என்னுடைய அலைபேசியின் அழைப்பு ஓசையை மூன்று நொடிகள் மட்டுமே கால அளவு கொண்ட சிறு ஒலியாக அமைத்து வைத்திருக்கிறேன். என் எதிரில் அலைபேசி இருந்தால் ஒலி கேட்கும். சற்று தள்ளி இருந்தால் கேட்காது. தவறிய அழைப்புகளைக் கண்டால் நான் சாவகாசமாக இருக்கும் போது அழைத்துப் பேசுவேன். இன்று காலை ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. நான் முப்பது நிமிடம் கழித்தே பார்த்தேன். அந்த எண்ணுக்கு அழைத்தேன். ஓர் இளைஞனின் குரல். ‘’அங்கிள் அங்கிள் அப்பா இறந்துட்டாங்க அங்கிள். அப்பா இறந்துட்டாங்க அங்கிள் ‘’ என அழுதான் அந்த இளைஞன். என்னிடம் அந்த இளைஞனின் எண் இல்லை என்பதால் பெயர் வரவில்லை. அலைபேசியில் இப்படி ஓர் அழுகைக் குரல் கேட்டது என்னைக் கலக்கமடையச் செய்தது என்றாலும் என்னைத் தொகுத்துக் கொண்டு ‘’நீ யார்’’ என்று கேட்டேன். அவன் தன் பெயரைச் சொன்னான். எனக்கு மேலும் கலக்கமாகி விட்டது. என் நண்பரின் மகன். அவருக்கு 58 வயது இருக்கும். உடல்நலம் குன்றியிருந்தார்.சில வாரங்களுக்கு முன் அவரை அவருடைய வீட்டில் சந்தித்தேன். அப்போது ஆரோக்கியமாகத்தான் இருந்தார். என்னால் நான் கேள்விப்பட்ட செய்தியை நம்ப முடியவில்லை. அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அங்கே இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நண்பரின் உடல் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். உடல் வருவதற்காகக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் உடல் வந்தது. அங்கே என்னால் இயன்ற சிறு சிறு பணிகளைச் செய்தேன். உறவினர்களுக்கு செய்தி சொல்வது, தண்ணீர் கேன் வாங்கி வருவது போன்ற பணிகள். காலையிலிருந்து மாலை வரை இருந்தேன். அந்த நண்பர் இப்போது இல்லை என்பதை மனம் நம்பவேயில்லை ; ஏற்கவேயில்லை. ஆனால் மரணம் என்பது ஓர் உண்மை. சொல்லப் போனால் பேருண்மை. காசியில் எப்போதும் ஒலிக்கும் ராம் நாம் சத் ஹை என்ற வசனத்தை எண்ணிக் கொண்டேன். ஓம் சாந்தி.
Thursday, 21 November 2024
மானுட சமுத்திரம்
நேற்று காலை 7.30 விரைவு வண்டியில் சென்னை கிளம்பினேன். காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பே எழுந்து விட்டேன். கெய்சர் ஆன் செய்து நீர் சூடானதும் குளித்துத் தயாரானேன். வாசிப்பதற்கு கையில் ஒரு புத்தகம் இருந்தது. சென்னையில் அந்த புத்தகத்தை ஒருவருக்கு பரிசாக அளிக்க அமேசானில் ஆர்டர் செய்திருந்தேன். இரண்டு புத்தகங்கள் ஆர்டர் செய்திருந்தேன். ஒன்று பரிசளிக்க. இன்னொன்று எனக்கு. இரண்டும் கைக்கு வந்ததும் ஒன்றை எனது நூலக அறையிலும் இன்னொன்றை எனது எழுதுமேஜையிலும் வைத்திருந்தேன். அங்கே இருக்கும் போது அங்கே அந்த நூலை வாசிப்பது. இங்கே இருக்கும் போது இங்கே வாசிப்பது. ஒரே புத்தகத்தை இரண்டு புத்தகப் பிரதியில் வாசிப்பது புதிய அனுபவமாக இருந்தது. பயணப்பையில் இரண்டு புத்தகங்களையும் எடுத்துச் சென்று விட்டு ஒரு புத்தகத்தைப் பரிசளித்து விட்டு திரும்ப வரும் போது இன்னொரு பிரதியை வாசித்துக் கொண்டு வருவது எனத் திட்டமிட்டிருந்தேன். இருப்பினும் ஒரு பிரதியையே கொண்டு சென்றேன். திரும்ப இரவு ஆகலாம். அவ்வாறெனில் வாசிக்க வாய்ப்பில்லை. காலையில் செல்லும் போது வாசிக்கலாம்; அதற்கு ஒரு பிரதி போதும்.
ரயில் 90 சதவீதம் நிரம்பியிருந்தது. சில இருக்கைகள் காலியாக இருக்கவே செய்தன. எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இருக்கையில் அமர்ந்ததும் நூலை வாசிக்கத் தொடங்கினேன். முன்னரே 100 பக்கங்களுக்கு மேல் படித்திருந்தேன். விழுப்புரம் சென்றடைவதற்குள் மேலும் 125 பக்கங்கள் வாசித்தேன். விழுப்புரத்தில் ஒருவர் ரயிலில் ஏறி எனக்கு சில இருக்கைகள் தள்ளி அமர்ந்தார். அவர் ஓர் ஆன்மீக அமைப்பில் செயல்படுபவர் என்பதை அவரது தோற்றம் மூலமும் அவர் உடல்மொழி மூலம் யூகித்துக் கொண்டேன். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனது யூகம் சரிதான். அவர் நான் எண்ணிய ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தவரே. அவரிடம் செங்கல்பட்டு வரை உரையாடிக் கொண்டு வந்தேன். பல விஷயங்கள் குறித்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார். சக பயணிகளுக்கு ஆச்சர்யம். முன் பின் தெரியாத இருவர் திடீரென அறிமுகமாகி இவ்வளவு சுவாரசியமாக பேசிக் கொள்கிறார்களே என. நண்பரை செங்கல்பட்டில் இறக்கி விட்டு விடை கொடுத்தேன்.
7.30 வண்டி தாம்பரம் வரை மட்டுமே செல்லும். கிழக்கு தாம்பரம் ரயில்வே பயணச்சீட்டு சாளரத்தில் சென்னை கடற்கரைக்கு சீட்டு எடுத்துக் கொண்டு மின்சார ரயிலில் ஏறி அமர்ந்தேன். சந்திக்க வேண்டியவரை சந்தித்தேன். அவரிடம் நூலை அளித்தேன். அவர் அந்நூலை விரும்பினார். அது எனக்கு மகிழ்ச்சி தந்தது. இன்னொருவரை மாலை 5 மணிக்கு சந்திக்கச் சொன்னார். அந்த சந்திப்பு எப்போது நிகழும் என்பதைப் பொறுத்தே ஊர் திரும்பும் பயணத்தை முடிவு செய்ய முடியும்.
மெட்ரோ ரயிலில் பயணித்து நேரு பூங்கா சென்றடைந்தேன். சென்னையை மானுட சமுத்திரம் என்றே ஒவ்வொரு முறை வரும் போதும் எண்ணுவேன். பல முகங்கள். பலவிதமான ஆடை அணிகலன்கள். பலவிதமான மனநிலைகள். பலவிதமான பணிகள். லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி வாழ்வதன் உணர்வு நிலைகள். மெட்ரோ ரயில் போக்குவரத்து சந்தடி மிகுந்த இடங்களை சில நிமிடங்களில் கடக்க உதவி செய்து விடுகிறது. ஆட்டோவில் செல்ல ஒரு மணி நேரம் ஆகும் இடங்களைக் கூட 10 நிமிடத்தில் மெட்ரோ ரயில் கொண்டு சேர்த்து விடுகிறது.
மாலை சந்திப்பும் சுருக்கமாக முடிந்தது. சந்திப்பு முடிந்த விபரத்தை வீட்டுக்கு ஃபோன் செய்து சொன்னேன். போட் மெயிலில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்து அந்த தகவலை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினார்கள். எழும்பூரில் 6.30க்கு இருந்தேன். ஒரு உணவகத்துக்குச் சென்றேன். மெனு கார்ட் பார்த்தேன். இரண்டு ரொட்டியும் ஒரு தால் ஃபிரையும் ஆர்டர் செய்தேன். மோட்டார் சைக்கிள் பயணத்தில் வட இந்தியாவில் எனது வழக்கமான ஆர்டர் இதுதான். அங்கே ரொட்டியை தீயில் சுட்டு தருவார்கள். இங்கே கல்லில் சுடுவார்கள்.
முன்பதிவு பெட்டிக்கு வந்து சேர்ந்தேன். செங்கல்பட்டு வரை விழித்துக் கொண்டிருந்தேன். அப்போது மணி 8.30. சிறிது நேரம் விழி மூடுவோம் என கண் அயர்ந்தேன். எழும் போது சிதம்பரம் ரயில் நிலையம். இடையில் விழுப்புரம் வந்தது மூட்டமாக நினைவில் சில கணங்கள் இருந்தன. 12.15க்கு ஊர் வந்து சேர்ந்தேன்.
Tuesday, 19 November 2024
சி.பி.கி.ரா.ம்ஸ் - ஒரு புகார் பதிவு
ஒரு மாதம் முன்னால், அஞ்சல் அலுவலகத்தில் மின்னணு பண பரிமாற்ற விண்ணப்பம் ஒன்றனுக்கு ஒப்புகைச் சீட்டை உடன் வழங்காத சம்பவத்தை அஞ்சல்துறை மேலதிகாரிகளுக்கு தெரிவித்து எழுதிய மனுவை வெளியிட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்னால், அஞ்சல்துறை மேலதிகாரி எனக்கு அளித்த பதிலையும் பதிவிட்டிருந்தேன்.
நேற்று அஞ்சல் அலுவலகம் சென்ற போது மீண்டும் நிகழ்ந்த அதே சம்பவத்தையும் அது குறித்து சி.பி.கி.ரா.ம்ஸ் ல் பதிவு செய்த புகாரையும் கீழே வெளியிட்டிருக்கிறேன்.
*****
Friday, 15 November 2024
அன்னாபிஷேகம்
கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம் பலவிதங்களில் தனித்துவம் கொண்டது. சரித்திரப்பூர்வமாகவும் மிகவும் முக்கியமான ஊர். சோழப் பேரரசின் தலைநகராக நூற்றாண்டுகளுக்கு மேலாக இருந்திருக்கிறது. சோழ ராஜ்யத்திற்கு உறையூர், பூம்புகார், பழையாறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஊர்கள் தலைநகரங்களாக இருந்திருக்கின்றன. இவை அனைத்துமே கொள்ளிடம் ஆற்றுக்கு தெற்கே இருப்பவை. கங்கை கொண்ட சோழபுரம் மட்டுமே கொள்ளிடத்துக்கு வடக்கே அமைந்திருக்கும் தலைநகரம். வளமான காவிரி வடிநிலத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட சோழர்கள் கொள்ளிடத்துக்கு வடக்கே தங்கள் குடிகளுக்கு வளர்ச்சியை உருவாக்கிக் கொடுக்க விரும்பினர். வீர நாராயண ஏரி இந்த பகுதியில் வெட்டப்பட்டு ஏரியை சுற்றியிருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு இன்றளவும் பாசன வசதியை அளித்து வருகிறது. மாமன்னர் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழ கங்கம் இன்னொரு முக்கியமான ஏரி.
மாமன்னர் ராஜேந்திரன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு மகத்தான கனவு. அந்த ஆலயம் அளிக்கும் மன விரிவு மகத்தானது. ஒரு மகத்தான மனிதன் கண்ட மகத்தான கனவின் பருவடிவம் அந்த ஆலயம்.
ஆலயத்தின் துவாரபாலகர்கள் சிற்பங்களே மிகப் பெரியவை. அத்தனை பெரிய துவாரபாலகர்கள் கையில் ஏக முத்திரை காட்டிக் கொண்டு வெளியே இருப்பார்கள். அந்த ஏக முத்திரையின் பொருள் உள்ளே மிக மிகப் பெரியவன் ஒருவன் இருக்கிறான் என்பதாகும். அவன் ஏகன். அவனே அனேகனும்.
தமிழகம் இஸ்லாமியப் படையெடுப்புக்கு ஆளான போது காஞ்சிபுரத்தின் ஆலயங்களில் இருந்த தெய்வ உருக்கள் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மிக சமீபத்தில் உள்ள உடையார்பாளையத்தில் பல ஆண்டுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. எனவே காஞ்சிபுரத்துக்கும் உடையார்பாளையத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரருக்கு ஐப்பசி பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற தனது எண்ணத்தை தெரிவித்தார். அதனை ஆக்ஞையாகக் கொண்டு ஆலய பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்து வருகிறார்கள்.
ஆலயத்தின் சிவலிங்கம் மிகப் பெரியது. அத்தனை பெரிய லிங்கம் முழுமையும் அன்னத்தால் மூடப்படும். அன்றைய தினம் சிவலிங்கத்தை மூடும் ஒவ்வொரு அன்னப் பருக்கையும் ஒரு சிவலிங்கமாகக் கருதப்படும் என்பதால் அன்னாபிஷேகம் அன்று சிவலிங்கத்தை தரிசிப்பது கோடி சிவலிங்கங்களை தரிசனம் செய்ததற்கு நிகரானது என்பது ஒரு நம்பிக்கை.
இன்று நாள் முழுக்க கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் இருக்க வேண்டும் என எண்ணினேன். அவ்வாறு ஓர் அகத்தூண்டல் உருவாகியிருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் செல்ல ஊரிலிருந்து பந்தநல்லூர் வழியாக திருப்பனந்தாள் சென்று அங்கிருந்து அணைக்கரை வழியாக கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் வழியொன்று உள்ளது. அதுவே பேருந்து மார்க்கம். ஊரிலிருந்து 60 கி.மீ தூரம். இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழியொன்று உள்ளது. அது பலரால் அறியப்படாதது. அந்த மார்க்கத்திலேயே எப்போதும் நான் பயணிப்பேன். ஊரிலிருந்து மணல்மேடு சென்று முட்டம் கொள்ளிடம் பாலத்தைக் கடந்து முட்டம் செல்ல வேண்டும். அங்கிருந்து சில கி.மீ தூரத்தில் மோவூர் என்ற ஊர் உள்ளது. மோவூரில் வடக்கே திரும்பி ஆயக்குடி என்ற ஊரைக் கடந்து சென்றால் வடவார் பாலம் வரும். அதனைக் கடந்து நான்கு கி.மீ தூரம் சென்றால் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை வரும். அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் கங்கை கொண்ட சோழபுரம். மொத்த தூரம் 40 கி.மீ. முழுக்க முழுக்க கிராமங்கள் வழியாகவே செல்லும் பாதை.
காலை புறப்பட்டுச் செல்கையில் ஊரில் காவிரியைத் தாண்டினேன். இன்று ஊரில் கடைமுகம். ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். இந்த துலா மாதத்தில் முப்பது நாளும் காவிரியில் நீராடுவது விசேஷம். துலா மாதத்தின் கடைசி நாளில் நீராடுவது மேலும் விசேஷம். இரண்டு நாட்கள் முன்பாக இங்கே கணிசமான மழை பெய்திருந்ததால் காவிரியில் ஓரளவு தண்ணீர் இருந்தது. மக்கள் நீராடிக் கொண்டிருந்தனர். திருஇந்தளூரில் பரிமள ரங்கநாத சுவாமி தேரில் எழுந்தருளியிருந்தார். தேர் பவனி புரிந்து கொண்டிருந்த சுவாமி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது. இந்த மண் தெய்வங்களின் மண். இந்த நிலத்தில் பயணிக்கும் எந்த பயணியும் அதனை உணர்வான்.
ஒரு மணி நேரத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றடைந்தேன். இளைஞர்கள் சிலர் சாம வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். பெண்கள் சிலர் தேவாரமும் திருவாசகமும் பாடிக் கொண்டிருந்தனர். இரண்டையும் அமர்ந்து கேட்டேன். ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமியை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். ஆலயத்தில் கண் மூடி அமர்ந்திருந்தேன். சிவலிங்கம் அன்னத்தால் நிரம்பியிருந்தது. ஒவ்வொரு ஜீவனின் வயிற்றிலும் பசித்தீ கொழுந்து விட்டு எரிகிறது. அந்த தீயினுக்கு அளிக்கப்படும் அவியே அன்னம். எனவே அன்னமளித்தல் என்பது ஒரு வேள்வியே என்பது இந்திய மரபு. மலை போல் குவிந்திருக்கும் அன்னத்தை வணங்கினேன். அத்தனை பெரிய உரு காணும் எவரையும் மிகச் சிறு அணு என உணரச் செய்தது.
நாள் முழுதும் ஆலயத்துக்கு அருகில் அன்னதானம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அங்கே சென்று உணவருந்தினேன். ஒரு மணி நேரம் உணவு பரிமாறும் பணியில் இணைத்துக் கொண்டேன். உணவு பரிமாறுதல் என்பது ஓர் ஆன்மீக அனுபவம். நாம் பரிமாறும் உணவு முழுமையாக உண்ணப்பட்டிருப்பதைக் காண்பது என்பது மனதுக்கு பரவசம் அளிப்பது.
மீண்டும் ஆலயத்துக்குச் சென்றேன். காலை 10 மணியிலிருந்து தேவாரம் பாடிக் கொண்டிருந்த பெண்கள் மாலை 3 வரை பாடிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம். அவர்கள் உணவருந்த புறப்பட்ட போது எதிரில் கண்டேன். அவர்கள் பாடல் சிறப்பாக இருந்தது என்றும் ஐந்து மணி நேரமும் தெய்வாம்சம் கொண்ட பொழுதாக அவர்கள் இசையால் அமைந்தது என்றும் அவர்களிடம் கூறினேன். தேவாரம் பாடியவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார்.
இரவு வரை இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் இரு சக்கர வாகனம் நீண்ட தூரம் இயக்குவது உகந்தது அல்ல என்னும் மனப்பதிவு எனக்கு இருப்பதால் மாலை 3.30 அளவில் புறப்பட்டேன். ஒரு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். நாள் முழுவதும் லேசாக தூறிக் கொண்டிருந்தது உற்சாகமாக இருந்தது.
கங்கை கொண்ட சோழபுரம் ஊரில் மூன்று நாட்கள் தங்கியிருந்து பிரகதீஸ்வரரை சேவிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ஈஸ்வர ஹிதம்.
Thursday, 14 November 2024
ஒரு பயணத் திட்டம்
{ எனது நண்பர் ஒருவர் ரயில்வேயில் பணி புரிகிறார். அவரது சொந்த ஊர் திண்டிவனம். பணி புரிவது செங்கல்பட்டில். அவருக்கு நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல். பயணத்தில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் அவருக்கு இல்லை. சில நாட்கள் முன்பு நாங்கள் ஒருவருக்கொருவர் தற்செயலாக அறிமுகம் ஆனோம். தனக்கு ஒரு பயணத்திட்டம் ஒன்றை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கு என்னுடைய பரிந்துரை கீழே}
1. ’’சர்க்குலர் ஜர்னி டிக்கெட்’’ என்ற வசதி ரயில்வேயில் உள்ளது.
2. விழுப்புரத்தில் பயணத்தைத் தொடங்கவும்.
3. மெயின் லைன் மார்க்கத்தில் கும்பகோணம் வரவும். கும்பகோணம் கோயில் நகரம். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையான பல ஆலயங்கள் அங்கே உள்ளன. குடந்தை சார்ங்கபாணி கோயில், ராமசாமி கோயில், நாகேஸ்வரன் கோவில் ஆகியவை பெரியவை. பிரசித்தி பெற்றவை. முக்கியமானவை. சுவாமிமலை முருகனும் பட்டீஸ்வரம் துர்க்கையும் அவசியம் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள். யுனெஸ்கோவால் ‘’உலக பாரம்பர்ய சின்னம்’’ என அறிவிக்கப்பட்டிருக்கும் தாராசுரம் ஆலயமும் கும்பகோணத்தை ஒட்டி அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இறங்கி ஓரிரு நாள் தங்கி இந்த ஆலயங்களை சேவிக்கலாம்.
4. மெயின் லைனில் தொடர்ந்து திருச்சி செல்லவும். தாயுமான சுவாமி ஆலயம், உச்சிப் பிள்ளையார், ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களைச் சேவிக்கவும்.
5. திருச்சியிலிருந்து காரைக்குடி சென்று இறங்கி பிள்ளையார்பட்டி சென்று கற்பக வினாயகரை தரிசிக்கவும். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை சேவிக்கவும்.
6. காரைக்குடியிலிருந்து ராமேஸ்வரம் சென்று சேரவும்.
7. பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரவும். மதுரை மீனாட்சி அம்மன், அழகர் கோவில் செல்லவும். மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம் சென்று வரவும்.
8. மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லவும்.
9. திருநெல்வேலி ஆலயம் சேவித்த பின் கன்னியாகுமரி சென்றடையலாம். கன்யாகுமரியில் குமரி அம்மன் ஆலயம், விவேகானந்தர் பாறை, திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் ஆலயம் ஆகியவற்றை வழிபட்ட பின் திருவனந்தபுரம் செல்லலாம்.
10. திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப சுவாமியை ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சேவிக்கலாம்.
11. கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி சேலம் வந்தடையலாம்.
12. சேலத்திலிருந்து விழுப்புரம் வந்தடையலாம்.
இந்த பயணத்தின் தூரம் தோராயமாக 2000 கி.மீ இருக்கும். தமிழகத்தின் முக்கிய இடங்களை இந்த திட்டம் மூலம் காண முடியும். மிக நல்ல அனுபவமாக இருக்கும்.
Sunday, 10 November 2024
அக நக நட்பு
எனது நண்பர்களில் ஒருவர் விழுப்புரம் அருகே வில்லியனூரில் குடியிருந்தார். விழுப்புரத்துக்கும் அவரது ஊருக்கும் இடையே 20 கி.மீ தூரம். எனினும் அந்த தூரத்தைக் கடக்க ஒன்றரை மணி நேரம் ஆகி விடும். ரயிலில் சென்றால் ஊருக்கும் விழுப்புரத்துக்குமான 120 கி.மீ தூரத்தை இரண்டு மணி நேரத்தில் சென்றடையலாம். ஆனாலும் வில்லியனூர் செல்ல வேண்டுமானால் போக ஒன்றரை திரும்பி வர ஒன்றரை என கூடுதலாக 3 மணி நேரம். 20 கி.மீ க்கு 3 மணி நேரம் ஒதுக்குவது அசௌகர்யமானது என்பதால் வில்லியனூர் சென்று நண்பரைச் சந்திப்பது அரிதாக இருந்தது. சமீபத்தில் நண்பர் விழுப்புரத்துக்கு குடி வந்து விட்டார் என்று அறிந்திருந்தேன். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் நண்பர் பேசினார். அவரைச் சந்திக்க வேண்டும் போல் இருந்தது. ஞாயிறன்று சந்திக்க வருகிறேன் என்று சொன்னேன்.
நான் எப்போதுமே மனிதர்களைச் சந்திக்க விரும்புவேன். மனிதர்கள் மட்டுமல்ல புதிய நிலங்கள், நீர்நிலைகள், மலைகள், குன்றுகள், பறவைகள், பிராணிகள் என எல்லா உயிர்களையும் சந்திப்பது மகிழச் செய்வதே.
பயணத்தைத் திட்டமிட்டு அந்த திட்ட விபரத்தை யாரை சந்திக்கச் செல்கிறேனோ அவர்களிடம் அறிவித்து விடுவேன். இது என் பழக்கம். இன்று காலை 6 மணிக்கு விழுப்புரம் பாசஞ்சர் இருந்தது. அதில் செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். காலை 3.15 மணிக்கு விழிப்பு வந்தது. எழுந்து குளித்து விட்டு 4 மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். வீட்டில அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மெல்ல கீழே வந்து சத்தம் இல்லாமல் கதவைத் திறந்தேன். கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தேன். ரூ. 200 இருந்தது. எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் ரூ.75. திரும்பி வரவும் அதே தொகை. டூ வீலர் பார்க்கிங் கட்டணம் ரூ.15. செலவுகள் போக உபரியாக ரூ.35 இருக்கும் அது யதேஷ்டம் என முடிவு செய்து கிளம்பினேன். ரயில் ஐந்து மணிக்கு. செல்லும் வழியில் 4.30க்கு ஒரு தேனீர்க்கடை திறந்திருந்தது. அங்கே ஒரு தேனீர் அருந்தினேன். பின் ரயில் சந்திப்பில் ரயில் ஏறினேன். நண்பர் ஸ்டேஷன் வாசலில் காத்திருந்தார். அவர் வாகனத்தில் ஏறிக் கொண்டு வீட்டுக்கு சென்றோம். சமீபத்தில் படித்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நூல் குறித்து பேசத் தொடங்கினோம். நூல்கள் குறித்து பேசுவது எப்போதுமே உவப்பானது. சமீபத்தில் வெளியாகியுள்ள ‘நெகிழிக் கோள்’ நூல் குறித்தும் சொன்னேன்.
காந்தியம் குறித்து நண்பர் சில விளக்கங்களைக் கேட்டார். நான் உணர்ந்திருக்கும் சில விஷயங்களைக் கூறினேன். உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தோம். எவரேனும் நூல்கள் குறித்து இவ்விதம் உற்சாகமாக உரையாடுவதைக் கொண்டால் எவரும் திகைத்து விடுவார்கள். அறிவார்ந்த விஷயங்களில் மட்டுமே இத்தகைய உற்சாகம் சாத்தியம். பொருள் சார்ந்த விஷயங்களின் எல்லை மிகக் குறுகியதே.
நண்பருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் கைக்குழந்தையாக ஒரு வயது இருந்த போது அவனைச் சந்திக்கச் சென்றது நினைவில் வந்தது.
இன்றைய சிற்றுண்டி இட்லி. சட்னியும் சாம்பாரும் தொடு உணவு. நண்பர் வீட்டில் உணவுண்டது மிகுந்த நிறைவைத் தந்தது.
மூன்று மணி நேரம் பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து நண்பர் கேட்டார். என்னுடைய பொதுச் செயல்பாட்டு அனுபவங்களைக் கூறிக் கொண்டிருந்தேன். தற்போது எனது திட்டமிடலில் உள்ள விஷயங்கள் குறித்து சொன்னேன்.
10 மணிக்கு நண்பர் வீட்டிலிருந்து கிளம்பி ரயில் நிலையம் வந்தோம். சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படத் தயாராக இருந்தது. ரயிலில் ஏறிக் கொண்டேன். 10.30க்கு புறப்பட்ட வண்டி 12.30க்கு ஊர் வந்து சேர்ந்தது.
அடுத்த ஞாயிறு நாள் முழுதும் இருக்கும் வண்ணம் வருவதாகக் கூறியிருக்கிறேன்.
Friday, 8 November 2024
பழக்கம் (நகைச்சுவைக் கட்டுரை)
அமைப்பாளருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். வயது முதிர்ந்தவர். நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரத்தைக் கண்டு விவசாய முதலமைச்சர், சத்திய சோதனை, ஜவஹர்லால் நேரு சுயசரிதம், காமராஜர் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களின் தொகுப்பை ஆர்டர் செய்து அந்த நூல்கள் அவரது வீட்டில் இருந்தன. அங்கே சென்றிருந்த அமைப்பாளர் அவற்றை எடுத்துப் பார்த்தார்.
அமைப்பாளர் சமீபத்தில் இணையத்தில் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியார் குறித்து சோமலெ எழுதிய ‘’விவசாய முதலமைச்சர்’’ நூலை வாசித்து விட்டு அது குறித்து வலைப்பூவில் எழுதியிருந்தார்.
நேருவின் சுயசரிதம் நூல் அமைப்பாளரைக் கவர்ந்தது. அந்த நூல் இரண்டு பாகங்களாக 870 பக்கம் கொண்டது. நண்பரிடம் கூறி விட்டு அதன் முதல் பாகத்தை வாசிக்க வீட்டுக்குக் கொண்டு வந்தார். இரண்டு நாட்களில் முதல் பாகத்தை வாசித்தார். அதனை எடுத்துச் சென்று நண்பரிடம் கொடுத்து விட்டு இரண்டாம் பாகத்தை எடுத்து வந்தார். அதனை வாசிக்கத் தொடங்கி இப்போது இன்னும் 50 பக்கங்களே அதனை நிறைவு செய்ய உள்ளன.
நண்பர் ஏதேனும் ஒரு நூலை வாசிக்கக் கையில் எடுத்து விட்டாரா என்பது தெரியவில்லை.
Wednesday, 6 November 2024
போர்த்தொழில் பழகு (மறுபிரசுரம்)
வீரப்ப வேட்டை ( மறு பிரசுரம்)
சென்ற வாரத்தில் Veerappan : Chasing the brigand என்ற நூலை வாசித்தேன். வீரப்பனைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த டிஜிபி விஜயகுமார் எழுதிய நூல். சட்டமும் வணிக மேலாண்மையும் படித்திருக்கிறார். ஒரு காவல்துறை ஆய்வாளரின் மகனாக ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து சுயவிருப்பத்தின் காரணமாக காவல்துறை பணிக்கு வருகிறார். கமாண்டோக்களுக்கு பயிற்சியளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இந்திய பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை கவனிக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறார். எல்லைப் பாதுகாப்புப் படையில் பணி புரிந்திருக்கிறார்.
எஸ்.டி.எஃப் க்கு தலைவராக ஆனதும் வீரப்பனைப் பிடித்தே ஆக வேண்டும் என உறுதியுடன் இருக்கும் நபர்களைச் சந்திக்கிறார். சாதாரண கான்ஸ்டபிளிலிருந்து காவல்துறை மேலதிகாரிகள் வரை. தேடுதல் வேட்டையில் வீரப்பனை நூலிழையில் தவற விட்டவர்களையும் சந்தித்து அவர்கள் அனுபவங்களை நேரடியாகக் கேட்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் நோக்கில் வீரப்பன் நெருங்கவே முடியாத ஆள் அல்ல என்று என்பதையும் வீரப்பன் பிடிபடுவது சாத்தியம் என்பதையும் சொல்கிறார்கள். அவற்றைக் கொண்டு எஸ். டி. எஃப்-ன் யுக்திகளை விஜயகுமார் வகுக்கிறார்.
சிறப்பு அதிரடிப்படையின் தலைவராகும் போது அவருக்கு ஐம்பது வயது. சத்தியமங்களம் வந்து சேர்கிறார். அவர் மனைவி பணி ஓய்வு பெறுவதற்குள் வீரப்பனைப் பிடித்து விடுவீர்களா என்று கேட்கிறார். எட்டு வருடம் ஆகும் என நினைக்கிறாயா என மனைவியிடம் கேட்கிறார். உங்களுக்கு வீட்டில் இடம் மாறியிருக்கும் பொருளைத் தேடுவதே கடினம் என்பதால் கேட்டேன் என்கிறார் அவர் மனைவி.
நூலில் தன் காஷ்மீர் அனுபவங்களை ஆங்காங்கே பகிர்ந்து கொள்கிறார். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டை இராணுவம், பி.எஸ்.எஃப், மாநில காவல்துறை ஆகியோர் சுற்றி வளைக்கின்றனர். வீட்டுக்கு முன் இருக்கும் சாலையில் பி.எஸ்.எஃப்-ன் வேன் ஒன்று வந்து விடுகிறது. உள்ளே ஜவான்கள் இருக்கின்றனர். தீவிரவாதிகள் வேனின் டிரைவரை சுட்டுக் கொன்று விடுகின்றனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இம்மாதிரியான நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான குறிப்புகள் இராணுவத்துக்கும் பி.எஸ்.எஃப் க்கும் உண்டு. ஒரு கணம் அவற்றை எண்ணாமல் குறிப்புகளை மீறி தானே ஓடிச் சென்று வேனின் கதவைத் திறந்து டிரைவர் உடலை வேனுக்குள் நகர்த்தி விட்டு அந்த வேனை இயக்கி தூரமாக கொண்டு செல்கிறார். ஜவான்களின் உயிர் காக்கப்படுகிறது.
மதுரையில் இருக்கும் போது தன் நம்பிக்கைக்குரிய எஸ்.டி.எஃப் வீரரின் மரணச்செய்தி வருகிறது. சத்தியமங்களம் விரைகிறார். உடன் அவர் மனைவியும் அவருடன் காரில் வருகிறார். அவர் மனைவி நீண்ட பயணத்தில் தன் துக்கத்தையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு ஒரு சொல் கூட உச்சரிக்காமல் உடன் வந்தார் என்பதை பதிவு செய்கிறார்.
மைசூரில் ஓய்வு பெறும் கர்நாடக அதிரடிப்படை வீரர் ஒருவரின் பணி ஓய்வு நிகழ்ச்சிக்கு செல்கிறார். ஓய்வு பெறும் வீரர் மனநிறைவு இல்லாமல் இருக்கிறார். விஜயகுமாரிடம் நாம் காட்டுக்குள் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் தேடும் நபரை சமவெளிக்கு கொண்டு வந்தால் நம் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கக் கூடும் என்கிறார். ஆபரேஷன் ககூன் உருவாகி செயலாக்கம் பெறுகிறது.
பல வருடங்களாக தேடப்பட்ட நபருக்கான நேரம் T என குறிக்கப்படுகிறது. குறித்த நேரத்தில் பலர் கேட்க விரும்பிய செய்தி யதார்த்தமாகிறது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. சமீபத்தில் ஹிந்தியில் வெளியானது. விரைவில் தமிழில் மொழியாக்கம் வரவுள்ளது.
Tuesday, 5 November 2024
நெகிழிக் கோள்
நூல் : நெகிழிக் கோள் ஆசிரியர் : இரா. மகேந்திரன் பக்கம் : 110 விலை : ரூ. 145, பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629001.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் பிளாஸ்டிக். ஐரோப்பாவின் சமூகச் சூழலும் அரசியல் சூழலும் அதன் தேவையை உருவாக்கின. ஐரோப்பிய நாடுகள் துவக்கிய நிகழ்த்திய இரு உலகப் போர்கள் பிளாஸ்டிக்கின் உற்பத்தியை மிகப் பெரிய அளவில் நிகழ்த்தின. இவற்றால் நிலைபெற்ற பிளாஸ்டிக் பின்னர் உலக நாடுகளெங்கும் பரவியது. இன்று மனித சமுதாயத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்றிருக்கும் பொருளாகி விட்டது. உலகின் ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் ஏதேனும் ஒரு விதத்தில் பயன்படுத்தும் பொருளாகவும் ஆகி விட்டது. இப்போதுள்ள நிலையில், பிளாஸ்டிக் மெல்லக் கொல்லும் நஞ்சு. எந்த அளவுக்கு மனிதர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வார்களோ அந்த அளவு அவர்கள் வாழ்வு நலம் கொண்டதாக இருக்கும்.
பிளாஸ்டிக் கழிவுகளை சிதைக்கும் நுண்ணுயிரிகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி ஒரு உத்தரத்தைப் போலவும் பிளாஸ்டிக்கை சிதைக்கும் தொழில்நுட்ப ஆய்வுகள் ஒரு துரும்பைப் போலவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு கொடும் யதார்த்தம்.
ஐரோப்பா ‘’தொழில்நுட்ப’’த்தை வழிபடும் விதந்தோதும் மனநிலையை தனது காலனி ஆதிக்கம் மூலம் உலகெங்கும் உருவாக்கியது. அதே மனநிலையை அடிப்படையாய்க் கொண்ட மார்க்ஸிஸ்டுகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் அதனை மேலும் உறுதிப்படுத்தியது. முதலாளித்துவம் மார்க்ஸியம் ஆகிய இரண்டு சிந்தனைகளுமே இயற்கையை சுரண்ட வேண்டிய பண்டமாகக் காண்கின்றன. பிளாஸ்டிக் உற்பத்தியைப் போல் இயற்கையை சுரண்டும் இன்னொன்று வேறில்லை. நுகர்வு கலாசாரம் குறித்து நாம் ஆழமான கேள்விகளை எழுப்பிக் கொள்ள வேண்டிய காலம் இது.
இரா. மகேந்திரன் அவர்கள் எழுதிய ‘’நெகிழிக் கோள்’’ என்ற நூல் சமீபத்தில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. பிளாஸ்டிக்க்கின் தோற்றம், அதன் வெவ்வேறு வகை மாதிரிகள், அவற்றின் வேதிப் பண்புகள், அவை உருவாக்கும் சுற்றுச் சூழல் மாசுபாடுகள், உலகம் அதனால் அடைந்திருக்கும் ஆற்றொணா சீர்கேடுகள், பிளாஸ்டிக் அபாயத்திலிருந்து தப்பும் வழிமுறைகள் என ஒவ்வொரு விஷயம் குறித்தும் விரிவான தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கும் நூல்.
நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கையில் எந்த வாசகரும் ஒரு பேரதிர்ச்சியை உணர்வார் என்பதில் ஐயம் இல்லை.