Sunday, 22 December 2019


மாலை வானின் முதல் விண்மீன்
ஒளிரத் துவங்கும் கணத்தில்
உன் பாதங்கள்
மண் தொடுகின்றன
வான் பார்க்கிறாய்
வலசைப் பறவைகளை
அந்தி அமைதியை
குளிர்ப் பொழுதை
சிற்றகலின் சுடர் மின்னுகிறது
கருவறைத் தெய்வத்தின் முகத்தில்
காற்றில் கரையும் மணியோசை
இரவு என்பது எவ்வளவு நீண்டது
பிரிவைப் போல
நட்சத்திரங்கள் துணையிருக்கும் வெளியில்
உனது மௌனம்
நுண்மை கொள்கிறது
உயிரென

Friday, 20 December 2019

நீ எவ்வளவோ கொடுத்திருக்கிறாய்
சாமானியமான
மிகச் சாமானியமான
இந்த உலகில்
எந்த கணமும்
அற்புதக் கணமாகக் கூடும்
சாத்தியத்தை
நீ குறிப்புணர்த்தினாய்
தாகம் தணிக்க
விண் மேகங்கள்
அமிர்தமாய்க் கூட பொழியும்
என்பதைக் காட்டினாய்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு காலடியும்
சிறகசைப்பாய்
ஆவது
கண்டேன்

இந்த கணம்
இந்த உலகம் மீது
இந்த வாழ்க்கை மீது
இந்த மனிதர்கள் மீது
எல்லையற்ற நம்பிக்கை கொள்கிறேன்

Thursday, 19 December 2019

மறந்து போதல் என்பது என்ன
சம்பவங்களை மறக்க முடியும்
தேதிகளை மறக்க முடியும்
நினைவில் தப்பி
கிழமைகள் மறந்து போகும்
எடுத்து வைத்துக் கொள்ளாமல்
பொருட்களை மறக்க முடியும்

அன்பை எப்படி மறக்க முடியும்

Wednesday, 18 December 2019

ஓயாமல்
அலைவுறும்
துலாத் தட்டுகளில்
உன் முகத்தின் ஒளிக்கு
அடர்த்தியான இருண்ட இரவை
உன் மென்சிரிப்புக்கு
கனக்கும் மௌனத்தை
உன் அன்பிற்கு
தாங்கிக் கொள்ள இயலாத
பிரிவை
இணை வைக்கிறேன்

அவை
தன்னளவில்
எடை கூடுகின்றன
காலத்திற்கேற்றார் போல்
பருவத்திற்கேற்றார் போல்

எப்போதும்
ஓயாமல் அலைவுறுகின்றன
துலாத் தட்டுகள்

Tuesday, 17 December 2019

உன்னை எப்படி விட்டுச் செல்வேன்
தன்னந்தனிமையில்
நீர் துளிர்க்கும்
துயரம் தோய்ந்த முகத்துடன்
பிரிவினும்
கொடிது
விட்டுச் செல்லுதல்

Monday, 16 December 2019

பிரியங்கள் இருக்கின்றன
அப்படியே
அதிகரித்துக் கொண்டு கூட
அவை தெரிவிக்கப்படாமலேயே போகும்
சொற்கள் மௌனம் கொள்கின்றன
சொற்கள் சங்கடப்படுகின்றன
எப்போதும்
வெளியேறிச் செல்பவன்
பாரங்கள்
இம்முறை கனக்கின்றன

Sunday, 15 December 2019

உனக்காக

காத்திருந்த
ஆற்றுப்பாலத்தின் கீழே
சேற்று நிறத்தில்
பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது
வெள்ளம்

இன்றும்
அந்த அரசமரத்தின்
சிற்றகலில்
காற்றில் அலைகிறது
தீபம்
சுடரும் பிராத்தனைகளுடன்

பேருந்தில்
இறங்கும்
பள்ளிக்குழந்தைகள் குழாமில்
அடம் பிடிக்கும் குழந்தைகளில்
சிலர்
அமைதியான குழந்தைகள் ஆயினர்
புதிதாக
சில அடம் பிடிக்கும் குழந்தைகள்
இணைந்து கொண்டன

மாலையின் முதல் நட்சத்திரம்
எப்போதும் போல்
அழகாய்
மிக அழகாய்
இருக்கிறது

அந்திப் பொழுதில்
கவியும்
மென் சோகத்தில்

உன்னைப் பற்றிய
நினைவுகள்
சிதறிப் பரவுகின்றன
திசை எங்கும்

இல்லம் திரும்புதல்
என்பது
எவ்வாறு

Saturday, 14 December 2019

சுழலும் பந்துகள்




ஜெனிவாவிலிருந்து நண்பர் கணேஷ் பெரியசாமி அனுப்பிய ஸ்விஸ் மிலிட்டரி கத்தி கைக்கு வந்த பின் நான் விரும்பும் பொருட்கள் பட்டியலில் இருந்த மற்ற பொருட்கள் என்ன என்று பார்த்தேன். பந்துகள். கண்டங்கள் தாண்டி கடல் தாண்டி ஸ்விஸ் கத்தி வந்து விட்டது. பந்துகள் உள்ளூரிலேயே கிடைக்கும் என்பதால் நேற்று விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றேன். இரண்டு டென்னிஸ் பந்துகள் வாங்கினேன். ஒரு கிரிக்கெட் பந்து. இரண்டு ரப்பர் பந்துகள்.

இன்று ரப்பர் பந்துகளை வைத்து தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தேன். உற்சாகமாக இருந்தது. பந்து , யானை, ரயில் ஆகியவை என்றுமே உற்சாகம் தருபவைதான். பந்து கையிலிருந்து காற்றில் பறந்து மறுகையை அடையும் போது அதன் அசைவுகளில் சுழற்சியில் மனம் ஈடுபட்டது சந்தோஷம் தந்தது. சிறு வயதில் கையில் ஒரு பந்து கிடைத்தால் உடன் விளையாட யார் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். இப்போது பந்தே ஒரு நண்பன் தான். என்னை உற்சாகப்படுத்தும் நண்பன்.

டென்னிஸ் பந்துகள் மெல்லியவை. கிரிக்கெட் பந்து சற்று இறுக்கமானது. அவற்றையும் வைத்துக் கொண்டு விளையாட வேண்டும். சிறு விளையாட்டு
கூட பெரிய அளவில் உதவி புரிகிறது என்பதே உண்மை. இன்று ஸ்விஸ் கத்தியை வைத்து ஒரு ஸ்கூருவைக் கழட்டினேன்.

பட்டியலில் ஒரு பாக்கெட் ரேடியோ இருக்கிறது. நேற்று ஃபிளிப்கார்ட்டில் பார்த்து வைத்தேன். ஒரு Sony ரேடியோ. அழகாக கச்சிதமாக இருந்தது. பார்த்து வைத்துக் கொண்டேன். இன்னும் ஓரிரு நாளில் ஆர்டர் செய்து விடுவேன்.

கதராடைகள் வாங்க வேண்டும். அதனை வருடப் பிறப்புக்கு முன்னர் கடைசி வாரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

எனது விருப்பங்கள் இவ்வளவுதான் என்பதில் மகிழ்ச்சி. அவை நிறைவேறி விட்டன என்பது மேலும் மகிழ்ச்சி.  

Friday, 13 December 2019

எட்டு தினங்கள்

சென்ற வெள்ளியன்று நண்பருடன் மருத்துவமனை சென்றதிலிருந்து இன்று வரை பல்வேறு விதமான மருத்துவமனைகளில் பல்வேறு விதங்களில் உடனிருந்து விட்டேன். நண்பர் இப்போது நலமாக இருக்கிறார். சென்ற வெள்ளி அவரை மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் அழைத்துச் சென்றேன். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர். அவருடைய உறவினர்கள் அங்கு வந்த பின் ஊருக்கு வந்தேன். அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அந்த நான்கு தினமும் தஞ்சாவூர் சென்று பார்த்து வந்தேன். பின்னர் தஞ்சாவூரிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து மயிலாடுதுறை அழைத்து வந்தோம். மறுநாள் இரவே அவரை மருத்துவ ஆலோசனைக்காக ரயிலில் சென்னை அழைத்துச் சென்றோம். நானும் உடன் சென்றேன். நேற்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் அடைந்தது. அவர் உறவினர்களுடன் அவரை அனுப்பி வைத்து விட்டு நான் 8 மணி சோழன் எக்ஸ்பிரஸில் ஊருக்கு உடன் புறப்பட்டேன். அவரும் அவரது உறவினர்களும் வீட்டுக்கு வந்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தினர். ஒரு வாரம் ஊரில் முழுமையாக இல்லாமல் அலைச்சல் இருந்ததால் சில பணிகள் நிலுவையில் இருந்தன. எனவே உடன் கிளம்பினேன். வங்கியில் சில வேலைகள். நேற்று அவற்றைப் பார்த்தேன். ஒரு நண்பருக்கு ரியல் எஸ்டேட் சிக்கல். அவருக்கு சில ஆலோசனைகளைச் சொன்னேன். மனம் முழு ஓய்வு பெற்று இயல்பு நிலைக்கு முற்றும் திரும்பிவிடவில்லை. நேற்று ரயிலில் பயணித்த போது சக பயணிகளில் ஒருவர் முப்பது வயதான ஒரு பெண்மணி. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வருகிறார். தனது சிகிச்சை விபரங்களைக் கூறிக் கொண்டு வந்தார். மனம் மிகவும் சஞ்சலமாயிருந்தது. அலைந்து கொண்டேயிருக்கிறேன் என வீட்டாருக்கு மனக்குறை. சில நாட்களாவது வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும்.