Sunday, 16 January 2022

பலவிதப் பணிகள்

ஜனவரி துவங்கியதிலிருந்தே பலவிதப் பணிகள் நிறைந்திருக்கின்றன. தொழில் சம்பந்தமான சில முக்கியப் பணிகளைச் செய்தேன். இப்போதெல்லாம் என்னை என் தொழில் சார்ந்த ஒருவனாக யாரும் எண்ணுவதில்லை. நினைவுபடுத்தினாலும்  யாரும் ஒத்துக் கொள்வதில்லை. நினைத்துப் பார்த்தால் எந்த மனிதனாலும் பலவிதமான பணிகளைச் செய்ய முடியும். பணி என்பது இந்த கணத்தில் நாம் என்ன ஆற்ற முடியுமோ அதனை ஆற்றுவதே. இந்த கணத்தில் நம்மால் செய்யக்கூடியதை முழுமையாகச் செய்தோம் என்றால் நம்மால் நிறைவை உணர முடியும். யக்‌ஷப் பிரசன்னம் ‘’திருப்தியை மிஞ்சிய செல்வம் இல்லை’’ என்கிறது. 

சென்ற வாரம் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். தடுப்பூசிக்காகப் பணி புரிந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு மூதாட்டி என்னிடம் தனது சிக்கல் ஒன்றைக் கூறினார். அதாவது , அவர் முதல் தவணை போடும் போது 94 எனத் தொடங்கும் அவரது அலைபேசி எண்ணை 84 எனத் தொடங்கும் அலைபேசி எண்ணாக பதிவு செய்து விட்டார்கள். அவரது அலைபேசி எண்ணின் முதல் இலக்கம் மாறி விட்டது என்பதால் அவரால் தடுப்பூசிச் சான்றிதழ் பெற முடியவில்லை. அதனை என்னிடம் தெரிவித்தார். தடுப்பூசி போட்ட போது அளித்த சீட்டை என்னிடம் வழங்கினார். தடுப்பூசிச் சான்றிதழ் எடுத்துத் தர முடியுமா என்று கேட்டார். ரயிலில் பயணிக்க எதிர்காலத்தில் தடுப்பூசிச் சான்றிதழ் தேவை என்கிறார்களே என்றார். 

இன்னும் அறிவிப்பு வரவில்லை ; வரும் போது சரி செய்து கொள்ளலாம் என பதில் கூறலாம். ஆனால் எனக்கு அப்படி பதில் சொல்லி பழக்கமில்லை. ஒருவர் தனது சிக்கலை ஒருவரிடம் கூறும் போது அந்த சிக்கலிலிருந்து தான் விடுபட வேண்டும் என்று விரும்பியே அதனைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த உணர்வுக்கு மதிப்பு தர வேண்டும் என நான் நினைப்பேன். அதற்கு ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தான் நான் முடிவெடுப்பேன். 

மூதாட்டியிடம் சீட்டைப் பெற்றுக் கொண்டதற்கு மறுநாள் தவறாகப் பதிவாகியிருந்த அலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்து பார்த்தேன். அந்த எண் வேறொருவருக்கு சொந்தமானதெனில் அவரிடம் விஷயத்தை விளக்கி கோவின் இணையதளத்தில் அந்த எண்ணைப் பதிவு செய்தால் ஒரு ஓ. டி. பி வரும். அதனைத் தெரிவித்தால் அதன் வழியே தளத்தின் சான்றிதழ் பிரிவைத் திறந்து உள்சென்று சான்றிதழ் பெற்று விடலாம். ஆனால் அப்படி ஒரு அலைபேசி எண்ணே இல்லை என பதில் வந்தது. 

அடுத்த நாள் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். நான் முயன்று பார்த்த வழிமுறையையே அவர்களும் கூறினர். நான் முயன்று விட்டேன். பயனில்லை என்றேன். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கணக்கில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த நிலையத்தின் செவிலியரிடம் பேசினர். அவர் அடுத்தடுத்து முக்கியமான நிறைய பணிகள் இருப்பதால் இந்த விஷயத்தை அடுத்த நாள் செய்யலாமா என்று கேட்டார். நான் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டேன். மீண்டும் மறுநாள் சென்றேன். காத்திருக்கச் சொன்னார்கள். 45 நிமிடங்கள் காத்திருந்தேன். சமூகப்பணி ஆற்றுபவர்கள் இவ்வாறான காத்திருப்புக்குப் பழகிக் கொள்ள வேண்டும்.  சமூகப் பணியாற்றுபவன் இன்னும் மேலான உலகத்துக்காக இன்னும் மேலான சகவாழ்வுக்காகக் காத்திருக்கிறான். அவ்வாறான நேரங்களில் நான் உடனிருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ன நோக்கத்துக்காக வருகிறார்கள் என கவனிப்பேன். அங்கே அவர்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க முடிந்தால் செய்து கொடுப்பேன். 

மருத்துவமனையில் காத்திருந்த போது எனக்கு ஒன்று தோன்றியது. நம் மாநிலத்தில் உடலை ஆரோக்கியமாக உறுதியாக வைத்திருக்கும் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கான பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு உடற்பயிற்சி பழக்கம் இல்லை. ஒரு கிராமத்தில் 100 - 150 குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கு கால்பந்து, ரிங் பால், பேட்மிட்டன் பந்து , பேட்மிட்டன் மட்டை ஆகியவற்றை நாம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை தினமும் விளையாடச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவானது. உருவான எண்ணம் எனக்கு உற்சாகமூட்டியது. அடுத்தடுத்து என்ன நிகழக் கூடும் என்று கற்பனை செய்தேன். ஒரு மாதம் அந்த குழந்தைகள் அந்த பந்துகளுடன் விளையாடுவார்கள். பின்னர் அவர்களைச் சந்தித்து  அவர்களுக்கு உடல்நலன் உடற்பயிற்சி ஆகிய விஷயங்களைக் குறித்து எடுத்துக் கூறி தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்.  இன்னொரு புறம் 100 குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க நிதிக்கு எங்கே போவது என்ற எண்ணம் மனதில் இன்னொரு பக்கம் உருவாகி பல வினாக்களை எழுப்பியது. அந்த எண்ணத் தொடரை வெட்டி விட்டு முதல் தொடரிலேயே பயணித்தேன். ஒரு சமூகச் செயல்பாட்டாளன் என்றுமே கற்பனையை இழக்கக் கூடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது நாள் அது செயலாகும் . 

45 நிமிடக் காத்திருப்புக்குப் பின் ‘’சார் ! இன்னும் 30 நிமிஷம் ஆகும் சார். எங்கயாவது போகணும்னா போய்ட்டு வந்திருங்க ‘’ என்றார்கள். மருத்துவமனைக்கு அருகில் ஒரு மனைத்தரகர் இருக்கிறார். அவர் வீட்டுக்குச் சென்றேன். எனது நண்பர் ஒருவர் அவரது மனையை விற்பனை செய்ய வேண்டும் என்று சொன்னார். அந்த மனையை மனைத்தரகருக்குக் காட்டினேன். அதன் உரிமையாளர் அதன் விலையாக இரண்டு என்ற இலக்கத்துக்குப் பக்கத்தில் ஏழு பூஜ்யங்களை சொல்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவருக்கு அந்த இடத்தை ஒன்று என்ற இலக்கத்துக்குப் பக்கத்தில் ஏழு பூஜ்யங்கள் என வாங்கிக் கொடுத்தேன். உரிமையாளர் நல்ல பார்ட்டியாக எதிர்பார்க்கிறார் என்ற விபரத்தை தரகரிடம் சொன்னேன். அவரை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தேன். பத்து நிமிடம் காத்திருந்தேன். சான்றிதழைக் கையில் கொடுத்தார்கள். கிராமத்தில் அந்த மூதாட்டியிடம் சென்று கொடுத்தேன். அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ‘’ சார் ! இந்த காலத்துல சொந்த காரியத்தையே யாரும் சிரத்தையா செஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அடுத்தவங்க காரியத்தை இவ்வளவு அக்கறையா செய்றீங்களே சார். ரொம்ப நன்றி’’ . 

அந்த மக்களின் பிரியமும் அன்பும் நல்லெண்ணமுமே என் வாழ்வில் நான் சேர்த்த அரும் பெருஞ்செல்வம். அதற்கு எதுவும் ஈடாகாது. 

Tuesday, 11 January 2022

ஜெ தளத்தில்

 இன்று jeyamohan(dot)in இணையதளத்தில் கவிஞர் ஆனந்த் குமார் எழுதிய ‘’டிப் டிப் டிப்’’ கவிதைத் தொகுப்பு குறித்து எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது.


ஆனந்த் குமார் - அணிலோசை

Monday, 10 January 2022

எஸ். ரா தளத்தில்

 ’’மண்டியிடுங்கள் தந்தையே’’ நாவல் குறித்து எழுதப்பட்ட ஒளிமலர் கட்டுரை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் இணைப்பு;


ஒளிமலர் - எஸ். ரா தளத்தில்

Sunday, 9 January 2022

ஒளிமலர்


நூல் : மண்டியிடுங்கள் தந்தையே ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் :
தேசாந்திரி பதிப்பகம் , டி -1, கங்கை அபார்ட்மெண்ட்ஸ் , 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை, 600093. பக்கம் : 248 விலை : ரூ. 350

ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.  

பித்தேறிய தன் மனத்தின் சங்கேதங்களைத் தொடர்ந்த படி வாழ்வின் அனைத்து போகங்களையும் நோக்கிச் செல்கிறார் இளம் டால்ஸ்டாய். குடி, சூதாட்டம், பெண் என அனைத்தையும் அறிய முற்படுகிறார். இராணுவத்தில் பணி புரிந்து சாகசமான வாழ்முறை மூலம் சாவினையும் சாவினுக்கு ஒப்பான தருணங்களையும் மிக அண்மையில் பார்த்து அறிகிறார் லேவ். எனினும் அவர் அகத்தில் ஏதோ ஒன்று அவரை போகங்களைக் கடந்து செல்ல தூண்டிக் கொண்டே இருக்கிறது. அது புறவயமாக வரையறுக்கத் தக்கதாக இல்லை. அது தன்னை அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவில்லை; அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. 

தன்னை முழுமையாக நேசிக்கும் பெண்ணைச் சந்திக்கிறார். மண்ணுக்குத் தன்னை முற்றிலும் ஒப்படைக்கும் விதையைப் போன்றவளாக இருக்கிறாள் அப்பெண். வானத்துச் சூரியனை நேசிக்கும் ஏரிக்கரை மலரைப் போன்றவளாக இருக்கிறாள் அவள். டால்ஸ்டாயின் அகத்தில் சுடரும் ஒளியைக் காண்பவளாகவும் அதனை ஆராதிப்பவளாகவும் இருக்கிறாள் அவள். எனினும் டால்ஸ்டாய்க்கு தான் முன்னர் பழகிய பெண்களைப் போன்ற இன்னொரு பெண்ணே அவள். காதல் என்ற உணர்வை அவள் டால்ஸ்டாய் உடனான உறவின் மூலம் முழுமையாக அடைகிறாள் அந்தப் பெண். டால்ஸ்டாய்க்கு அந்த உணர்வு முதல் அறிமுகம் ஆகிறது. 

டால்ஸ்டாய் பின்னர் சோஃபியாவை மணக்கிறார். தனது ரகசியங்கள் அனைத்தையும் சோஃபியாவிடம் முன்வைக்கிறார். அது அவளுக்கு வேதனையளிக்கிறது. உலகின் மகத்தான கலைஞன் தன் கணவன் என்ற உணர்வும் ஒரு பெண்ணாக தன் மனம் உணரும் துயரங்களும் அவளை வாழ்நாள் முழுதும் அலைக்கழிக்கிறது. 

டால்ஸ்டாய், அக்ஸின்யா, திமோஃபி என்ற முக்கோணச் சித்தரிப்பில் நான் மகாபாரதத்தின் சூரிய பகவான், குந்தி, கர்ணன் என்ற கோணம் வெளிப்பட்டதாக நினைக்கிறேன். சிறுவனான திமோஃபி குதிரை லாடத்தால் தாக்குவது என்பதிலும் மகாபாரதம் உப பிரதியாக இருக்கிறது என்று தோன்றியது. 

யஸ்னயா போல்யானாவிற்கு ஜிப்சிகள் வருகை புரிவதை சொல்லும் பகுதி மிக அழகாக இருக்கிறது. பண்ணை மட்டுமே உலகம் என இருக்கும் மனிதர்கள் மத்தியில் ஜிப்சிகள் வண்ணமயமான உடைகளுடனும் ஆபரணங்களுடனும் உள் நுழைவது என்பது குறியீட்டு ரீதியில் பல அர்த்தங்கள் பொதிந்தது. அவர்களது மாயங்கள் எல்லா மனித மனத்திலும் இருக்கும் கண்டடையப் படாமலே போகும் மாயங்களே. 

அக்ஸின்யா டால்ஸ்டாயிடம் அர்ப்பணம் ஆனதைப் போல தனது படைப்பாற்றலுக்கு  தன்னை முழுதாகக் கொடுக்கிறார் டால்ஸ்டாய். அவரது அக ஒளி அவரை வழிநடத்துகிறது. மானுடத்தின் மகத்தான ஆக்கங்களை படைக்கத் தொடங்குகிறார் டால்ஸ்டாய். 

தன்னைச் சூழ்ந்திருக்கும் சக மனிதர்களுக்காக தான் வாழும் ஒட்டு மொத்த உலகுக்காக செயல்படத் தொடங்குகிறார் டால்ஸ்டாய். அவரது அகம் கனியத் தொடங்குகிறது. திமோஃபி சில ஆண்டுகள் பண்ணையை விட்டு ஓடிப் போய் விட்டு மீண்டும் வீடு திரும்புகிறான். பண்ணையை விட்டு ஓடியவன் ஒருவன். திரும்பி வரும் போது ஓடிப் போனவனாக திமோஃபி இல்லை. வேறு ஒருவனாக மாற்றம் பெற்றிருக்கிறான். இந்த பகுதி எனக்கு ஜீசஸ் சொல்லும் கதையான ‘’The lost son'' ஐ நினைவுபடுத்தியது. புனைவு ரீதியில் இதை டால்ஸ்டாய்க்கும் பொருந்தும் படியாகக் காட்டியுள்ளார் எஸ். ரா. 

பல்வேறு ஆழமான நுட்பமான உணர்ச்சிகள் பிரவாகிக்கும் தருணங்கள் நாவல் முழுதும் நிரம்பியுள்ளன. ஒரு விதை மண்ணைக் கீறி தளிராக எழுந்து வான் நோக்குவது போல வாசக மனம் இந்த நாவலை வாசித்த பின்னும் அதன் உணர்வுநிலைகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

மூன்று அழைப்புகள்


சமீபத்தில் எழுதிய ‘’விளைதல்’’ பதிவை வாசித்து விட்டு மூன்று நண்பர்கள் அழைத்தார்கள். மூவருமே அவர்களுடைய சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கினேன்.  

1. நமது சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பிழைப்புக்கான படிப்பாகவே எண்ணுகிறது நம் தமிழ்ச் சமூகம். படிப்பு என்பதை போட்டி என்றே எண்ணுகிறார்கள் தமிழ் மக்கள். 

2. படித்த சிந்திக்கும் சமூகம் என்பது மெல்ல உருவாகி வர வேண்டியிருக்கிறது. 

3. நூல்கள் மீது ஆர்வம் கொண்ட சமூகமே நூலகங்களுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு கொள்ளும். நம் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 

4. நூலகத்துக்கு மாற்றாக ‘’லெண்டிங் நூலகம்’’ என்ற அமைப்பு கிராமங்களுக்கு அணுக்கமாக இருக்கும். 

5. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் உள்ளன எனக் கொள்வோம். நூலகம் அமைக்க விரும்பும் தன்னார்வலர் 1200 நூல்களை கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு சிறு அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நூல்களின் பெயர்ப் பட்டியலை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அளித்து விட வேண்டும். 

6. இராமாயணம், மகாபாரதம், பாகவதக் கதைகள், புத்தர் நூல்கள், புத்தர் குறித்த ஜப்பானிய மாங்கா காமிக்ஸ்கள்,  ஆழ்வார்கள் கதை, நாயன்மார்கள் கதை, நம் நாட்டின் புகழ் பெற்ற மக்கள் நல அரசர்கள், சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு, விஜயநகரப் பேரரசின் வரலாறு, மராத்தியர்களின் வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு, உலகப் புகழ் பெற்ற தலைவர்களின் தன்வரலாற்று நூல்கள், எளிய அறிவியல் நூல்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தொழில் முனைவோரின் வரலாறு, சுற்றுச் சூழலியல் தொடர்பான நூல்கள், பறவையியல் கானியல் தொடர்பான நூல்கள், சுவாமி சித்பவானந்தரின் நூல்கள், சுவாமி விவேகானந்தரின் நூல்கள், ராஜாஜியின் நூல்கள், நவீன தமிழ் இலக்கிய நூல்கள், பொருளாதாரம் தொடர்பாக தமிழில் எழுதப்பட்ட நூல்கள், உலக இலக்கிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என அந்த நூல்கள் அமையலாம். இது ஒரு உத்தேசப் பட்டியல். விரிவான பட்டியலை இதிலிருந்து உருவாக்கிக் கொள்ள முடியும். 

7. பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாகும் இரண்டு சிறுவர்கள் கொண்ட இணையை இரண்டு தெருக்களுக்கு ஒரு இணை என நியமிக்க வேண்டும். ஊரில் மொத்தம் 8 தெருக்கள் இருக்கும். இரண்டு தெருக்களுக்கு ஒரு இணை என்றால் மொத்தம் 8 சிறுவர்கள். இந்த சிறுவர்கள் வாரத்தில் ஒருநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்த நூல்களை கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் சேர்த்து விடுவர். ஒரு குறிப்பேட்டில் யாரிடம் எந்த நூல்கள் உள்ளன என்பதை குறித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வாரமும் ஒருவர் வாசித்த நூலை அவர்களிடம் பெற்றுக் கொண்டு வாசிக்காத நூலை அவர்களுக்கு இந்த இணை அளிக்கும். 

8. ஆயிரத்து இருநூறு நூல்களும் வீட்டுக்கு 3 நூல்கள் என கிராமத்துக்குள் புழங்கிக் கொண்டிருக்கும். கிராமத்தைத் தாண்டி நூல்கள் வேறு எங்கும் செல்லாது. கிராமத்தின் எல்லா வீடுகளும் இதில் பங்கேற்பதால் அனைவருக்கும் இந்த முறை மீது ஒரு பிணைப்பு இருக்கும். 

9. நூல்களை வினியோகிக்கும் எட்டு சிறுவர்களுக்குத் தனியாக ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ அவர்கள் செய்யும் பணியின் முக்கியத்துவம் குறித்தும் அதனை நேர்த்தியாகச் செய்யும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி தந்து  விடலாம். 

10. முதல் கட்டமாக அந்த எட்டு சிறுவர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 10 புத்தகங்கள் என அளித்து அதனை வாசிக்கச் செய்து நூல் வாசிப்பில் பயிற்சி தரலாம். அவர்களின் நூல்களின் தூதுவர்களாக ஊர் முழுதும் செல்வார்கள். 

11. ஒரு புரிதலுக்காக ‘’லெண்டிங் லைப்ரரி’’ எனக் கூறுகிறோமே தவிர மக்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. 

12. நூல்களை நோக்கி ஆர்வமாக முன்னகரும் சமூகமாக தமிழ்ச் சமூகம் இன்று இல்லை என்பதால் நூல்களை மக்களிடம் கொண்டு செல்லும் - மக்கள் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் முறைகள் இப்போது தேவைப்படுகின்றன. 

13. நூலகம் அமைக்க விரும்பும் நண்பர்கள் நூலகம் அமைக்க வேண்டிய இடத்தின் கிரய செலவு, கட்டுமானச் செலவு, நூல் அலமாரிகள் செலவு, வாடகை என எந்த செலவும் செய்யத் தேவையில்லை. 1200 நூல்களுக்கான செலவை மட்டும் செய்தால் போதுமானது. 

14. ஒரு கிராமமே இதில் பங்கேற்பதால் நூல்கள் கிராமத்தின் பேசுபொருளாகும். 

15. ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை கிராம மக்கள் ஒவ்வொருவரும் வீட்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து நூல் வாசிப்பது என்பதை ஒரு வாசிப்புத் திருவிழா போல அமைக்கலாம். 

16. இது போல பல விஷயங்களை இவ்வாறு திட்டமிட முடியும். 


Saturday, 8 January 2022

காய் கறி

எனது நண்பர் ஒருவர் ஊருக்கு அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். ஐ டி கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு பூர்வீக சொத்தாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தேக்கு மரம் பயிரிட ஆர்வமாயிருக்கிறார். இன்று காலை அவரைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவரது சகோதரரும் தேக்கு பயிரிடுவது குறித்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டனர். முக்கியமான சந்தேகம் பயிரிட அரசு அனுமதி வேண்டுமா என்பதும் மரத்தினை விற்பனை செய்ய அரசு அனுமதி வேண்டுமா என்பதும். இந்த சந்தேகம் எல்லா விவசாயிகளின் மனத்திலும் ஆழமாக உள்ளது. சந்தேகம் அதன் விளைவாக ஒரு அச்சம். அவர்களுடைய சந்தேகம் அடிப்படை ஆதாரம் அற்றது என விளக்கினேன். அவர்களுடைய ஊரிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஒரு விவசாயியை நான் ஊக்கப்படுத்தி 50 தேக்கு மரங்கள் நடச் சொல்லி இருக்கிறேன்; அவருடைய களத்தைச் சென்று பார்ப்போம் என்று அழைத்துச் சென்றேன்.   செப்டம்பர் மாதம் தேக்கங்கன்றுகள் நடப்பட்டன. இப்போது ஆறடி உயரம் வளர்ந்துள்ளன. விவசாயி ஆர்வத்துடன் தேக்கின் வளர்ச்சியைக் காட்டினார். ‘’பஞ்சகவ்யா’’ கொடுத்தால் வளர்ச்சி இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் அடுத்த முறை வரும் போது பஞ்சகவ்யா கொண்டு வருகிறேன் என்றும் சொன்னேன். புறப்படத் தயாரான போது அவர் வயலில் விளைந்த காய்கறிகளை ஒரு சாக்கு மூட்டையில் கொண்டு வந்து கொடுத்தார். இந்த மூட்டையை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்றால் காய்கறி வியாபாரம் செய்யப் போகிறாயா என்று கேட்பார்கள். அண்டை வீட்டுக் காரர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த காய்கறிகளைப் பிரித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் விவசாயியின் வீட்டிலிருந்து புறப்பட்டேன். அவருடைய வீடு, களம், வயல் ஆகியவை அனைத்தும் அருகருகே அமைந்தவை. வீட்டின் தோட்டத்திலேயே வயலும் களமும் அமைந்திருப்பதான அமைப்பு.  ஐ டி நண்பருக்கு விவசாயியின் களத்தைப் பார்த்து அதில் தேக்கு வளர்ந்திருப்பதைக் கண்டதும் அவருடைய ஐயங்கள் நீங்கி அவருக்கு ஒரு தெளிவு பிறந்தது.


 

நானும் நண்பரும் ஆளுக்கொரு வாகனத்தில் வந்தோம். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் கடைவீதியில் வணிகம் செய்கிறார். நாங்கள் அடுத்து அவரைச் சந்திக்க செல்வதாய் திட்டமிட்டிருந்தோம். எனது வாகனம் ஐந்து நிமிடம் முன்னதாக வந்து விட்டது. நண்பரின் ஒரு கடையை  ஒட்டி ஒரு அம்மாள் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர் எப்போதும் அங்கே மீன் விற்பவர். எனக்கு அவரை முன்னரே தெரியும். அவருடன் இன்னொரு பெண்மணியும் இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘’சார் ! நாளைக்கு வியாபாரம் செய்ய முடியாது சார். மீன் விக்காம இருக்கு. இந்த மீன் அத்தனையையும் ஐந்நூறு ரூபாய்க்கு தரேன். வாங்கிட்டுப் போங்க சார்’’ என்றார்கள். 

‘’அம்மா ! நாங்க வெஜிட்டேரியன்.’’ 

‘’அப்படீன்னா?’’

‘’அப்படீன்னா எங்க வீட்டுல எல்லாரும் சைவம்’’

அந்த அம்மாள் நம்பிக்கை இழந்தார். 

இருப்பினும் அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று தோன்றியது. 

‘’அம்மா கடைக்காரர்ட்ட கேட்டீங்களா. அவரு இப்பதான் மதியம் சாப்பிட வீட்டுக்கு போவாரு? ராத்திரி கொழம்பு வச்சா கூட நாளைக்கு முழு நாளும் சாப்பிடலாம்.’’ கடைக்காரரான எனது நண்பரை உத்தேசித்து சொன்னேன். 

‘’என் கிட்ட இறால் தான் சார் இருக்கு. அவரு வஞ்சிரம் மீன் தான் வாங்குவாரு’’




நேரம் அப்போதே மதியம் இரண்டு மணி. 

ஐந்து நிமிடம் தாமதமாக வந்த ஐ டி நண்பர் நான் பேரம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

‘’அண்ணன் ! என்ன அண்ணன் ! மீன் வாங்க போறீங்களா. நீங்க வெஜிட்டேரியன் ஆச்சே?’’

’’இல்ல நாளைக்கு எந்த கடையும் இருக்காதுல்ல. இன்னைக்கு சேல்ஸ் சரியா இல்லையாம். இருக்கறத கொடுத்துட்டு ஊருக்கு கிளம்பறன்னு சொல்றாங்க. ‘’

‘’உங்க கிட்ட சொன்னா நடக்கும்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு’’

‘’ஒரு உதவின்னு கேக்கறாங்க. நாம டிரை செய்வோம்’’

‘’இதுல நாம எப்படின்ணன் உதவ முடியும்’’. ஐ டி நண்பரும் வெஜிட்டேரியன். 

‘’வெயிட் பண்ணுங்க. என்ன செய்ய முடியும்னு யோசிப்போம்.’’

எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் இரவுலாவி. அதாவது அவர் பகலில் உறக்கத்தில் இருப்பார். மாலை 5 மணியிலிருந்து காலை 5 மணி வரை முழு இரவும் விழித்திருப்பார். அவரைப் பகலில் பிடிப்பது என்பது அனேகமாக சாத்தியமில்லை. பகலில் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தூங்கிக் கொண்டிருப்பார். இருப்பினும் இன்று அவரது ஃபோன் ரிங் ஆனது. ஃபோனை எடுத்து விட்டார். 

‘’என்ன ஆச்சர்யமா இருக்கு. பகல்ல ஃபோன் எடுத்துட்டீங்க. ‘’

‘’ரிலேடிவ் ஒருத்தர சோழன் எக்ஸ்பிரஸ்ல டிராப் பண்ண வேண்டியதாயிடுச்சு’’

‘’அதாவது இங்க கடைத்தெருவுல நம்ம ஃபிரண்டு கடை இருக்குல்ல’’

‘’ஆமாம்’’

‘’அவரு கடை வாசல்ல ஒரு அம்மா மீன் விக்கறாங்க. நாளைக்கு ஃபுல் டே ஆஃப் ங்கறதால இன்னைக்கு மீன் நிறைய விக்காம இருக்குன்னு சொல்றாங்க. உங்களுக்கு மீன் தேவைப்படுமா?’’

‘’என்ன மீன் இருக்கு?’’

‘’இறால்’’

‘’ஆஞ்சு கொடுப்பாங்களா?’’

‘’கொடுப்பாங்க’’

‘’எவ்வளவு சொல்றாங்க?’’

‘’500 ரூபாய்’’

‘’சரி ஆஞ்சு வைக்க சொல்லுங்க. 10 நிமிஷத்துல நான் வந்துடறன்’’

நானும் ஐ டி நண்பரும் காத்திருந்தோம். நண்பர் வந்து மீனைப் பார்த்தார். அவருக்குத் திருப்தி. ஐந்நூறைக் கொடுத்து மீன் வாங்கிக் கொண்டார். 

இதற்கு முன் இவர்களிடம் மீன் வாங்கியிருக்கிறீர்களா என்று கேட்டேன். நண்பர் இல்லை என்றார். அந்த பெண்மணிகள் இருவரும் நாங்க இங்க தான் சார் எப்பவும் மீன் விப்போம். கடல் மீனு சார். ரொம்ப நல்லா இருக்கும். இன்னைக்கு வாங்கினதை கொழம்பு வச்சு சாப்டாலே உங்களுக்கே தெரியும் என்றார்கள். நண்பர் சரி என்றார். 

மீன் வியாபாரிகள் இருவரும் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினர். நாங்களும் அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டோம். 

Friday, 7 January 2022

விளைதல்

சில மாதங்களுக்கு முன்னால், ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட சலூன்களுக்கு எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் தாக்கம் சமூகத்தில் எவ்வாறு உள்ளது என ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் வினவியிருந்தார். அவருக்கு அளித்த பதில் :




அன்புள்ள நண்பருக்கு,

நாம் ஒரு சாலையில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்கிறோம் ; அப்போது ஒரு ஆலமரத்தைப் பார்க்கிறோம். சில நிமிடங்கள் வண்டியை நிறுத்தி விட்டு வண்டி என்ஜினுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மரத்தின் வேர்பரப்பில் அமர்கிறோம். மரத்தில் சில வினாடிகள் தலைசாய்த்துக் கொள்கிறோம். தருநிழலின் குளுமை நம்மை அமைதி கொள்ளச் செய்கிறது. அந்த விருட்சத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் காகங்களும் கரிச்சான்களும் சிட்டுக்குருவிகளும் நம் கண்ணில் படுகின்றன. நமது சலிப்பும் சோர்வும் நீங்கி நமது பயணத்தைத் தொடர்கிறோம். அந்த விருட்சத்தை அங்கே நட்டவர் யார் என்பதை நாம் அறிவோமா? அதனைப் பராமரித்தவர்கள் யார் என்று அறிவோமா? அந்த மரத்தை நட்டவர் நம்மை அறிவாரா? மரத்தின் நிழல் பலருக்கும் பயன் தரக்கூடியது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அந்த உணர்வின் வெளிப்பாடாக அவர் செயலாற்றியிருக்கிறார். சில வாரங்கள் - சில மாதங்கள் அவர் கவனம் கொடுத்த ஒரு செயல் எத்தனை ஆண்டுகளுக்கு நல்விளைவுகளை உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். மனிதர்களுக்கு மட்டுமா எத்தனை பிராணிகள் எத்தனை பட்சிகள் எத்தனை பூச்சிகள் அந்த ம்ரத்தால் பயன் அடைந்திருக்கும். வாழ்க்கை என்பது மிகப் பெரியது. வாழ்வினை இயக்கும் விசைகளை நம்மால் முற்றறிந்திட இயலாது. இருப்பினும் நமக்குச் சாத்தியமான செயல்களை நாம் ஆர்வத்துடன் உற்சாகத்துடன் மேற்கொள்ள வேண்டும். அதன் விளைவுகள் நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாகக் கூட இருக்கக் கூடும்.  

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது ‘’மனதின் குரல்’’ நிகழ்ச்சியில் தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு. பொன். மாரியப்பன் அவர்கள் குறித்து பேசியிருந்தார். மாரியப்பன் அவர்கள் தனது சலூனில் ஒரு நூலகம் அமைத்திருப்பதையும் அந்த நூல்களை வாசித்து வாசித்ததன் சாரத்தை ஒரு பக்க அளவில் எழுதுபவர்களுக்கு முடி திருத்தும் கட்டணத்தில் சலுகை வழங்கி வருகிறார் என்ற தகவலையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். 

இந்த விஷயம் குறித்து யோசித்த போது இதைப் போல மக்கள் பயன் பெறும் செயல் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களிலும் வாசிக்க புத்தகங்கள் இருக்கின்றன என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சலூன்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் தலா 8 நூல்கள் வழங்கப்பட்டன. 

தமிழ் அறிஞரும் துறவியுமான சுவாமி சித்பவானந்தரின் நூல்களை சலூன்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்தேன். சுவாமி சித்பவானந்தர் பேரறிஞர். தமிழ், சமஸ்கிருதம், வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றவர். தமிழில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அவருடைய நூல்களிலிருந்து ஆறு நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். 1. ஸ்ரீராமகிருஷ்ண சரிதம் 2. ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம் 3. ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம் 4. சுவாமி விவேகானந்தர் 5. சகோதரி நிவேதிதை 6. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் ஆகிய ஆறு நூல்களையும் ராஜாஜி தொகுத்த பகவான் ராமகிருஷ்ணரின் ஞானமொழி மற்றும் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களின் சிறு தொகுப்பான ‘’வீர இளைஞருக்கு’’ என்ற இரண்டு நூல்களையும் சேர்த்து எட்டு நூல்களை வழங்குவதாக முடிவு செய்தேன். இந்த நூல் தேர்வில் ஒரு விஷயத்தை பின்னர் அறிந்தேன். ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம், ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம் , ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம் ஆகிய மூன்று நூல்களும் சுவாமி சித்பவானந்தர் எழுதிய ‘’முதல் மூன்று நூல்கள்’’ என்ற சிறப்பைப் பெற்றவை. 

இந்த நூல்களுடன் சலூன்களுக்குச் சென்று சலூன்காரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து உரையாடி நூல்களை வழங்கி விட்டு வந்த போது இந்த விஷயத்தை சலூன்காரர்கள் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர் என்பதை உணர்ந்தேன்.  60 கி.மீ நீளமும் 50 கி.மீ அகலமும் கொண்ட 3000 சதுர கி.மீ பரப்பு கொண்ட மாவட்டம். 300க்கும் மேற்பட்ட சலூன்கள். பத்து நாட்களை முழுமையாக ஒதுக்கி ஒரு நாளைக்கு 30 சலூன் என நூல்களை வழங்கினேன். ஒரு சலூனிற்கு சராசரியாக பத்து நிமிடம் ஆகும். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் ; பொன். மாரியப்பன் குறித்து சொல்ல வேண்டும். மாவட்டம் முழுதும் மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து சொல்ல வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்க வேண்டும். ஒரு சலூனுக்கு 10 - 15 நிமிடம் ஆகி விடும். பலர் தேனீர் அருந்தச் சொல்வார்கள். அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். கடையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இதனைக் குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள். அலைபேசி எண் கேட்பார்கள். 

நூல்களை வழங்கி விட்டு வந்த சில நாட்களில் சலூன்களுக்கு வந்த வாடிக்கயாளர்கள் பலர் நூல்களைப் பார்த்து விட்டு சலூன்காரர்களிடம் எனது அலைபேசி எண்ணை வாங்கி எனக்குப் பேசி இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சிலர் இந்த நூல்கள் எங்கே கிடைக்கும் விலைக்கு வாங்க விரும்புகிறோம் என்று கூறினர். சிலர் என்னைச் சந்திக்க விரும்பினர். அவர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று நானே சந்தித்தேன்.  

சலூன் நூலகத்தின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்ற உங்கள் வினாவிற்குப் பின் அதனை அறிய முடிவு செய்தேன். ஒவ்வொரு சலூனையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றால் முழுமையாக ஒரு வாரம் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஆகும் என்பதால் எல்லா சலூன்களுக்கும் ஃபோன் செய்து பேசுவது என்று முடிவு செய்தேன். எல்லா சலூனுக்கும் ஃபோன் செய்தேன். எங்கள் உரையாடலின் முக்கியக் காரணிகளைக் கீழே பட்டியல் இடுகிறேன். 

1. எனது அழைப்பு எல்லா சலூன்காரர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. 

2. சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தினமும் நூல்களை எடுத்து வாசிப்பதாகக் கூறினர். இந்த நூல்களைக் குறித்து தினமும் ஒரு உரையாடல் நிகழ்கிறது என்று கூறினர். 

3. சில வாடிக்கயாளர்கள் நூலை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து விட்டு மீண்டும் சலூனில் கொண்டு வந்து கொடுத்து விடுகின்றனர் என்று சொன்னார்கள். 

4. ஒவ்வொரு அழைப்புக்கும் அவர்கள் கூறும் பதிலிலிருந்து வாடிக்கையாளர் வாசிப்பு விருப்பத்தைக் கணித்து ஐந்துக்கு இத்தனை என மதிப்பெண் அளித்தேன். 90 சதவீதம் ஐந்துக்கு 4.5 மதிப்பெண் பெற்றனர். 5 சதவீதம் ஐந்துக்கு 3.5 மதிப்பெண். ஐந்துக்கும் குறைவான சதவீதமே ஐந்துக்கு 2.5 மதிப்பெண். 

இந்த வரவேற்பு உண்மையிலேயே எனக்கு திருப்தி அளித்தது.  

இன்று நம் தமிழ்ச் சூழலில் பள்ளியில் தமிழ் மொழிக்கோ நூல்களுக்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. மொழி மீதான அக்கறையின்மையை நம் பள்ளிக்கல்வி உருவாக்கி விட்டது. இப்படிப்பட்ட மூன்று தலைமுறை இங்கே உருவாகி விட்டது. பள்ளி கல்லூரி பாடப்புத்தகங்கள் தாண்டி 100க்கு 99 பேர் வீட்டில் எந்த புத்தகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் சலூன்களில் வாசிக்க புத்தகம் இருப்பது என்பது நிச்சயமாக ஒரு நல்நிகழ்வே. குழந்தை உளவியலாளர்கள் எப்போதும் அறிவுறுத்தும் ஒரு விஷயம் உண்டு. முதலில் குழந்தைகள் மொழியறியும் முன்னரே கூட புத்தகங்களைத் தர வேண்டும். அவர்கள் அதனைக் கைகளால் பிடித்து கைகளில் வைத்துக் கொண்டு புத்தகங்களுடன் ஒரு மன அணுக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு அணுக்கமே அவர்களை வாசிப்புப் பழக்கத்துக்கு இட்டுச் செல்லும் என்று. மயிலாடுதுறை மாவட்டத்தின் 300க்கும் மேற்பட்ட சலூன்களில் தினமும் பலருடைய கைகள் புத்தகங்களை எடுத்துப் புரட்டுகின்றன என்பதே எவ்வளவு நல்ல விஷயம். குறியீட்டு அளவிலும் இது முக்கியமான செயல்பாடு. 

சுவாமி விவேகானந்தரின் சொற்கள் தனிமனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் ஊக்கம் அளிப்பவை. சோம்பலை நீக்கி செயலாற்றுவதற்கான உத்வேகத்தை அளிப்பவை. நமது மரபை நமது பண்பாட்டை எடுத்துச் சொல்ப்வை. அவருடைய சொற்களால் உத்வேகம் பெற்றவர்கள் பலர். அரவிந்தர், மகாத்மா காந்தி, பாரதியார், ராஜாஜி, அவினாசிலிங்கம் செட்டியார் .... என சொல்லிக் கொண்டே போகலாம். 

தமிழ்நாடு விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட மாநிலம். தானியத்தை விதைக்க வேண்டும். முறையாக நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதைச் சரியாக செய்தோம் என்றால் விளைய வேண்டியது சிறப்பாக விளையும். மண்ணுடன் தொடர்புள்ளவன் எதையுமே நம்பிக்கையுடனே காண்பான். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சலூன் நூலகங்கள் சிறப்பான துவக்கத்தை உருவாக்கியிருப்பதில் என்னுடைய பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவே. சலூன்களுக்கு நூல்களை நன்கொடையாக அளித்த நண்பர்களும் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அக்கறையுடன் பெருமகிழ்வுடன் மேற்கொள்ளும் சலூன் கடைக்காரர்களும் சலூன்களில் நூல்களைப் பற்றி உரையாடும் வாசிக்கும் பொதுமக்களுமே இதற்கு முழுமுதற்காரணம். அவர்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகின்றேன். 

அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை

Tuesday, 4 January 2022

இமைப் பொழுதும்

சென்ற பத்து நாட்களில் அடுத்தடுத்து மூன்று வெளியூர் பயணங்கள். இன்னும் ஊரின் வழமை திரும்பவில்லை. லௌகிகப் பணிகள் சில மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் வேகம் தேவைப்படுகிறது. அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறேன். பால், காஃபி, தேனீரைத் தவிர்த்தல் என்பதை அக்டோபரிலேயே துவங்கி விட்டதால் இந்த ஆண்டு புத்தாண்டுத் தீர்மானம் என்பதை எளிதில் பின்பற்ற முடிந்தது.  நிறைய பணிகள் இன்னும் இருக்கின்றன. முன்னரெல்லாம் கால அட்டவணை போட்டு பணிகளைச் செய்வேன். அவை என் தொடர்பானவை. இப்போது மனிதர்களை இணைக்கும் பணியை மேற்கொள்ளத் துவங்கியிருப்பதால் கால அட்டவணை போட்டு பணி செய்ய முடியாது. இன்னதென்று வகுக்க முடியாத பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. உண்மையில் மக்களை இணைக்கும் பணியில் போதாமையை உணர்வது மேலும் மேலும் என்ற உற்சாகத்தின் காரணமாகவே. அது நல்ல விஷயம் தான். ஓயாது செயலாற்றுவதன் மூலமே உண்மையான ஓய்வை உணர முடியும். ஓய்வெடுக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்கிறேன். இந்த ஆண்டில் மிக அதிக விஷயங்களை முன்னெடுக்க வேண்டும். 

Saturday, 1 January 2022

அந்த இளம் பெண்
அத்தனை
வெட்கப்பட்டு
சிரிக்கும் கண்களுடன்
விரலால் சுட்டிய
மலைப்பாதையில் 
அஸ்தமனமாகிறது
அந்தி சூரியன்