இந்தியா இன்றும் விவசாய நாடு. தங்கள் விளைநிலத்துக்கு அருகில் வீடமைத்துக் கொள்வது இந்திய விவசாயிகளின் வழக்கம். விவசாயிகளின் உபரி வருமானமே பன்னெடுங்காலமாக இந்திய நகரங்களின் தோற்றத்துக்கும் நிலைபெறலுக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் எப்போதுமே நிலம் ஒரு முதலீடு. பெரும் விலை மிக்கது. ஒருவர் தன் வாழ்நாளின் பெரும் பகுதி சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் கூட ஒரு 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்ட 2400 சதுர அடி மனையாக மாறி விடும். இந்தியர்கள் தங்கத்திலும் நிலத்திலும் மட்டுமே அதிகம் முதலீடு செய்கின்றனர். இது அனாதி கால நடைமுறை. அதனால் தான் நகரங்களிலும் பெருநகரங்களிலும் மனையும் வீடுகளும் பெரும் விலை விற்கின்றன ; வீட்டு வாடகையும் கூடுதலாக இருக்கிறது.
ஏன் நம் பிராந்தியத்தில் காலிமனைகள் வாடகைக்கு விடப்படுவதில்லை ? ஒருவருக்கு 2400 சதுர அடி மனையில் கட்டப்பட்டிருக்கும் வீடு மாதம் ரூ.6000 வாடகைக்கு தரப்படுகிறது என்றால் ஏன் ஒரு மனை ரூ.2000 வாடகைக்கு தரப்படக் கூடாது ? மனையின் விலை ஐம்பது லட்ச ரூபாய் என்றால் வீடு கட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவாகிறது. மனையை வாடகைக்கு விட்டால் வீடு கட்ட செலவிடப்படும் தொகை சேமிப்பாக அந்த நபருக்கு மிஞ்சும் அல்லவா?
ஒருவர் ஒரு மனையை வாடகைக்கு எடுத்து தன் சொந்த செலவில் மூங்கிலால் வீடு கட்டிக் கொண்டு 3 வருடமோ 5 வருடமோ குடியிருந்து விட்டு பின்னர் அந்தக் கூரை வீட்டை பிரித்து விட்டு ஏன் அடுத்த ஊருக்குச் செல்லக் கூடாது? கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மோட்டார் வாகனத்தில் நகர்த்திச் செல்லும் கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. இவை ஏன் நம் தேர்வாக இருப்பதில்லை? இவற்றை ஏன் நாம் பரிசீலிப்பதில்லை ?