Thursday 6 December 2018

சாகித்ய அகாதெமி விருது : எஸ். ராமகிருஷ்ணன்


எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை அறிந்ததும், ஒரு படைப்பாளி சமூகத்தின் பண்பாட்டுச் சூழலில் பலவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கிய படைப்பாளி தமிழ்ச்சூழலில் எத்தனை ஆண்டுகள் கடந்து சமூகம் அளிக்கும் கௌரவத்தைப் பெறுகிறார் என்று எண்ணிய போது மனம் ஒரு கணம் திகைத்தது. பல பழைய ஞாபகங்கள் மனதில் எழுந்தன. அவரது எழுத்துக்களை கல்லூரி நாட்களிலிருந்து வாசித்திருக்கிறேன். அட்சரம் இதழில் ‘’உலகில் காலூன்றாத எனது வீடு’’ என்ற கட்டுரையும் ‘’இரு குரல்கள்’’ என்ற சிறுகதையும் வாசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பாக்தாத் குண்டுவீச்சுக்கு ஆளான போது எஸ். ரா, ‘’ஷீரசாத் கதை சொல்வதை நிறுத்தி விட்டாள்’’ என்று எழுதினார்.

தமிழ் சிற்றிதழ் வாசகனான நான், ஆனந்த விகடனில் ஜெயமோகன் ‘’சங்கச் சித்திரங்களும்’’ எஸ். ராமகிருஷ்ணன் ‘’துணையெழுத்தும்’’ எழுதிய போது அவற்றைத் தொடர்ந்து வாங்கி தொடர் வெளியாகும் பக்கங்களைக் கத்தரித்து வைத்திருந்து தொடர் நிறைவுபெற்றதும் அவற்றைப் பைண்ட் செய்து கொண்டேன். பென்னி குயிக் குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒரு கட்டுமானப் பொறியாளராக என்னால் மறக்க இயலாதது.

‘’உப பாண்டவம்’’ நாவல் வெளியான போது, அதை வாசித்த ஒவ்வொரு நாளுமே பெரும் பரவசத்தாலானது. ‘’ஒரு சொல்லாகத்தான் எனக்கு மகாபாரதம் முதலில் அறிமுகமானது’’ என்ற முன்னுரையிலிருந்தே அந்த நாவல் துவங்கி விட்டதாக எண்ணுவேன். ‘’துரியோதனன் இன்னும் யுத்த களத்திற்குள் பிரவேசிக்கவில்லை எனப் பதற்றமுறும் மனிதர்களில்’’ நானும் ஒருவனானேன். டெல்லியின் இந்திய இராணுவ குதிரைப்படையும் ஹரித்வாரின் படித்துறைகளும் ஒரு கனவாகவே அகத்தில் ஆழ்ந்தது.

உலக இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இளம் வாசகர்களுக்கு வழிகாட்டப் போகிறவை. இந்தியாவின் பண்பாட்டுச் சாதனைகள் குறித்தும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ் மக்கள் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அவரது பயணக்கட்டுரைகளின் ஜீவனாக இருப்பது இந்திய ஒருமைப்பாடே. மண்ணும் மனிதர்களும் அவரது பயணக்கட்டுரைகளில் பதிவாகும் விதம் அலாதியானது.

கல்வி குறித்து அவர் எழுதியுள்ள விஷயங்கள் சமூகத்தாலும் அரசாலும் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

வாழ்த்துக்கள் திரு. எஸ். ராமகிருஷ்ணன்