Tuesday 22 May 2018

ஞாபகங்களின் திரை
மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்வில்
உனது ஓவியம் ஒன்று
நினைவில் உறைந்திருந்தது
ஓர் ஆலய மண்டபத்தில்
தூணில் சாய்ந்து
வானத்தை நோக்கி
நீருக்காய் காத்திருந்தாய்
தவிப்பின் துக்கமும்
துக்கத்தின் தவிப்பும்
நீர் கோர்த்திருந்த விழிகளுடன்
அப்போது வீசிய காற்றில்
மெல்ல அசைந்தன
உன் சிறு தோடுகள்

அசையும் சிறு தோடுகளுடன்
வானம் பார்க்கும்
அசையா உன் முகம்
உறைந்திருந்தது
அனந்தத்தில்