பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகள் மேலும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகளை அதிகாரவர்க்க அதிகாரிகள் மனநிலை கொண்டவர்கள் என்று கூறி விட முடியும். அதிகாரவர்க்க அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளைப் போல பதவி 5 ஆண்டுகள் தான் என்னும் கட்டுப்பாடு இல்லை ; தமிழக அரசியல்வாதிகளுக்கு அது உண்டு என்பது அவர்களை மேலும் இறுக்கம் கொண்டவர்களாகவும் பதட்டம் மிக்கவர்களாகவும் ஆக்கி விடுகிறது. இன்றைய தமிழக அரசியல்வாதிகளில் இயல்பாகப் புன்னகைக்கக் கூடியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது எனது எண்ணம். அறுபது ஆண்டுகளாக தமிழக அரசியலில் பதவியில் இல்லாத காங்கிரஸை அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் காங்கிரஸைப் பதவிக்குக் கொண்டு வர பல முயற்சிகளை முன்னெடுத்தார். தேர்தலுக்கு முன் அவர் எடுத்த முன்னெடுப்புகள் இலக்கை நோக்கி 99 சதவீதம் சென்றன. 1 சதவீதத்தில் தான் எண்ணியதை எண்ணிய வண்ணம் எய்தாமல் தவற விட்டார். அப்போதும் அவர் புன்னகையுடனே இருந்தார். தேர்தலுக்குப் பின் நடிகர் ஜோசஃப் விஜய் கட்சியுடன் காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளித்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டதில் பிரவீன் சக்கரவர்த்தியின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கும் என்பதை எவரும் யூகிக்க முடியும். அவ்விதமான உரிமை கோரலே திமுக விடமிருந்து அதன் கூட்டணிக் கட்சிகளைப் பிரித்தது. தேர்தலில் பெரிய தோல்வியைக் கண்டிருந்த அவர்களுக்கு பிரவீன் தேர்தலுக்குப் பின்னும் இன்னொரு பெரிய இழப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ; புன்னகை மாறாமல். அசோகா பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருக்கிறார் பிரவீன். தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்லூரியில் வகுப்பெடுக்க அவர் தனது வகுப்பறைக்குள் நுழைந்த போது அவரது மாணவர்கள் சீட்டியடித்து சினிமாப் பாடல் ஒன்றைப் பாடி உற்சாகமாக வரவேற்கும் காட்சியை இணையத்தில் காண நேர்ந்தது. மாணவர்களின் உற்சாகத்தை அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் மேலும் உற்சாகமாக இருந்தது.
பிரவீன் ராஜ்யசபா உறுப்பினராவது மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள்.