Saturday 16 March 2019

மனிதர்கள்
பல விதங்களில்
பல வடிவங்களில்
அடிக்கடி கூடிவிடும்
மாநகரில்
பெரும்பாலான முகங்கள்
எதையோ
எங்கேயோ
எப்போதோ
நினைத்துக் கொண்டிருக்கின்றன
நெசவாளிகள்
தெருவில்
இழுத்துக் கட்டியிருக்கும்
பட்டு நூல் போல்
முகங்களின் மையங்கள்
எங்கெங்கோ
இழுக்கப்பட்டுள்ளன
அப்பின்னல்
ஒரு சிலந்தி வலையாகிறது
ஒரு தடாகத்து தாவரக் கொடியாகிறது
ஒரு தொங்கு ஊஞ்சலாகிறது
வலைக்கு
கொடிக்கு
ஊஞ்சலுக்கு
மேலே
பெரிய வானம் இருந்தது
அதில் 
அப்போது
ஒரு வண்ணத்துப்பூச்சி
சிறகடித்தது