Thursday, 29 January 2026

வடக்கும் தெற்கும்

இன்று காலை சிதம்பரம் சென்றிருந்தேன். நண்பர் ஒருவரைச் சந்திக்க. சமீபத்தில் சிறப்பான முதலீட்டு யோசனை ஒன்று மனதில் உதித்தது. அதனைத் துல்லியமாகச் செயலாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டேன். இந்த விஷயத்தை ஒத்த மனப்பான்மையும் ஒற்றுமையில் நம்பிக்கையும் கொண்டவர்கள் சேர்ந்து சிந்தித்தால் சேர்ந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதால் நண்பரைச் சந்தித்து விபரம் கூறினேன். நண்பர் நான் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டார். பரிசீலிக்கிறேன் என்று கூறினார். காலை 6 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்ட நான் 12 மணிக்கு ஊர் திரும்பினேன். இன்று காலை 11 மணி அளவில் திருவாரூரில் ஒருவரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன். அவருக்கு 11 மணிக்கு ஃபோன் செய்தேன். அவர் மதியம் 3 மணிக்கு வரச் சொன்னார். 

பனி படர்ந்திருக்கும் சூழலில் காலையில் பயணித்தது சிறு உடற்சோர்வை அளித்தது. மதிய உணவருந்தி விட்டு அலாரம் 15 நிமிடத்துக்கு வைத்து விட்டு உறங்கி விட்டேன். அலாரம் அடித்ததும் எழுந்து திருவாரூர் கிளம்பினேன். சென்ற விஷயம் சுபமங்களமாக நிகழ்ந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்பான பணி. 

வடக்கும் தெற்குமாக இன்று மட்டும் 160 கி.மீ பயணம்.