Sunday 14 October 2018

புறப்பாடு

இன்று
அதிகாலை நடையில்
உடலெங்கும்
பூத்திருந்த
மரமொன்றைக் கண்டேன்

சிறு சிறு குருவிகள்
போல்
மலர்கள்
காற்றில்
நடுங்கி அமர்ந்திருந்தன

தீச்சுடரின்
ததும்பலென
மெல்ல மெல்ல
அசைவு

கரு வாய்
அகன்ற
மகவின் உடலின்
பிசுபிசுத்த
ஈரம்

நீண்ட
மிக நீண்ட
சாலையில்
நின்றிருக்கும்
அம்மரத்தின்
ஏகாந்த இனிமையாய்
புறப்பட்டுச் சென்றன
அவ்வப்போது
வானுக்கும்
அவ்வப்போது
மண்ணுக்கும்