40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் நண்பர் இதனை என்னிடம் கூறினார்.
பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளிடம் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கம். பெரிய கட்சிகள் பெரிய அளவில் கையில் பணம் வைத்திருக்கும். சிறிய கட்சிகளிடம் அந்த அளவுக்கு பணம் இருக்காது. எனவே தேர்தல் செலவுக்கு கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் தொகுதிக்கு இவ்வளவு என தொகையை அளிப்பார்கள். இந்த தொகை அளிக்கப்படுவதும் பெறப்படுவதும் கமுக்கமாக நடைபெற வேண்டிய செயல்கள். எனது நண்பர் சிறிய கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர். ஆகவே தலைமை அவரை அவருடைய வாகனத்தில் பெரிய கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று அவர்கள் அளிக்கும் தொகையை பெங்களூரில் இருக்கும் வணிக நிறுவனம் ஒன்றில் அளித்து விடுமாறும் அவர்கள் அத்தொகையை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு சிறிய கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளரிடம் அந்தந்த தொகுதிகளில் பட்டுவாடா செய்து விடுவார்கள் என்றும் ஏற்பாடு. ‘’ஹவாலா’’ வழிமுறை போல. முக்கியமான செயல் என்பதால் தனியராக செல்வது உகந்த வழிமுறை அல்ல என்பதால் இந்த செயல்பாட்டில் உடனிருக்க இன்னொருவரையும் கூட்டிச் செல்ல கூறியிருக்கிறது தலைமை. நண்பர் இந்த விஷயங்களுக்கு நன்றாகப் பழகியவர். எனவே சென்னையில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் பெரிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணம் நிரம்பிய சூட்கேஸை பெற்றுக் கொண்டு சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் பெங்களூர் நோக்கி பறந்து கொண்டிருக்கிறார். எத்தனை சீக்கிரம் வேலை முடிகிறதோ அத்தனை சீக்கிரம் நிம்மதி என வாகனத்தை எவ்வளவு வேகமாக இயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக இயக்கியிருக்கிறார். வண்டி இன்னும் பூவிருந்தவல்லியைத் தாண்டவில்லை.
நண்பரின் உடனிருந்தவர் ‘’அண்ணன்’’ என அழைத்திருக்கிறார்.
வாகன இயக்கத்தில் மும்முரமாக இருந்த நண்பர் சாலையிலிருந்து கண்களை அகற்றாமல் ‘’என்னப்பா’’ என்றார்.
‘’அண்ணன் ! சூட்கேஸ்-ல எவ்வளவு பணம் இருக்கும்?’’
நண்பர் மௌனமாக இருந்திருக்கிறார்.
‘’எங்கேயாவது போய்டுவோம்ணன். இந்த பணத்தை நீங்களும் நானும் பாதிப்பாதி எடுத்துப்போம். அஞ்சு பத்து வருஷம் எங்காவது ஃபாரின் போய்டுவோம். அப்புறமா திரும்ப வந்தா யாரும் நம்மள ஒன்னும் செய்ய முடியாது’’
‘’உலகத்துல நாம எங்க இருந்தாலும் தேடி வந்துடுவாங்க. கொஞ்சம் அமைதியா இரு.’’ எனக் கூறி விட்டு எப்போது பெங்களூர் சென்று சேருவோம் என சென்று சேர்ந்திருக்கிறார்.
நண்பர் என்னிடம் சொன்னார். ‘’கட்சில தொண்டர்கள் ஆயிரக்கணக்கா இருக்காங்க. தலைமை நம்பிக்கைக்கு உரியவர்னு யாரை ரொம்ப அதிகமா நம்புதோ அந்த ஆளே இப்படி. அப்ப மத்தவங்கலாம் எப்படின்னு யோசிச்சுப் பார்த்தால்’’ என்றார்.