இந்த பனி பொழியும் இரவில்
தனியாய் நடக்கும் இச்சாலை
விளக்குகளின் வெளிச்சம்
சிறிதாய் தரை தொடும் இச்சாலை
சீர் செய்யப்படாத பள்ளங்கள் கொண்ட இச்சாலை
நாளும் பொழுதும்
பலமுறை கடந்த இச்சாலை
மகிழ்ந்து துக்கித்து கசந்து
சென்ற இச்சாலை
மகவாய் அன்னை ஒக்கலில் அமர்ந்து
தந்தை கைவிரல்கள் பற்றி நடந்து
மிதிவண்டி இயக்கி
ஊர்திகளில் சென்ற இச்சாலை
இச்சாலை
இச்சாலை
அப்படியே இருக்கிறது
வானத்தைப் பார்த்துக் கொண்டு
பூமியில்
அவ்வப்போது வந்து செல்பவர்களைப்
பார்த்துக் கொண்டு