Monday, 16 March 2026

கிழக்கும் மேற்கும் (ஹாஸ்யம்)

எனது நண்பரின் வீடு மிகப் பெரியது. 4 ஏக்கர் பரப்பு கொண்டது. அதன் மையப்பகுதியில் 2000 சதுர அடி கொண்ட கட்டிடம் உள்ளது. 4 ஏக்கர் பரப்பையும் சுற்றிச் சுற்றுச்சுவர். 1990ம் காலகட்டத்தைச் சேர்ந்த பெரிய இரும்பு கேட். உள்ளே கார் பார்க்கிங் செய்ய பரந்த பரப்பு. வேப்ப மரத்தின் அடியில் நான்கு சிமெண்ட் பெஞ்ச். அதில் 20 பேர் அமர்ந்து சம்பாஷிக்க முடியும்.  வீட்டுக்கு மிகப் பெரிய வாசல். அதில் கோலமிடப்பட்டு எப்போதும் இரு குத்து விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்ததும் இடது புறம் அலுவலக அறை. அது வீட்டின் புழக்கத்துடன் இணைந்ததாக இருக்காது . தனியாக இருக்கும். 

வீடு எந்த அளவு சிறியதோ அந்த அளவு அதன் உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என அறிய முடியும். அளவில் பெரிதாகிக் கொண்டே போனால் உள்ளே இருப்பவர்களை நாம் அறிய முடியாது. 

எனது நண்பரின் வீடு அமைந்திருப்பது ஒரு கிராமத்தில். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. ஒரு வீட்டுக்குச் சென்றால் அந்த வீட்டிலிருப்பவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்குள் செல்ல மாட்டேன். வீட்டு வாசலில் இருந்து ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என்று கூப்பிடுவேன். அவர்கள் சத்தம் கேட்டு வந்தால் மட்டுமே உள்நுழைவேன். அது வரை வாசல் தான். எனது அனுபவம் தமிழகத்தில் 100க்கு 99 சதவீத இல்லங்களில் அழைப்பு மணிகள் வேலை செய்வதில்லை. வீடு கட்டும் போது ஒரு ஆர்வத்தில் சத்தம் பெரிதாக இருக்கும் விதமாக அழைப்பு மணி ஒலியை அமைத்து விடுவார்கள். கொஞ்ச நாட்களில் ‘’கண்ட்ரோல் சுவிட்ச்’’ ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். இப்போது கூரியர்காரர்கள் கூட வாசலில் நின்று அழைப்பதில்லை. அலைபேசியில் அழைக்கிறார்கள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்காக கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் நேராக சென்றிருக்கிறேன். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என அழைத்திருக்கிறேன். பல வீடுகளில் வெளியில் இருக்கும் எனக்கு உள்ளே டி.வி ஓடிக் கொண்டிருக்கும் ஒலி கேட்கும். உச்ச ஸ்தாயியில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கும். அதைத் தாண்டி என் குரல் ஒலிக்க வேண்டும். 

தமிழக இல்லங்களில் எவரும் ஒருவர் வாசலில் தான் நின்று அழைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவர் வசிப்பிடத்துக்குள் இன்னொருவர் அனுமதியின்றி நுழையக்கூடாது என்னும் நெறி உண்டு. என் மனதில் அந்த மேலை நெறி பதிந்து விட்டது. 

நான் நண்பரின் வீட்டிற்கு சற்று வெளிப்பக்கத்தில் இருக்கும் அலுவலக அறையில் அமர்ந்து கொள்வேன். இருப்பினும் நான் அங்கே அமர்ந்திருப்பது எவருக்கும் தெரியாது. பலர் மிக சகஜமாக அவர் வீட்டுக்கு செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். உறவினர்கள், அண்டை வீட்டுக் காரர்கள், பணியாளர்கள் என. என்னை அறிந்தவர்கள் என அவர்களில் எவரும் இருந்தால் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அறியாதவர்கள் என்னை கவனத்துக்குள் கொண்டு வரவே மாட்டார்கள். 

மக்கள் தொடர்பில் தேர்ச்சி உள்ளவன் எனினும் எனக்குள்ளும் சில சிறு தயக்கங்கள் இருக்கும். ‘’அலுவலக அறையில் இருக்கிறேன்’’ என நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புவேன். பெரிய அலுவலக அறை இருந்தாலும் நண்பர் மாடியில் இருக்கும் ஒரு அறையையே தன் அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்துவார். வாசலில் இருக்கும் அறைக்கு யாராவது வந்து கொண்டேயிருப்பதால் தனது பணியைச் செய்ய முடியவில்லை என. 

ஒவ்வொரு முறை செல்லும் போதும் பலர் இருக்கும் அந்த வீட்டில் என்னை அறிந்தவர் எவரும் இருந்தால் இயல்பாக இருக்கும் என நினைப்பேன்.