Friday, 20 March 2026

வருவாய் இலாகாவும் தபால் இலாகாவும்

பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இந்தியக் குடிகளிடமிருந்து அவர்கள் வசூலித்த நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருவாய் மூலமாக இருந்தது. எனவே தான் பிரிட்டிஷார் நிலவரி வசூல் செய்யும் இலாகாவுக்கு வருவாய் இலாகா எனப் பெயரிட்டனர். நாட்டின் மொத்த வருவாயில் 84 சதவீதம் வருவாய் இலாகாவிலிருந்து அரசுக்குக் கிடைத்தது. நில அளவை செய்யும் செயினுக்கு ‘’குந்தர் செயின்’’ என்று பெயர். அதன் நீளம் 66 அடி ( 20.12 மீட்டர்). ‘’குந்தர் செயின்’’ கையாள சற்று சிரமமாக இருந்ததால் அதனைப் பாதியாக்கி 33 அடி நீளத்தை அளக்கும் வகையில் ஒரு செயினை உருவாக்கினர். அதனை ‘’ரெவின்யூ செயின்’’ என்று கூறுவர். இன்றும் நிலம் அளக்க பயன்படும் கருவியாக உள்ளது.  
குடிமக்களிடமிருந்து விவசாயிகளிடமிருந்து வரிவசூல் செய்து - கலெக்ட் செய்து - கொடுப்பவரே கலெக்டர். மாவட்ட ஆட்சியர் இன்றும் கலெக்டர் என அழைக்கப்படுவது அதனால் தான். 


வருவாய் இலாகாவுக்கு சமானமாக பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த இலாகா தபால் இலாகா. நாட்டின் நிர்வாக வலைப்பின்னலுக்குத் தேவையான தகவல் பரிமாற்றத்தை தபால் இலாகாவே சாத்தியமாக்கியது. அரசின் தகவல் பரிமாற்றம் மட்டும் இன்றி சாமானிய பொதுமக்களின் தகவல் பரிமாற்றமும் தபால் இலாகாவால் சாத்தியமாயிற்று. 

எனக்கு சிறுவயது முதலே தபால் இலாகா மீது பெரும் ஆர்வம் உண்டு. ஒருவர் எழுதும் அஞ்சல் அட்டை பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்னொருவர் கைக்கு மிகச் சரியாகச் சென்று சேர்கிறது என்பதை நான் ஒரு பேரற்புதம் என்று கருதுவேன். ஒரு தபால் எழுதி அனுப்புவது என்பது ஒரு கலை . ஒரு பயிற்சி. தபால் எழுதுபவர்கள் தங்கள் கையாலேயே அஞ்சல் உறையில் அனுப்புநர் பெறுநர் முகவரி எழுதி தங்கள் கையால் உறையில் பசையிட்டு ஒட்டி தங்கள் கையாலேயே தபால் பெட்டியில் இட விரும்புகின்றனர். 

இன்று ஒரு கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். பணியில் இருந்தவர் ஓர் இளைஞர். வயது 25 இருக்கலாம். 2000க்குப் பின் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஒரு அஞ்சல் அட்டையோ அல்லது ‘’இன் லாண்ட் கடிதமோ’’ அல்லது ‘’அஞ்சல் உறை’’யில் கடிதமோ எழுதி அனுப்பி பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. அஞ்சல் உறை ஒன்றை அளித்தேன். உறையின் மேல் இடது பக்கம் எழுதப்படுவது ‘’அனுப்புநர்’’ முகவரி வலது பக்கம் எழுதப்படுவது ‘’பெறுநர்’’ முகவரி என்பது உலக வழமை. அதனால் நான் ‘’அனுப்புநர்’’ ‘’பெறுநர்’’ எனக் குறிப்பிடாமல் இரு முகவரிகளையும் எழுதியிருந்தேன். அஞ்சல் ஊழியரான இளைஞர் என்னிடம் ‘’சார்! இதுல எது ‘’ஃப்ரம்’’ எது ‘’டூ’’ என்று கேட்டார். விளக்கினேன்.