையையே கண்டான். எனவே நெகிழ்ந்த அன்பால் உருகினான்.

‘கொற்றவ, நின்பெருங் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந்திறல்; பெயர்த்தும் போர்செயற்கு
உற்றது, நெடுந் துணை உடைமையால் ‘என்றாள். (4061)

ஓர் இடர் ஏற்படும் போது அவ்விடர் குறித்து சிந்திப்பதும் ஆலோசிப்பதும் உத்தமமானது. சினமெழுந்தவர்கள் சீண்டப்பட்டு சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். வாலி அவ்வாறு சினந்து எழுகிறான். அவன் மனைவி தாரை நிலைமை குறித்து சிந்தித்தவளாய் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.
‘’மன்னா! தங்கள் வலிமையைக் கண்டு அஞ்சி ஓடிய சுக்ரீவன் தங்களை வெல்லும் ஆற்றலை அடைந்திருக்க முடியாது. தங்களை எதிர்க்கத் துணிகிறான் எனில் அவன் ஆற்றல் கொண்ட ஒரு துணையைப் பெற்றிருக்கிறான். அதனாலேயே தங்களை எதிர்க்கும் துணிவு அவனுக்கு வந்திருக்கிறது.’’
’’மன்னா’’ என விளிப்பது அவன் எந்த யோசனையையும் ஆலோசிக்க வேண்டியவன் என்பதால்.

 மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான். (4117)

மூவுலகங்களுக்கும் அடிப்படையான மந்திரச் சொல்லை, தம்மை வழிபடுபவர்களுக்கு தம்மையே அளிக்கும் ஒப்பில்லாத சொல்லை, இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான அருமருந்தை, ‘’ராம’’ என்ற சிறந்த பெயரை தன்னைத் துளைத்த அம்பினில் கண்டான் வாலி.

வாலி வதைப் படலம் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. மறைந்திருந்து அம்பு எய்தியது சரியா தவறா என இப்போதும் பேசப்பட்டு வருகிறது. காப்பிய அமைப்பில் கிட்கிந்தை காண்டத்தின் துவக்கத்திலேயே இராமனும் அனுமனும் சந்தித்து விடுகின்றனர். அனுமன் கற்க வேண்டிய கல்வியோ அடைய வேண்டிய ஞானமோ இவ்வுலகில் இல்லை என்பது அனுமனைப் பற்றிய இராமனின் அவதானம். வாலி அறம் பிழைத்தவன். வாலி அறம் பிழைத்தவன் என்பதற்கு அனுமன் கூறும் சான்றே போதுமானது. அதன் அடிப்படையிலேயே இராமன் வாலியை வீழ்த்துகிறான். தாடகை வதத்தின் போது அரக்கியாயினும் பெண் என்பதால் பாணம் செலுத்த இராமன் தயங்குகிறான். விசுவாமித்திரர் சொல்ல அம்பை ஏவுகிறான். இம்முறை அனுமன் சான்றுரைத்ததால் இராமன் வாலியை வீழ்த்துகிறான்.


(தொடரும்)

Tuesday, 5 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 1



தேன் படி மலரது செங்கண் வெங் கைம்மா
தான் படிகின்றது தெளிவு சான்றது
மீன் படி மேகமும் படிந்து வீங்கும் நீர்
வான் படிந்து உலகு இடைக் கிடந்த மாண்பது. (3811)

தேன்மலர்கள் படிந்த நதி
பெரும் யானைகள் மூழ்கிக் களிக்கும் நதி
விண்ணளவு விரிந்த நதி
மேகமென நீர் அடர்ந்த நதி

வண்ண நறும் தாமரை மலரும் வாசக் குவளை நாள் மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய்!
கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒருகால் காட்டாயோ?
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ? (3834)

விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடிவள்ளை
தரங்கம் நெருங்கு வரால் ஆமை என்று இத்தகையதமை நோக்கி,
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற்கண்டேன்; வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்தி ஆம் அன்றே. (3835)


வண்ணத் தாமரையே
இனிய குவளைகளே
பிரிவால் எரிகிறது என் நெஞ்சத்துயர்
பொய்கையே
உம் மலர்களில்
அவள் கண்களையும் முகத்தையும் காண்கிறேன்
அவள் முழு உரு எப்படிக் காண்பேன்?

பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள், நிறம் பூத்த
மஞ்சு பூத்த மலர் பூத்த குழலாள் கண்போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்தது ஆம் அன்ன நகையால் என்னை நலிவாயோ. (3841)

காலின் மா மதலை! இவர் காண்மினோ! கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம்; வரிசிலையர்;
நீல மால் வரை அனையர்; நீதியா நினைமின் என,
மூலம் ஓர்கிலர், மறுகி ஓடினார், முழை அதனின். (3854)

அனுமன் ஒரு சிரஞ்சீவி. படைப்புலகில் எல்லாக் கதாபாத்திரங்களும் ஜீவனுடன் திகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். எனினும் அனுமன், பீமன் ஆகிய பாத்திரங்கள் காலந்தோறும் புது எழில் சூடி வளர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். உலகில் இந்தியக் குழந்தைகளுக்குக் கிட்டியிருக்கும் பெரும் பேறு என்பது அவர்கள் அனுமனின் சாகசங்களை தம் அன்னையர் கூறும் கதை மூலம் கேட்டறிந்து வளர்கிறார்கள் என்பதே.
சூரியனைப் பழம் என எண்ணி உண்ணப் பாய்ந்தவன், பாறைகளையும் மலைகளையும் பஞ்செனக் கையாள்பவன், காற்றில் விரைந்து பறப்பவன், எப்போதும் யோகத்தில் இருப்பவன், அறிஞன் மற்றும் உற்சாகம் அளிப்பவன் என்ற அனுமனின் சித்திரங்கள் அளிக்கும் மகிழ்ச்சியானது குழந்தைகளுக்கு கதை கேட்கும் நாளில் துவங்கி அவர்கள் இறுதி மூச்சுவரை கூடவே வருவது.

இந்தியாவில் கோட்டைவாயில்களில் அனுமன் சிலையைப் பிரதிட்டை செய்திருப்பர். எதிரிகளிடமிருந்து காப்பளிப்பவனாக அனுமன் இந்தியா முழுதும் வணங்கப்படுகிறான். பன்னெடுங்காலமாக இந்தியாவில் போர் வீரர்களால் ஆற்றல் அளிக்கும் தெய்வங்களில் ஒன்றாக அனுமன் வழிபடப்படுகிறான்.

கம்பராமாயணத்தில் அனுமனைக் காட்ட வேண்டிய இடத்தில் கம்பன் சில ஆர்வமூட்டும் யுக்திகளைக் கையாள்கிறார். அனுமப் படலத்தில் அனுமனின் தோற்றம் மூலமோ செயல் மூலமோ அனுமனைக் காட்டாமல் – சித்தரிக்காமல் – சுக்ரீவனின் விளி மூலம் அறிமுகப்படுத்துகிறான்.

காலின் மா மதலை
’’கால்’’ என்றால் காற்று. பெருங்காற்று.
மதலை என்றால் குழந்தை.
காலின் மா மதலை – பெருங்காற்றின் பெருங்குழந்தை.
பாரதியின் ‘’எந்தையும் தாயும்’’ பாடலில் மதலை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்.

அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
தவ்விடத், தனி அருளு தாழ்சடைக் கடவுள் என,
இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல் ‘என்று இடை உதவி. (3855)

மறுகுதல் – கலக்கமடைதல்
அஞ்சி – பயந்து
நெஞ்சு அழி அமைதி – அமைதி இழந்து, பதட்டமடைந்து

அச்சுறுதலுக்கு உள்ளாகியிருப்பவர்களின் புலன்கள் மாறுபாடான எதையும் அடையாளம் கண்டால் பலவிதங்களில் எதிர்வினையாற்றும். கலக்கமடைதல் அவற்றில் ஒன்று. கலக்கம் தெளிவுக்கு எதிரானது. தெளிந்த மனத்தால் மட்டுமே ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். மதிப்பிட முடியும். தெளிவற்ற கலங்கிய மனத்தால் எதையும் அதன் தன்மையில் அறிய முடியாது.

அச்சம் என்பது நுண்ணியதாய் தொடங்கி மனமெங்கும் பேருரு கொண்டு நிறைவது.

அச்சுறுதலுக்கு உள்ளாகி பதுங்கியிருப்பவர்களுக்கு அப்போதைக்கான தற்காலிக அமைதி என்பது ஆறுதல் பரிசு போல. புதிதாக ஏதோ தென்படும் போது அந்த அமைதி அழிந்து பதட்டம் உருவாகி விடுகிறது.
சுக்ரீவனும் அவன் கூட்டத்தாரும் இராம இலக்குவரைக் கண்டதும் மேற்கண்ட மூன்று விதங்களில் துயருற்றனர் என்பதை ’’மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி’’ என்று கம்பன் காட்டுகிறான்.

பாற்கடல் கடையப்பட்ட போது, தேவர்களும் அசுரர்களும் அதனைக் கண்டு திகைத்துச் சிவனிடம் ஓடினர். இராம இலக்குவரைக் கண்ட சுக்ரீவன் அவ்வாறே ஓடினார். அப்போது சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தவாறு அனுமன் சுக்ரீவனுக்கு ஆறுதல் அளித்தான்.

அடுத்த நான்கு பாடல்களில் அனுமனின் மனம் இயங்கும் விதத்தை கம்பன் காட்டுகிறான். அதன் சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் மூலம் அனுமனின் மேதைமையையும் நுட்பத்தையும் வாசகன் கற்பனை செய்து கொள்ள அந்த இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள இடமளிக்கிறான்.

அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
‘வெஞ்சமத் தொழிலர், தவம் மெய்யர், கைச் சிலையர் ‘என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும். (3856)

காலின் மா மதலை இப்போது நிலைமையை அவதானிக்க எதிராளிகளை மதிப்பிட தன் பேராற்றலை சற்று விலக்கி விட்டு சூழ்நிலையின் தேவையை முன்னிறுத்தி ஓர் எளிய மாணவனின் உருவம் கொண்டு மறைந்து நின்று இராம இலக்குவர்களை அவதானிக்கிறான்.

ஒருவரைக் கண்டதும் மனதில் ஏற்படும் முதலெண்ணம் என்பது அவர்களுடனான உறவில் புரிதலில் முக்கிய இடம் வகிப்பது.

போர்த்தொழில் புரிபவர்கள், தவ உருவம் தாங்கியுள்ளனர், கையில் வில் ஏந்தியிருக்கும் வில்லாளிகள் என மனதில் அடுக்கிக் கொள்கிறான். போர்த்தொழில் புரிபவர்கள் அறத்துக்காகப் போராடும் இயல்பு கொண்டவர்கள். ஆகவே அறம் அறிந்தவர்கள் என முடிவு செய்து கொள்கிறான் அனுமன். ஷத்ரியர்கள் ஆயினும் தவ உருவம் தாங்கியுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்கிறான். எல்லா விதமான போர்த்தொழிலையும் புரிபவர்களாயினும் விற்திறன் கொண்டவர்கள் என அடுத்த நிலைக்கு வருகிறான்.

இப்பாடலில் அனுமனை கம்பன் ‘’அஞ்சனைக்கு ஒரு சிறுவன்’’ என்கிறார். சிறுவன் எப்போதும் ஆர்வமானவன். துணிந்து முனைபவன். அனுமன் சிறுவனும் மேதையும் ஆனவன்.

கற்பினின் நினையும் – இங்கே கற்பு என்பது ஒழுங்கு என்றும் கல்வி என்றும் பொருள்படும்.

வெஞ்சமத் தொழிலர் – கம்பன்
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் – பாரதி (பாஞ்சாலி சபதம்)
போர்த்தொழில் பழகு – பாரதி (புதிய ஆத்திசூடி)

‘தேவருக்கு ஒருதலைவர் ஆம் முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்; மூரிவில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகின்? யாது இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? ‘ (3857)

முதலெண்ணத்துக்குப் பின் அனுமனுக்கு அடுத்த எண்ணம் ஏற்படுகிறது: மும்மூர்த்திகள் என்றால் இவர்கள் இருவர்தான் இருக்கிறார்கள். அவர்களைப் போல் வேதம். நேமி, சூலம் ஏந்தாமல் வில் ஏந்தியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒப்பானவர் எவருமில்லை என்ற விதத்தில் தோற்றம் கொண்டுள்ளனர்.

சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத், தரெுமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர்; நோவுறச் சிறியர் அலர்;
அந்தரத்து அமரர் அலர்; மானிடப் படிவர்; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறும் நிலையர். (3858)

தொடர்ந்து அனுமன் சிந்திக்கிறான்:
அவர்கள் மனத்தில் சிறிதளவு துயர் இருக்கிறது. அத்துயரால் துன்பம் அடைந்திருக்கிறார்கள். எனினும் துயர் கண்டு துவள்பவர்கள் இல்லை.வானத்து தேவர்களும் அல்லர். மானிடர்கள். அரிய ஒன்றைத் தேடும் நிலையில் உள்ளனர்.

மேற்படி பாடல்களில் தொலைவிலிருந்து நோக்கியே இராம இலக்குவர் குறித்த மனப்பதிவை அனுமன் அடைவதைக் காணலாம். பேராற்றல் கொண்டவனாக ‘’காலின் மா மதலை’’ என்ற விளி மூலம் காட்டிய கம்பன் இராம இலக்குவர்களைக் கண்டதும் அனுமன் மனதில் ஓடும் எண்ணங்களைக் காட்டி அவன் தெளிந்த அறிஞன் என்பதை நிறுவுகிறார்.

‘தன் கன்று கண்ட அன்ன தன்மைய, தறுகண் பேழ்வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா, வேங்கை என்று இனையவேயும்,
பின் சென்று, காதல் கூரப் பேழ்கணித்து இரங்குகின்ற;
என் கன்றுகின்றது எண்ணிப் பற்பல இவரை? அம்மா! ‘(3862)

வேட்டைவெறி கொண்ட கண்களையும் இரையைக் கிழித்துக் குதறும் பெரிய வாயினையும் உடைய சிம்மங்களும் புலிகளும் கூட தம் குருளைகளைக் கண்டால் அமைதியும் கனிவும் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் இராம இலக்குவரை அகத்தில் அன்புடன் பார்க்கின்றன. விலங்குகளும் உணரத்தக்க அன்பைத் தம் தோற்றமாகவும் இயல்பாகவும் கொண்டுள்ள இராம இலக்குவரைக் கண்டு எவரேனும் அஞ்சுவரோ?

இராம இலக்குவரின் ஆற்றலை மதிப்பிட்ட மாருதி பின்னர் அவர்களின் கருணை கொண்ட இயல்பை உணர்ந்து கொள்கிறான்.

(தொடரும்)

Monday, 4 May 2020

கம்பன்

கிட்கிந்தா காண்டத்திலிருந்து யுத்த காண்டம் வரையிலான கம்ப ராமாயணப் பாடல்களை வாசித்து அதில் தேர்ந்தெடுத்த சில பாடல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். அடுத்தடுத்த நாட்களில் அவை இடம் பெறும். யுத்த காண்டம் என்பது கம்ப ராமாயணத்தில் பாதி பங்கு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.