Monday, 16 March 2026

என்னை மன்னித்து விடுங்கள் (ஹாஸ்யம்)

சென்னையில் வசிக்கும் ஒருவரை ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது சொத்து ஒன்றை விற்பனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். நான் முயற்சிகள் மேற்கொண்டேன். எனினும் விற்பனை நிகழவில்லை. மதிப்பு மிக்க சொத்துதான் என்றாலும் விற்பனை கை கூடவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் அதனை அப்படியே நிலுவையில் வைத்து விட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கலாம். அதற்கென ஒரு நேரம் அமையும் என காத்திருக்க வேண்டும்.  

நாளாக நாளாக அந்த சொத்து குறித்த விஷயமே என் நினைவில் இல்லை. அதன் அகல நீளங்கள், பரப்பளவு, விலை எதுவுமே. அமைவிடம் மட்டும் நினைவில் இருந்தது. 

அவர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னால் ஃபோன் எடுத்து பேச முடியவில்லை. பலமுறை அழைத்தார். ஒருமுறை கூட என்னால் ஃபோன் எடுக்க முடியவில்லை. எனக்கு மனதில் வருத்தமாக இருந்தது. அவருக்கு ‘’நாளை அழைக்கிறேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். இரண்டு நாள் கழித்து அவரிடம் பேசினேன். அவரிடம் சொன்னதைக் கூறும் முன் அலைபேசி தொடர்பாக எனது அபிப்ராயங்களைத் தெரிவித்து விடுகிறேன். அதனை எவ்விதம் காண்கிறேன் அணுகுகிறேன் என்பதை தெரிவிக்கிறேன். 

(1) அலைபேசி எனப்படும் அதாவது எனது அலைபேசி எனப்படும் உபகரணம் என்னுடையது. அதை நான் ’’சைலண்ட்’’ ஆக வைத்திருக்க முடியும். சுவிட்ச் ஆஃப் செய்ய முடியும். எனது எண் 100 பேரிடம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் அழைத்ததும் அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவானால் அந்த அலைபேசி எனது அலைபேசியாக இராது. அந்த 100 பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் எனது எண் தெரிய இன்றைய இணைய வசதி மூலம் வாய்ப்பு உண்டு. அவ்வாறெனில் என் அலைபேசி என்னைத் தவிர மற்ற 700 கோடி பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? ஒவ்வொருவரும் என்னை அழைத்தால் என்னை அழைக்கும் எல்லா அழைப்புகளையும் நான் ஏற்றால் நான் இன்னும் 13,000 ஆண்டுகள் வாழ வேண்டும். அந்த 13,000 ஆண்டுகளும் ஊன் உறக்கம் இன்றி ஃபோன் பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஒரு ஃபோனுக்கு ஒரு நிமிடம் என்று பார்த்த கணக்கு இது. 

(2) அடியேன் படைப்பூக்க மனநிலை கொண்டவன். என் மனம் படைப்பூக்கமானது. அதனைப் பராமரிக்க வேண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனில் அலைபேசி அழைப்புக்கு என் மனத்தை செலுத்திக் கொண்டிருக்க முடியாது. 

(3) எனது வணிகம் சார்ந்து எனக்கு அலைபேசி தகவல் தொடர்பில் உதவுகிறது. எந்த அளவு தேவையோ அந்த அளவு எனக்கு போதும் என நான் எண்ணுகிறேன். 

(4) அலைபேசி எனக்குத் தொந்தரவு தான். ஜி.எஸ்.எம் ஃபோனே எனக்குத் தொந்தரவு தான். என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. வாங்கப் போவதும் இல்லை. 

(5) ’’இரு கோடுகள்’’ தத்துவம் என ஒன்று உண்டு. வரையப்பட்ட ஒரு கோட்டை அழிக்காமல் சிறிய கோடாக்க வேண்டும் என்றால் அதன் பக்கத்தில் முன்னர் இருந்த கோட்டை விட அளவில் பெரியதாக இன்னொரு கோட்டை வரைய வேண்டும். அப்போது முதல் கோடு சிறியதாகி விடும். 

அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இப்போது என்னிடம் இருக்கும் அலைபேசியை ரீ-சார்ஜ் டாப் அப் செய்யாமல் இருந்து விடப் போகிறேன். என்னிடம் அலைபேசியே இல்லை எனும் போது நான் அலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்னும் புகார் இருக்காது.  

நான் பேசிய நண்பரிடம் ,’’சார் ! நான் ஃபோனை ரொம்ப மினிமமா யூஸ் பண்றவன். நான் ஃபோன் எடுக்கலண்ணு வருத்தப்படாதீங்க. என்னை மன்னித்து விடுங்கள். செல்ஃபோன்ல எனக்கு கால் பண்ணாதீங்க. எஸ் எம் எஸ் அனுப்புங்க. மெஸேஜ் பாத்ததும் நான் கால் பண்றன்’’ என்றேன்.