நேற்று மாலை 4 மணிக்கு தரங்கம்பாடி கடற்கரைக்குப் புறப்படுவோம் என நண்பர் ஒருவரிடம் சொன்னேன். 3.58க்கு நான் தயாராகி விட்டேன். நண்பருக்கு ஃபோன் செய்தேன். கிளம்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். தரங்கம்பாடி மார்க்கத்தில் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினேன். 700 மீட்டர் தூரம் நடந்திருப்பேன். நண்பர் என்ஃபீல்டில் வந்தார். ஏறி அமர்ந்து கொண்டேன்.
நண்பர் அரசாங்க மாற்றம் குறித்து கேட்டார். தமிழக அலுவலகங்களில் ஊழல் மிக முக்கியமான பிரச்சனை. சாமானியன் அரசு அலுவலகத்துக்குச் செல்வது பெரும்பாலும் மூன்று காரியங்களுக்காக. ஒன்று தனது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தைப் பதிவு செய்வதற்காக. இதற்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வாகனம் சாமானியர்கள் தினமும் பயன்படுத்துவது. தமது அன்றாடப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் வாகனத்தைப் பதிவு செய்து கொள்ள ஏன் லஞ்சம் தர வேண்டும் என்பதும் அதற்கு ஏன் பெரும் பணம் தேவைப்படுகிறது என்பதும் சாமானியனின் கேள்வி. அடுத்து பத்திரப்பதிவுத் துறை. பத்திரப்பதிவு அலுவ்லகத்துக்குச் சென்றாலே எந்த ஆவணமாக இருந்தாலும் ஒரு ஆவணத்துக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை லஞ்சம் கேட்கப்படுகிறது. அடுத்து வருவாய்த்துறை. ஒருவர் தனது சொந்த சொத்துக்கு பட்டா வாங்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.20,000 லஞ்சமாக எதிர்பார்க்கிறார்கள். இந்த லஞ்சப் பணம் இத்தோடு முடிந்து விடாது. இந்த 3 துறை அதிகாரிகளின் இயல்பு என்ன என்றால் தன்னிடம் வரும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதால் தன் மீது புகார் வந்து விடுமோ எவரும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து விடுவார்களோ என்னும் பயம் அவர்களுக்கு இருக்கும். எனவே தங்கள் லஞ்சப் பணத்தை இடைத்தரகர்கள் மூலம் வாங்குவார்கள். இந்த 3 அலுவலகங்களிலும் இதற்கென இடைத்தரகர்கள் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்று அரசு அதிகாரிக்கு அளிப்பார்கள். அவ்விதம் செய்யும் போது லஞ்சப் பணத்தில் 25 சதவீதத்தை சேர்த்துக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். பொதுமக்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச லஞ்சம் ரூ.15,000 என்றாகும். இந்த 3 அலுவலகங்களிலும் இருக்கும் இடைத்தரகர்கள் தினமும் லஞ்சப் பணம் வாங்கி அரசு அலுவலர்களுக்குக் கொடுப்பதால் பெரும் பணம் சேர்த்து விடுவார்கள். இவர்கள் அறிவிக்கப்படாத அரசாங்கம் போல் செயல்படுவார்கள். இந்த துறைகளில் பொதுமக்கள் அரசாங்கத்தை அணுக அரசாங்கத்தில் லஞ்சம் இன்றி தங்கள் காரியங்களைச் செய்து கொள்ள அரசாங்கம் ஏதேனும் முன்னெடுப்புகளை மேற்கொண்டால் அவற்றை நடைமுறையில் முறியடிக்க செய்ய வேண்டிய அத்தனையையும் செய்வார்கள். இந்த 3 துறைகளுடன் இன்னொரு முக்கியமான துறை கட்டிட அனுமதி.
சாமானியர்கள் அரசைத் தொடர்பு கொள்ளும் இந்த நான்கு துறைகளில் லஞ்சம் இல்லை என்னும் நிலையை அரசாங்கம் மேற்கொண்டால் மட்டுமே அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் அந்த அரசாங்கத்தைக் குறைந்தபட்சம் ஊழலைக் கட்டுப்படுத்த விரும்பும் அரசாங்கம் என்று கூற முடியும்.
நண்பரிடம் இந்த விஷயத்தைக் கூறினேன். பொதுமக்கள் இந்த 4 துறைகளில் நிலவும் லஞ்ச ஊழல் குறித்து தமிழக அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டுமே உறுதியான நடவடிக்கை இருக்கும். ஆனால் நம் தமிழக வழக்கம் இதைப் பற்றி சாமானியர்கள் பேசுவதில்லை ; தங்கள் வருத்தத்தையும் ஆற்றாமையையும் பதிவு செய்வதில்லை. இனி அதனை செய்ய வேண்டும் என்று சொன்னேன்.
பேருந்து கட்டணம் ரூ.1 விலை ஏறினால் அதனை மக்கள் பெரிதாகப் பார்க்கிறார்கள். தான் வாங்கிய மனையைப் பதிவு செய்ய ரூ.25,000 ஒரு குடிமகன் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதே தமிழக சாமானியர்களின் ஆகப் பெரிய பிரச்சனை.
நண்பருக்குப் பொறுமையாக இந்த விஷயங்களைச் சொன்னேன்.
தமிழக அரசியலில் இனி இந்த விஷயங்கள் அரசியல் விஷயங்களாக ஆக வேண்டும் ; அந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது என்பதை நண்பருக்குப் பதிவு செய்தேன்.
இந்த விஷயங்களை விரிவாகப் பேசி முடித்த போது தரங்கம்பாடி வந்து சேர்ந்திருந்தோம்.
கடற்கரையில் எங்கள் இருவருக்கும் நண்பரான ஒருவரைக் கண்டோம். குடும்பத்துடன் காரில் வந்திருந்தார். இன்னும் 4 தினங்களில் பள்ளி மறுதிறப்பு இருப்பதால் கடற்கரையே குழந்தைகளாலும் பெற்றோராலும் நிறைந்திருந்தது. கடலைக் காணும் போதும் கடலில் கும்மாளம் போடும் போதும் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சி மகத்தானது. கடற்கரைக் காட்சிகளில் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சியின் சித்திரம் மிக இனிமையானது.
கடற்கரையில் நின்றிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘’ஆபரேஷன் ககூன்’’ என்னும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பங்காற்றியவர். பல என்கவுண்டர் செயல்பாடுகளில் பங்கேற்றிருக்கிறார். மத்திய அரசாங்கம் ‘’ஆபரேஷன் ககூன்’’ தலைமை அதிகாரியான டிஜிபி விஜயகுமார் அவர்களுக்கு ‘’பத்மஸ்ரீ’’ விருது இந்த ஆண்டு அளித்திருப்பதைக் கூறினேன். ’’ஆபரேஷன் ககூன்’’ அணியில் இருந்தவர்கள் அவர் ‘’பத்மஸ்ரீ’’ பெற்றதற்காக ஒரு பாராட்டு விழாவை நடத்த இருப்பதாகவும் அதில் தான் பங்கேற்கப் போகிறேன் என்றும் கூறினார். டிஜிபி விஜயகுமார் எழுதிய ‘’Chasing the forest brigand'' என்ற நூலை வாசித்திருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். சமீபத்தில் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான அனூப் ஜெய்ஸ்வால் குறித்து எழுதப்பட்ட நூலை வாசித்ததையும் சொன்னேன். நாங்கள் இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
நடிகர் ஜோசஃப் விஜய்யின் கட்சி வெற்றி பெறும் எனக் கணித்திருந்தீர்களா என்று கேட்டேன். தி.மு.க ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதைக் கணித்ததாகவும் ஆனால் ஜோசஃப் விஜய் கட்சிக்கு இத்தனை வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கவில்லை என்றும் ஜோசஃப் விஜய் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்னும் கணிப்பு தனக்கு இருந்தது என்றும் கூறினார்.
இனி தமிழக அரசியல் எந்த திசையில் செல்லும் என்று அவருடைய கணிப்பைக் கேட்டேன்.
தமிழக அரசியலில் அண்ணாமலை பெரிய அளவில் வருவார் என்று சொன்னார்.
‘’அவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றவரான நீங்கள் அவ்விதம் நினைக்கிறீர்களா’’ என்று கேட்டேன். அது காரணமல்ல என்று கூறி ‘’அண்ணாமலை ஒரு மக்கள் தலைவர்’’ என்று சொன்னார்.
அவர் எங்கு வசிக்கிறார் என விசாரித்துக் கொண்டேன். அனூப் ஜெய்ஸ்வால் நூலை அவருக்குப் பரிசளிக்க விரும்புவதைக் கூறினேன். இருவரும் விடை பெற்றுக் கொண்டோம்.
எனது நண்பர்கள் ‘’ ரொம்ப நேரமாக ஒருத்தரிடம் பேசிக் கொண்டிருந்தீர்களே. அவர் உங்கள் நண்பரா ‘’ என்று கேட்டனர்.
‘’இப்போதுதான் சந்தித்தேன். நண்பர்களாகி விட்டோம்’’ என்று சொன்னேன்.
மாலை 7 மணி ஆனது. காரில் வந்திருந்த நண்பர் குடும்பம் காரைக்காலில் இரவு உணவு அருந்த திட்டமிட்டிருந்தனர். எங்களையும் அழைத்தனர். அங்கே சென்று உணவருந்தினோம்.
காரைக்காலிலிருந்து ஊருக்கு வர பல வழிகள் இருக்கின்றன. நண்பருக்கு ரியல் எஸ்டேட் சம்பந்தமாக ஒரு இடம் காட்ட வேண்டியிருந்தது. அதனை அவரிடம் முதலில் சொல்லாமல் ஒரு புதிய பாதை வழியாக அழைத்து வந்து இடத்தைக் காட்டினேன். அது இடம் பார்க்கும் நேரமல்ல. ஒரு இடத்தைப் பார்க்க வேண்டுமென்றால் சூரிய வெளிச்சத்தில் பகல் பொழுதில் தான் பார்க்க வேண்டும். நேற்றைய நிகழ்வு ஒரு விதிவிலக்கு. இடத்தைக் காட்டினேன். நண்பருக்குப் பிடித்திருந்தது. வீடு வந்து சேர்ந்த போது இரவு 10.10.
நேற்று மாலை 4 மணியிலிருந்து இரவு 10.10க்குள் 90 கி.மீ பயணம் நிகழ்ந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தேன்.