Sunday, 31 May 2026

அதிதி

திதி என்பது நாளைக் குறிக்கும் சொல். பிரதமை தொடங்கி சதுர்தசி ஈறாக 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து எத்தனையாவது நாள் என்பதே திதி ஆகும். அமாவாசையிலிருந்து இரண்டாம் நாள் திவிதியை ஆகும். அமாவாசையிலிருந்து 30வது நாள் சதுர்தசி ஆகும்.  

இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இன்றி நம் வீட்டுக்கு வருபவரே அதிதி ஆவார். அதிதியைக் கடவுளுக்குச் சமமாக நினைக்க வேண்டும் என்கிறது நம் மரபு. ‘’அதிதி தேவோ பவ’’ என்பது மறை வாக்கியம்.  இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இல்லாமல் வரும் நண்பர்களும் உறவினர்களும் ( மித்ர பந்துக்கள்) அதிதி ஆக மாட்டார்கள். அவர்கள் மித்ர பந்துக்களே. 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. 

என்பது திருக்குறள். 

இன்று அலைபேசி சமூகத்தில் பெரும்பாலோனோர் கையில் இருக்கிறது. ஒருவரைச் சந்திக்க செல்லும் முன் வருகையை அறிவித்து விட்டு செல்ல வேண்டும் என்னும் வழக்கம் உருவாகியிருக்கிறது. வணிகத்துக்கு அது மிகவும் உகந்த செயல்பாடும் கூட. ‘’இடம் பொருள் ஏவல்’’ ஆகியவை முக்கியத்துவம் கொள்ளும் செயல்பாடு வணிகத்துக்குரியது. 

ஒரு நண்பனைச் சந்திக்க , ஓர் உறவினரைச் சந்திக்க, பரிச்சயம் உள்ள ஒருவரைச் சந்திக்க அலைபேசியில் கூறி விட்டு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்விதமாக பலரைச் சென்று சந்திக்கலாம் என இருக்கிறேன். 

திருச்சிராப்பள்ளியில் ஒரு நண்பர் இருக்கிறார் என்றால் வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ரயில்வே சந்திப்புக்கு டவுன் பஸ்ஸில் சென்று ரயில் பிடித்து திருச்சி சென்று அங்கே உள்ள டவுன் பேருந்தில் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமோ அங்கு சென்று நண்பனைச் சந்திப்பது. ஒரு மணி நேரம் மட்டும் அங்கே இருப்பது. அதன் பின் கிளம்பி சென்ற விதமாகவே ஊர் திரும்பி விடுவது. அந்தப் பயணத்தில் வேறு இடங்களுக்குச் செல்வதோ வேறு நபர்களைச் சந்திப்பதோ கிடையாது. அந்த நாள் அந்த பயணம் அந்த ஒரு நபருக்கு அந்த ஒரு குடும்பத்துக்கு மட்டும் தான். இவ்வாறான பயணங்களை நிகழ்த்த வேண்டும் என விரும்புகிறேன். 

யாரைக் காணச் செல்கிறோமோ அவர்கள் ஊரில் இல்லாமல் இருக்கலாம். வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். அவ்விதம் இருந்தால் அதனை அவ்விதமே ஏற்றுக் கொள்வது. அங்கே இருக்கப் போவது குறைந்தபட்சமாக ஒரு மணி நேரம் தான். 

இவ்விதமாக நிகழ்த்தும் பயணங்கள் குறித்து எழுதலாம் என இருக்கிறேன்.