Wednesday, 30 August 2023
நான்கு நண்பர்கள்
Sunday, 27 August 2023
சிவசக்தி
Wednesday, 23 August 2023
கண்டடைதல் ( நகைச்சுவைக் கட்டுரை)
கட்டுமானப் பணியிடத்துக்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் தான் அதனைக் கட்டி முடித்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும். அதன் முன் என் ஹீரோ ஹோண்டா வாகனத்தை நிறுத்தி விட்டு பணியிடத்துக்குச் செல்வேன். இதற்கும் அதற்கும் 20 அடி தூரம். பணியாளர்களும் தங்கள் வாகனங்களை அங்கே நிறுத்தியிருப்பார்கள்.
கட்டுமானப் பணியாளர்கள் பணி துவங்கிய நாளிலிருந்தே என்னிடம் ‘’சார் ! புது பைக் வாங்குங்க. இந்த வண்டி ரொம்ப பழசா இருக்கு’’ என்று கூறிக் கொண்டேயிருப்பார்கள். நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். பணி நிகழும் காலங்களில் வீட்டிலிருந்து பணியிடம் அங்கிருந்து மேலும் சில இடங்கள் பின்னர் மீண்டும் வீடு என இருக்கும் போது பெட்ரோல் குறைவாகவே ஆகிறது. பணி இல்லாமல் இருக்கும் காலங்களில் அதிகம் செல்வாகிறது. இது என் மனப்பிராந்தியா எனத் தெரியவில்லை.
இன்று காலை வழக்கமாக வண்டியை நிறுத்திய இடத்தில் ரொம்ப நேரம் கழித்துப் பார்க்கும் போது வண்டியைக் காணவில்லை. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அங்கும் இங்கும் தேடினேன். பணியாளர்களிடம் சொன்னேன். பணியிடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் தேடிப் பார்த்தோம். யாராவது எடுத்துச் சென்றிருப்பார்களா என்ற ஐயம் மனதைக் கவலைக்குள்ளாக்கியது.
பணியிடத்திலிருந்து சிறு தொலைவில் ஒரு கடை உள்ளது. அங்கு காலை சென்றிருந்தேன். அங்கு சென்று பார்த்தேன். அதன் வாசலில் வண்டி நின்றிருந்தது. பணியிடத்துக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
பணியாளர்கள் சொன்னார்கள். ‘’சார் ! வண்டி காணாமல் போயிருந்தா நீங்க புது வண்டி வாங்க வேண்டி வந்திருக்கும்னு நினைச்சோம். நாங்க நினைச்சது நடக்காம போயிடுச்சு சார் ‘’.
Sunday, 20 August 2023
பணியிடம்
ஊரில் ஒரு கட்டுமானப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். கட்டுமானப் பணி நடைபெறும் இடம் என்பது பல பணியாளர்கள் தங்கள் தீவிரமான உடல் உழைப்பை அளித்துக் கொண்டிருக்கும் இடம். அவ்வாறு பலர் தீவிரமாகப் பணியாற்றும் போது அந்த இடத்தின் தன்மை என்பது இயல்பான நிலையிலிருந்து உயர் நிலை நோக்கி சென்றிருக்கும். ஒரு கால்பந்து மைதானம் போல. ஒரு வாலிபால் மைதானம் போல. எனவே கட்டுமானப் பணியிடத்தில் இருக்கும் போது அந்த இடத்தில் இருப்பவர்கள் மனமும் உடலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இரும்புப் பட்டறை உற்பத்திப் பட்டறை இரு சக்கர வாகனப் பட்டறை ஆகிய இடங்களிலும் இந்த தன்மையை கண்கூடாக உணர முடியும். கட்டுமானப் பணியிடத்துக்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்தோம் என்றால் பணி முன்னேறிச் செல்லும் வேகம் நம் மனதிலும் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள முடியும்.
கட்டிடங்கள் ஒரு வடிவத்துக்குள் அமைபவை. மனம் வடிவமின்மையை தன் இயல்புகளில் ஒன்றாகக் கொண்டது. எனினும் மாபெரும் வடிவமின்மையில் வடிவங்களை அமைத்து விட முடியும். ஸ்தூலம், சூட்சுமம் என்று இரு நிலைகள் உண்டு. மனம் சூட்சுமமானது. கட்டுமானம் ஸ்தூலமானது. இவை இரண்டுக்கும் இடையே ஏற்படும் ஒத்திசைவே கட்டிடப் பணி. ’’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்’’ என்னும் கண்ணதாசன் வரியோடு இதனை சேர்த்து யோசிக்கலாம்.
காலையில் எழுந்ததும் ஒரு வாளியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறேன். முதல் நாள் நடந்த செங்கல் கட்டுமானப் பணி அனைத்தின் மீதும் நீர் ஊற்ற வேண்டும். வெயில் வருவதற்கு முன்னால் அவ்வாறு நீரை ஊற்றினால் அது நீண்ட நேரம் காயாமல் இருக்கும். ஒரு ஹேண்ட் பம்ப் இருக்கிறது. அதை இயக்கி வாளியில் நீர் நிரப்பி முழுதும் நீர் ஊற்றுவேன். பணியாளர்கள் பணிக்கு வர காலை 9 மணி ஆகும். அவர்கள் வந்ததும் மீண்டும் ஒரு முறை நீர் ஊற்றச் சொல்வேன். பின்னர் பணி துவங்கும். இன்ன பணி என வரையறுத்துச் சொல்ல முடியாது. ஆனால் ஏதேனும் பணி இருந்து கொண்டே இருக்கும். சிறியதிலிருந்து பெரியது வரை. கட்டுமானப் பொருட்களை ஆர்டர் செய்வது, நேரத்துக்கு அவை வந்து சேர்வதை உறுதி செய்வது, அவ்வப்போது தேவைப்படுபவற்றை வாங்கித் தருவது என ஏதேனும் பணிகள். பணியிடத்தில் இருப்பதே வேலை என்றாகி விடும். பணியிடத்தில் நாம் இருந்தாலே பணியோட்டம் சீராக இருக்கிறது என்பதை உறுதி செய்து விட முடியும்.
கட்டுமானப் பணியின் சிறப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அது நிறைவடையும் என்பதே. நிறைவு பெற்றதும் அடுத்த பணி. மீண்டும் ஒரு புதுத் துவக்கம்.
பணியிடத்துக்கு அருகில் சிறிய தொன்மையான சிவாலயம் ஒன்று உள்ளது. காலையில் அங்கு செல்வேன். எந்நாட்டவர்க்கும் இறைவன் முன் அடி பணிவேன். எல்லாமாகவும் இருப்பவன் அவனே.
Monday, 14 August 2023
பெரும் மாற்றங்கள்
Friday, 11 August 2023
நிலமும் மொழியும்
எழுத்தாளர் ஜெயமோகன் இந்திய நிலத்தில் பெரும் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பரிந்துரைப்பதுண்டு. அதாவது, எந்த நிலம் நோக்கி நாம் செல்ல விரும்புகிறோமோ அந்த நிலத்தின் இலக்கியம் ஒன்றை வாசிக்க வேண்டும். ஒரு படைப்பாளியின் மொழியில் வெளிப்படும் நிலம் நம் அகத்தில் நிறைந்ததன் பின் அந்த நிலத்துக்கு நாம் செல்வோமோயின் அந்த அனுபவம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதுடன் அந்த நிலம் நம் நிலம் என்னும் உணர்வை உருவாக்கித் தரும்.
நான் இந்திய நிலத்தில் கணிசமான பகுதிகளில் பயணித்திருக்கிறேன். என் பயணத்திற்கு முன் பெரும்பாலான இந்திய நாவல்களை வாசித்திருந்தேன். ‘’கண்ணீரைப் பின்தொடர்தல்’’ நூலில் ஜெயமோகன் அளித்த பட்டியலில் உள்ள கணிசமான நாவல்களை வாசித்திருந்தது எனது இந்தியப் பயணத்துக்கு பெரும் துணை புரிந்தது.
கேரள நிலம் எனில் தகழியின் ‘’செம்மீன்’’ அல்லது கோவிலனின் ‘’தட்டகம்’’ , கர்நாடகப் பிராந்தியம் என்றால் சிவராம காரந்தின் ‘’மண்ணும் மனிதரும்’’ பைரப்பாவின் ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’. மராட்டியத்துக்கு வெங்கடேஷ் மாட்கூல்கர் ( பன்கர்வாடி நாவல்) . ராஜஸ்தான் , உத்திரப் பிரதேசம் என்றால் சதுரங்கக் குதிரைகள் நாவலின் கிரிராஜ் கிஷோர் சொற்கள் வழியாகவே அவை நினைவில் பதியும். உத்திரப் பிரதேசத்தின் மைய நிலத்துக்கு குர் அதுல் ஐன் ஹைதரின் சொற்கள். தமிழ் எழுத்தாளர் அஜிதனின் மொழியில் ’’மைத்ரி’’ வாசித்து விட்டு உத்தரகண்ட் செல்வோமெனில் அது அளிக்கும் உணர்வே தனி.
இந்த நிலங்களுக்கு நான் சென்ற போது அந்த மொழியில் நான் வாசித்த ஆசிரியர்களின் சொற்களில் தீட்டப்பட்டிருந்த கிராமங்களும் நகரங்களும் யதார்த்தத்தில் கண் முன் எழுந்து வந்தன. அவ்வாறு எழுந்து வந்த போது இந்த ஊர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை ; நான் எப்போதோ வசித்த ஊர்கள் என்ற எண்ணம் உருவானது அந்த நிலங்களை அகத்தில் மிக அணுக்கம் கொண்ட ஒன்றாக உணர வைத்தது.
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். நண்பரிடம் ஒரு திருஷ்டாந்தம் சொன்னேன்.
’’நண்பரே ! தமிழகம் காண பஞ்சாபிலிருந்தோ ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்தோ ஒருவர் வருகிறார். தமிழகம் காண அவர் வாசிக்க வேண்டிய நாவல் அல்லது நாவல்கள் என எவற்றை அவருக்குப் பரிந்துரைக்க வேண்டும்’’ என்ற வினாவை எழுப்பினேன்.
நண்பர் அமைதியாக யோசித்தார்.
‘’இது ஒரு திருஷ்டாந்தம்தான் எனவே இன்று வரை ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் நிகழும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உங்கள் தெரிவுகளைத் தெரிவியுங்கள் ‘’ என்று நண்பரிடம் சொன்னேன்.
நண்பரின் மௌனம் கலையவில்லை.
என் மனம் அதற்குள் சர சர என யோசித்திருந்தது. நான் முதலில் சொன்னேன்.
’’தமிழ் நிலமும் தமிழ் அகமும் அறிய எவரும் முதலில் வாசிக்க வேண்டிய நாவல் கொற்றவை. அதன் பின் விஷ்ணுபுரம். அதற்குப் பின்னால் வெண்முரசு’’
இந்த மூன்று நாவல்களை வாசித்து விட்டு ஒருவர் தமிழகத்தில் பயணிப்பார் எனில் அவரால் தமிழ் அகத்தையும் தமிழகத்தையும் அணுகி நெருக்கமாக அறிய முடியும்.
நான் கூறியவை நண்பர் மனத்தில் பல்வேறு விஷயங்களை கிளறி எழச் செய்திருக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். நண்பரிடம் இந்த பட்டியலில் ஜெயமோகன் அல்லாத மற்ற படைப்பாளிகளின் நூல்கள் எவை எவை சேரக் கூடும் என்று கேட்டேன்.
பின்னர் நான் இரண்டு நூல்களைக் கூறினேன். கி. ராஜநாராயணனின் ‘’கோபல்ல கிராமம்’’ மற்றும் சுந்தர ராமசாமியின் ‘’ஒரு புளியமரத்தின் கதை’’
நாடக மேடை
Monday, 7 August 2023
உலகங்கள்
Friday, 4 August 2023
அழகிய மரம்
Wednesday, 2 August 2023
பயிற்சி அனுபவம்
01.01.2023லிருந்து நிகழ்ந்து வரும் 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இதுவரை 365 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இதைப் போல் இன்னும் இருமடங்கு வாசிக்க வேண்டும் ; இலக்கை எட்ட. மூன்றில் ஒரு பாகத்தை நிறைவு செய்ததில் பெற்ற பயிற்சி அனுபவம் எஞ்சும் தூரத்தைக் கடக்க உதவும் என்பதால் அதனை தொகுத்து வகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
(1) ஜனவரி 1 அன்று சவால் துவங்கிய போது ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்பதாக இலக்கு இருந்தது. தினம் ஒரு மணி நேரம் என உறுதி செய்து கொண்டதை தினம் 3 மணி நேரம் என வகுத்திருந்தால் வாசிப்பு சவாலில் பாதி எட்டப்பட்டிருக்கும். இப்போது இலக்கை எட்ட தினம் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
(2) வாசிப்பு சவாலின் ஆரம்ப நாட்கள் மிகவும் முக்கியமானவை. சராசரி வாசிப்பை ஆரம்ப நாட்க்ளில் துவங்கினோம் என்றால் இலக்கை எளிதில் எட்டலாம்.
(3) அதிகாலை நேரம் மட்டுமே முழுமையாக நம் கைகளில் உள்ளது. பகல் பொழுதை அன்றாடப் பணிகள் எடுத்துக் கொள்ளும். இரவு உணவை சற்று முன்னரே உண்டு அதன் பின் சில மணி நேரம் வாசிக்க நேரத்தை உண்டாக்கிக் கொண்டால் நலம்.
(4) லௌகிக வாழ்க்கையில் நாம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். திட்டமிடுகிறோம். லௌகிகத்துக்கு அப்பால் நாம் முன்னெடுக்கும் விஷயங்களிலும் லௌகிகத் திட்டமிடுதல்களின் தாக்கம் இருக்கும். வழக்கமான மனநிலையில் நாம் எண்ணியது நடவாமல் போனால் அதனைத் தோல்வி எனக் கருதுவோம். அவ்வாறு அல்ல. அதனை ஓர் அனுபவமாகக் கொண்டு முன்செல்ல வேண்டும்.
வாசிப்பு சவால் இன்று தான் தொடங்குவதாக எண்ணுகிறேன். டிசம்பர் 31க்குள் 746 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது தான் சவால்.
1111 மணி நேர சவாலில் 210 நாட்கள் தினமும் குறைந்த பட்சம் 1 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இப்போது 155 நாட்கள் தினமும் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும். ஏழு மாதப் பயிற்சியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த 5 மாதத்தில் செயல்பட வேண்டும்.
இந்த 7 மாத அனுபவத்தில் இருந்து செய்தது செய்யத் தவறியது ஆகியவற்றை அடையாளம் கண்டு முன்னகர வேண்டும்.
மீண்டு எழுவோம் என நம்பிக்கை கொள்ளுதல் எப்போதும் சிறப்பானது.