எனது நண்பன் சென்னையில் பணி புரிகிறான். அவனது மனைவி ஒரு சார்டட் அக்கவுண்டண்ட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் வந்திருந்தான். கோவிலில் ஸ்வாமியிடம் பிராத்தனை செய்து கொள்ள. அப்போது நான் உடன் சென்றிருந்தேன். (2024ம் ஆண்டு மே மாதத்தை ஒட்டி என்று ஞாபகம். நாங்கள் திருக்கருகாவூர் சென்று விட்டு பட்டீஸ்வரம், தாராசுரம் ஆலயங்களுக்கும் சென்றிருந்தோம். அப்போது தாராசுரத்தில் ஒரு தேர்தல் பரப்புரைக் குழு எங்களைக் கடந்து சென்றது. ) ஆலயம் வந்து விட்ட சென்ற சில வாரங்களில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் ஆனது. சென்ற வருடம் குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தியானதும் அவர்கள் குடும்பத்துடன் திருக்கருகாவூர் வந்திருந்தனர். கும்பகோணத்தில் தங்கியிருந்த அவர்களைக் காணச் சென்றிருந்தேன். நண்பனுடன் அவ்வப்போது உரையாடினாலும் அவன் வீட்டுக்கு வந்ததில்லை என்பது என் மனக்குறையாக இருந்தது. அதற்கான சூழல் சரிவர அமையவில்லை. இன்று நண்பன் மனைவி குழந்தை தீர்த்தன் மூவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆலயம் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இங்கே ஊரில் ரயில் ஏற வேண்டும். 15 நிமிடம் மட்டும் வீட்டுக்கு வந்து விட்டு செல்லவும் என்று சொன்னேன். கடைசி நிமிடம் வரை வரமுடியுமா என்னும் நிலை; எனினும் சமாளித்து வந்து விட்டனர். நீர்மோர் மட்டுமே தயாரித்து வைக்க முடிந்தது. தீர்த்தன் நீர்மோரை விரும்பிப் பருகியது மனதுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. தீர்த்தன் புஷ்டியாக இருக்கிறான். இருக்கும் இடத்தில் இனிமையை நிறைக்கிறான். அவன் வண்ணச் சீரடிகள் வீட்டில் பட்டது ஸ்ரீராமனும் கிருஷ்ணனும் வீட்டுக்கு வந்ததைப் போன்ற உணர்வை அளித்தது.