Sunday, 17 January 2021

இந்திரஜித் வதைப் படலம்

9269.   ஏயினன் இன்னன் ஆக,

    இலக்குவன் எடுத்த வில்லான்,

சேய் இரு விசும்பை நோக்கி

    ‘வீடண! தீயோன் அப்பால்

போயினன் ஆதல் வேண்டும்;

    புரிந்திலன் ஒன்றும்என்பான்,

ஆயிரம் புரவி பூண்ட தேரின்

    பேர் அரவம் கேட்டான்.

 

வீடணனிடம் இலக்குவன் இந்திரஜித் களத்தை விட்டு அகன்று விட்டான் எனக் கூறிக் கொண்டிருந்த அதே கணத்தில் ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் ஒலியை இலக்குவன் கேட்டான்.

 

9272.   ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன்,

    அமரரும் வெருவினர்; கவிகுலமும்

வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால்,

    விடுகணை சிதறினன்; அடுதொழிலோன்,

தீர்த்தனும், அவன் எதிர்முடுகி; நெடுந்

    திசைசெவிடு எறிதர, விசைகெழுதிண்

போர்த்தொழில் புரிதலும், உலகு கடும்

    புகையொடு சிகை அனல் பொதுளியதால

 

இந்திரஜித்தின் வரவைக் கண்டு அரக்கர்கள் ஆர்ப்பரித்தனர். தேவர்களும் வானரர்களும் அஞ்சினர். இந்திரஜித் தனது அம்புகளை எய்யத் துவங்கினான். அவற்றுக்கு நிகரான அம்புகளை இலக்குவனும் எய்தினான். அவற்றின் மோதலால் களம் பெரும் புகைமண்டலம் ஆனது.

 

 

 

9277.   ‘வில்லினின் வெல்லுதல் அரிதுஎனலால்,

    வெயிலினும் அனல் உமிழ் அயில், விரைவில்

செல் என, மிடல் கொடு கடவினன்; மற்று

    அது திசைமுகன் மகன் உதவியதால்;

எல்லினும் வெளிபட எதிர்வது கண்டு,

    இளையவன் எழுவகை முனிவர்கள்தம்

சொல்லினும் வலியது ஓர் சுடுகணையால்,

    நடு இரு துணிபட உரறினனால்.

 

அரிய ஈட்டி ஒன்றை இலக்குவன் மேல் ஏவினான் இந்திரஜித். அதனைத் தன் அம்பால் இரண்டாகப் பிளந்தான் இலக்குவன்.

 

9279.   ‘தேர் உளது எனின், இவன்வலி தொலையான்

    எனும் அது தரெிவு உற, உணர் உறுவான்

போர் உறு புரவிகள் படுகிலவால்;

    புனைபிணி துணிகில, பொருகணையால்;

சீரிது, பெரிது, இதன் நிலைமைஎனத்

    தரெிபவன் ஒரு சுடு தறெுகணையால்,

சாரதி மலை புரை தலையை நெடுந்

    தரையிடை இடுதலும் நிலை திரிய.

 

இந்திரஜித்துக்கு அவனுடைய தேரே பலம். அவனை வீழ்த்த வேண்டுமானால் அவனுடைய தேரை வீழ்த்த வேண்டும். இலக்குவனின் அம்புகளால் தேரின் குதிரைகளையோ தேர்க்காலையோ அழிக்க முடியவில்லை. எனவே ஓர் அம்பெய்தி அத்தேரின் பாகனை இலக்குவன் கொன்றான்.

 

9283.   ‘எய்தவன் பகழி எல்லாம் பறித்து,

    இவன் என்மேல் எய்யும்;

கய்தடுமாறாது; உள்ளம்,

    உயிர் இனம் கலங்காது யாக்கை

மொய்கணை கோடி கோடி

    மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்;

அய்யனும், ‘இவனோடு எஞ்சும்

    ஆண்தொழில் ஆற்றல்என்றான்.

 

இந்திரஜித்தின் வீரத்தை இலக்குவன் வியந்தான். அமரர்களும் வியந்து பொன்மலர் மாரி பொழிந்தனர்.

 

9284.   ‘தேரினைக் கடாவி, வானில்

    செல்லினும் செல்லும்; செய்யும்

போரினைக் கடந்து மாயம்

    புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்

காரினைக் கலந்து வஞ்சம்

    கருதினும் கருதும்; காண்டி,

வீர; மெய்; பகலின் அல்லால்,

    விளிகிலன் இருளின், வெய்யோன்.

 

வீடணன் இலக்குவனிடம் இந்திரஜித் இரவில் கூடுதல் பலம் பெற்று விடுவான்; அவனைப் பகலில் அழிப்பதே உசிதமானது எனக் கூறினான்.

 

9288.   ‘ஆர் அழியாத சூலத்து

    அண்ணல் தன் அருளின் ஈந்த

தேர் அழியாத போதும்,

    சிலை கரத்து இருந்த போதும்,

போர் அழியான், இவ் வெய்யோன்;

    புகழ் அழியாத பொன் தோள்

வீர! இது ஆணைஎன்றான்

    வீடணன், விளைவது ஓர்வான்.

 

வீடணன் இலக்குவனிடம், சங்கரன் அளித்த தேரும் வில்லும் இந்திரஜித் கையில் இருக்கும் வரை அவனை அழிக்க முடியாது என்று கூறினான்.

 

9289.   ‘பச்சை வெம்புரவி வீயா;

    பல இயல் சில்லி பாரில்

நிச்சயம் அற்று நீங்கா

    என்பது நினைந்து, வில்லின்

விச்சையின் கணவன் ஆனான்,

    வின்மையால், வயிரம் இட்ட

அச்சினோடு ஆழி வெவ்வேறு

    ஆக்கினான், ஆணி நீக்கி.

 

தேரின் கடையாணியை உடைத்து தேரை நிலைகுலையச் செய்தான் இலக்குவன்.

 

9290.   மணிநெடுந் தேரின் கட்டு

    விட்டு, அது மறிதலோடும்,

அணிநெடும் புரவி எல்லாம்

    ஆற்றல ஆய அன்றே

திணிநெடு மரம் ஒன்று

    ஆழிவாள் மழுத் தாக்க, சிந்திப்

பணை நெடு முதலும் நீங்க,

    பாங்கு உறை பறவை போல.



கோடரியால் தாக்கப்பட்ட பெருமரத்தின் பறவைகள் சிதறிப் போவது போல இந்திரஜித்தின் தேர் சிதறியது.



9295.   ‘சிலை அறாது எனினும், மற்று அத்

    திண்ணியோன் திரண்ட தோளாம்

மலை அறாது ஒழியாதுஎன்னா,

    வரிசிலை ஒன்று வாங்கி,

கலை அறாத் திங்கள் அன்ன

    வாளியால், கையைக் கொய்தான்,

விலை அறா மணிப்பூணோடும்,

    வில்லொடும், நிலத்து வீழ.

 

இந்திரஜித்தின் வில்லை உடைப்பதற்கு பதிலாக வில்லை ஏந்தியிருக்கும் இந்திரஜித்தின் கையை அறுத்தெரிந்தான் இலக்குவன்.

 

9302.   காற்று என, உரும் ஏறு என்ன,

    கனல் என, கடைநாள் உற்ற

கூற்றம் ஓர் சூலங்கொண்டு

    குறுகியது என்ன, கொல்வான்

தோற்றினான்; அதனைக் காணா,

    ‘இனி, தலைதுணிக்கும் காலம்

ஏற்றதுஎன்று, அயோத்தி வேந்தற்கு

    இளையவன் இதனைச் செய்தான்.

 

கொடும் கூற்றென எழுந்த இந்திரஜித்தினைக் கொன்று அழித்திட உறுதி கொண்டான் இந்திரஜித்.

 

9303.   ‘மறைகளே தேறத்தக்க,

    வேதியர் வணங்கற் பால

இறையவன் இராமன் என்னும்

    நல் அறமூர்த்தி என்னின்,

பிறை எயிற்று இவனைக் கோறி

    என்று, ஒரு பிறைவாய் வாளி

நிறை உற வாங்கி விட்டான்

    உலகு எலாம் நிறுத்தி நின்றான்.

 

இராம நாமம் உரைத்து தன் அம்பை இந்திரஜித் மேல் செலுத்தினான் இலக்குவன்.

 

9304.   நேமியும், குலிச வேலும்,

    நெற்றியின் நெருப்புக் கண்ணான்

நாம வேல் தானும், மற்ற

    நான்முகன் படையும், நாண,

தீ முகம் கதுவ ஓடிச் சென்று,

    அவன் சிரத்தைத் தள்ளி,

பூமழை அமரர் சிந்த,

    பொலிந்தது அப் பகழிப் புத்தேள்.

 

ராம நாமம் சொல்லி ஏவப்பட்ட அம்பு இந்திரஜித் தலையைக் கொய்தது.

 

 

9321.   கம்ப மதத்துக் களியானைக்

    காவல் சனகன் பெற்றெடுத்த

கொம்பும் என்பால் இனிவந்து

    குறுகினாள் என்று அகம்குளிர்ந்தேன்;

வம்பு செறிந்த மலர்க்கோயில்

    மறையோன் படைத்த மாநிலத்தில்,

தம்பி உடையான் பகை அஞ்சான்

    என்னும் மாற்றம் தந்தனையால்.

 

இராமன் இலக்குவனிடம் உன் வீரத்தை முழுமையாகக் கண்ட போது மீண்டும் சீதையை அடைந்த மகிழ்ச்சியை அடைந்தேன். தம்பி உடையான் பகைக்கு அஞ்சான் என்பதை உணர்ந்தேன். என்றார்.



 

Wednesday, 13 January 2021

பேரருள்

நேற்று அம்மாவின் கிராமத்தில், அம்மாவின் தாய்மாமா - வீரராகவன் தாத்தா- இயற்கை எய்தினார். 91 வயது. 

அவரை வளர்த்தது என் பாட்டி. சிறு வயது முதலே வடலூர் இராமலிங்க சுவாமிகள் மீதும் தீப வழிபாட்டின் மீதும் பெரும் பற்று கொண்டவராய் இருந்தார். தனது 20வது வயதில் கிராமத்தில் வள்ளலார் ஆலயம் அமைக்க ஊர் நடுவே இருந்த மேட்டுப்பாங்கான 20,000 சதுர அடி மனையை ஊருக்கு தானமாக அளித்தார். இது நடந்தது 1950ம் ஆண்டு. 

அங்கே ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்புடன் வள்ளலார் ஆலயம் கட்டப்பட்டது. ஜோதி ஏற்றப்பட்டு இன்றளவும் ஒளிர்கிறது. தீபத்திற்கு எண்ணெய் விடுதல் தாத்தாவின் பணி. காலை மாலை என இரண்டு வேளையும் ஆலயத்துக்குச் செல்வார். ஆலயத்தின் அருகே தான் அவரது வீடு. ஆலயப் பணிகள் இருப்பதனால் எந்த வெளியூர் சென்றாலும் ஒரே நாளில் ஊர் திரும்பி விடுவார்.  எப்போதும் திருவருட்பாவை ஓதிக் கொண்டிருப்பார். கையில் எப்போதும் திருநீறு இருக்கும். கிராமத்தில் அனைவரும் தைப்பூசத்திற்கு மூன்று நாட்கள் முன்னால் கிளம்பி வடலூர் சென்று வடலூரில் ஜோதி தரிசனம் செய்து விட்டு அன்னதானம் அளித்து விட்டு திரும்பும் போது வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த கருங்குழி, வள்ளலார் பிறந்த மருதூர் மற்றும் வள்ளலார் உள்ளம் உருகி வழிபட்ட சிதம்பரம் நடராஜர் ஆலயம் ஆகிய இடங்களில் வழிபாடு செய்து விட்டு ஊர் திரும்புவார்கள். 

ஊரில் விநாயகர் ஆலயம் உள்ளது. மாரியம்மன் கோவில் உள்ளது. திரௌபதி அம்மன் கோவில் இருக்கிறது. பெருமாள் கோவில் இருக்கிறது. வள்ளலார் கோவில் இருக்கிறது. அனைத்து ஆலயப் பணிகளையும் திருவிழாக்களையும் முன்னின்று நடத்தியவர்.

நான் சிறு குழந்தையாய் இருந்ததிலிருந்தே என் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். ஆயிரம் பிறைகள் கண்ட நிறை வாழ்வு. சுடர் தெய்வத்தின் ஆசியைப் பெற்ற வாழ்வு. 

வீரராகவன் தாத்தாவுக்கு என் அஞ்சலி.

Sunday, 10 January 2021

வளர்ச்சி

இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். 

நான் எவரைச் சந்திக்கும் போதும் அவர்களாக ஆரம்பிக்காமல் பொது விஷயங்கள் குறித்து பேசுவதில்லை. ஒரு விஷயத்தைக் கேட்டு புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்களிடம் மட்டுமே அவர்கள் சொல்லும் விஷயங்களுக்குப் பின்னால் இருக்கும் அம்சங்களைச் சுட்டிக் காட்டுவேன். எந்த விதத்திலாவது அவர்கள் சிந்தனைக்கு அது உதவ வேண்டும் என எண்ணுவேன். அந்த சாத்தியம் இல்லாத நபர்களிடம் நான் மௌனம் காத்து விடுவேன். 

‘’தமிழ்நாடு திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளால் காக்கப்பட்ட மாநிலம்’’ என்றார் நண்பர். 

‘’அவர்கள் எதைக் காத்தார்கள்?’’ நான் கேட்டேன். 

‘’தேசியத்துக்கு இங்கே இடம் கிடையாது. தேசியத்தை எதிர்த்து மாநில நலன்களை காத்தார்கள்’’ என்றார். 

நான் அவரிடம் சில விஷயங்களை முன்வைத்தேன். 

1. திராவிட இயக்கம் அடிப்படையில் எதிர்மறையான இயக்கம். அவர்கள் சமூக மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை. அவர்களைப் போல் இயங்கும் எவராலும் சமூக மாற்றத்தை உண்டாக்கிட முடியாது. 

சமூக மாற்றத்துக்காக சிந்திக்கும் உழைக்கும் அமைப்புகள் சாமானிய மக்கள் பொருளியல் நலன்களைப் பெற செயல்படுவார்கள். தமிழ்நாட்டில் அதனை முன்னெடுத்தது காந்திய அமைப்புகள். தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் திராவிட இயக்கம் சாமானியர்களின் பொருளியல் நலன் குறித்த எந்த செயல்பாட்டிலும் ஈடுபட்டதில்லை. 

2. திராவிட இயக்கத்தின் அரசியல் பாணி என்பது எதிர்மறைப் பிரச்சாரம். எதிர்மறை செயல்பாடுகள். எந்த பிரதேசத்திலும் பல ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கும் பண்பாட்டுக் கட்டமைப்புகளின் மீது அவர்கள் வசையையும் அவதூறையும் பரப்புவார்கள். 

‘’ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவிக்கையிலே உனக்குத் தேரோட்டம் தேவைதானா தியாகராஜா?’’ என்பது அவர்களுடைய முழக்கம். 

தேர்த் திருவிழா ஒரு பண்பாட்டு நிகழ்வு. பல நூற்றாண்டுகளாக நிகழ்வது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் போது பல எளிய மக்களும் விவசாயிகளும் கைவினைஞர்களும் சிறு வணிகர்களும்  அதனால் பலன் பெறுகிறார்கள் என்பதே உண்மை. தேரோட்டம் தேவைதானா என்ற கேள்வி நேரடியாக எளிய மக்களையே பாதிக்கும். 

திராவிட இயக்க ஆட்சிக் காலத்தில் தேரோட்டம் மீண்டும் நடந்தது என்பார்கள். மேடை மேடையாக தேரோட்டம் தேவைதானா என கேட்டதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு தேரை ஓட்டவில்லை. 

3. திராவிட இயக்கம் எங்குமே மக்களை இணைத்தது இல்லை. மக்கள் பிரிந்து இருந்து பூசலிட்டவாறு இருப்பதன் மூலமே அவர்களால் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள இயலும். சாதிப் பூசல்கள் தமிழ்நாட்டில் இந்த அளவு இருப்பதற்குக் காரணம் திராவிட இயக்கம். 

4. திராவிட இயக்கம் அரசாங்கம் என்ற அமைப்பை நம்பிச் செயல்படுவது. அதாவது அரசாங்கத்தின் கஜானாவை நம்பி இருப்பது. எனவே அரசு என்ற அமைப்பின் செயல்பாடுகளில் பொதுமக்களுக்கு எந்த புரிதலும் இருந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கருத்தாக இருக்கக் கூடியவர்கள். தங்கள் செயல்பாடுகள் தடையின்றி நடக்க அரசாங்க ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதை திராவிட இயக்கம் பெரிய அளவில் ஊக்குவிக்கும். 

5. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட பல விஷயங்களில் தமிழ்நாடு முன்னிலை பெற்றிருக்கிறது என்பார்கள். தொலைநோக்கு கொண்ட தலைமை தமிழ்நாட்டுக்கு வாய்த்திருக்கும் என்றால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருளியல் மலர்ச்சியை உருவாக்கக் கூடிய பல ஆக்கபூர்வமான விஷயங்களை இங்கே நிகழ்த்த முடியும்.

அந்த சாத்தியத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் தமிழ்நாட்டை வைத்துள்ளார்கள்.

6. தமிழ்நாட்டில் எழுபது ஆண்டுகளாக திராவிட இயக்கம் விதைத்திருக்கும் விஷ வித்துக்கள் தமிழ்நாட்டு மக்கள் இணைந்து பொருளியல் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாத வண்ணம் செய்துள்ளது. அரசியலை மிகப் பெரிதாக எண்ணும் எந்த சமூகத்தாலும் வளர முடியாது. அதற்கு தமிழ்ச் சமூகமே உதாரணமாகி உள்ளது. 

7. திராவிட இயக்கத்தையும் சாராயத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சாராயத்தை ஊரெங்கும் பரப்பி கொண்டு சேர்க்கும் அவர்களுடைய செயல்பாடு ஒன்றே சாமானியர்கள் மேல் அவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்பதை உணர்த்தும். 






ஓவியம்

எல்லாம் ஓய்ந்து போகும்
நம்
சஞ்சலங்கள்
துயரங்கள்
வருத்தங்கள்
ஈரமான துணியில்
துடைத்த பின்
உலர்ந்து கொண்டிருக்கிறது
சிலேட் 

Thursday, 7 January 2021

இறை

உன்னைச் சுற்றி 
மலர் வண்ணங்கள் சூழ்ந்து கொள்கின்றன
சுடர்ப் பிரகாசம் நிறைகிறது
தொலைதூர மணியோசையின்
நாத அலைகள் மிதக்கின்றன 
கடலில்
அலைகள் அனைத்தையும் தொடும்
சந்திரனைக் கண்டிருக்கிறாயா
அதன் சிறு துளி 
உன்னை
எப்போதும் தொடர்கிறது
கரையும் உள்ளம்
எங்கும்
காண்கிறது
இறைமையை

அதிகாரி

இரண்டாண்டுகளுக்கு முன்னால், ஜனவரி மாதம் முதல் வாரத்தில், எனது நண்பன் கர்நாடகாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பயிற்சி அதிகாரியாகச் சேர்ந்தான். அவன் பணியில் சேர்ந்த முதல் தினம் நன்றாக நினைவில் உள்ளது. இன்று காலை ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். பயிற்சிக் காலத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாகி விட்டதாக. மிகுந்த மகிழ்ச்சியை மனம் உணர்கிறது. வாழ்த்துக்கள் நண்பா!

 

Wednesday, 6 January 2021

கும்பகர்ணன் வதைப் படலம்

7456.   விண்ணினை இடறும் மோலி;

    விசும்பினை நிறைக்கும் மேனி;

கண்ணெனும் அவை இரண்டும்

    கடல்களின் பெரிய ஆகும்;

எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்

    வேந்தன் பின்னோன்

மண்ணினை அளந்து நின்ற

    மால் என வளர்ந்து நின்றான்.

 

கவியுள்ளம் மகத்தான எதைக் கண்டாலும் உணர்ச்சிகரமாகிறது. கும்பகர்ணன் மேல் கம்பனுக்கு ஒரு பிரியம் இருக்கிறது. தன் நிலை வழுவாதவன் என்பதால். நீதி அறிந்து உரைப்பவன் என்பதால். இந்த படலத்தில் அவனைக் காட்டும் முதல் காட்சியிலேயே மிக பிரும்மாண்டமாய் காட்டுகிறான்.

 

அவனது சிரம் விண்ணைத் தொடுகிறது. உலகமெனப் பரந்து பெரிதாய் உள்ளது அவன் உடல். கண்கள் இரண்டும் இரண்டு பெரிய கடலினைப் போல் உள்ளன. கும்பகர்ணன் பாதாளம் புவி வான் என மூன்று உலகளவு பெரிதாக நின்றான்.

 

7468.   கூயினன் நும்முன்என்று அவர் கூறலும்

போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ;

வாயில் வல்லை நுழைந்து மதிதொடும்

கோயில் எய்தினன் குன்று (ன்) கொள்கையான்.

 

 

இந்த பாடலில் கும்ப கர்ணனை ‘’குன்று அன்ன கொள்கையான்’’ என்கிறான் கம்பன். கொள்கையில் குன்றின் உறுதியோடு இருப்பவன்.

 

.

7475.   அன்ன காலையில்ஆயத்தம் யாவையும்

என்ன காரணத்தால்? ‘என்று இயம்பினான்

மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத்

துன்னு தோளும் இடம் துடியா நின்றான்.

 

எதற்கான ஆயத்தங்கள் நிகழ்கின்றன?

 

7477.   ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்

சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?

வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்

போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?

 

கடும் போர் துவங்கி விட்டதா? மகத்தான கற்பரசியான ஜானகியின் துயரம் இன்னும் தீரவில்லையா? வானினும் உயர்ந்த உன் புகழ் உன்னை விட்டுப் போனதா? அழிவுகாலம் நடந்து கொண்டிருக்கிறதா?

 

           

7487.   பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை

சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்

மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்

உந்துதல் கருமம்என்று உணரக் கூறினான்.

 

இராவணா! நீ ஒவ்வொருவராக களத்திற்கு அனுப்பி அவர்களை இழந்து வருந்திக் கொண்டிருக்கிறாய். நாம் நமது முழுப் படையுடன் சென்று வானர சேனையுடன் மோத வேண்டும்.

 

7489.   மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;

பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;

இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்

உறங்குதி போய்என உளையக் கூறினான்.

 

’’நீ போர்க்களத்துக்குத் தகுதியானவன் அல்ல. திருப்தியாக ஊண் உண்க. கள் அருந்துக. எந்நேரமும் உறங்கிடுக.’’ என கும்பகர்ணனிடம் சினத்துடன் கூறினான் இராவணன்.

 

           

 

7493.   வென்று இவண் வருவென் என்று

    உரைக்கிலேன்; விதி

நின்றது, பிடர் பிடித்து

    உந்த நின்றது;

பொன்றுவென்; பொன்றினால்,

    பொலன்கொள் தோளியை,

நன்றுஎன, நாயக,

    விடுதல் நன்று அரோ.

என்னால் இந்த போரை வெல்ல முடியும் என்று எண்ண இயலவில்லை. விதி என் பிடரியைப் பிடித்து மரணத்தை நோக்கித் தள்ளுகிறது. நான் கொல்லப்பட்டால் ஜானகியை விடுவிப்பாயாக. விடுவித்து உன் உயிரை நீ காப்பாற்றிக் கொள்.

 

           

7495.   என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!

உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்

பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை

தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்று அரோ.

 

அவர்கள் என்னை வெல்வார்கள். என்னை வென்றவர்களுக்கு உன்னை வெல்லுதல் மிகவும் எளிதானதாகும். நான் கொல்லப்பட்ட பின்னராவது சீதையை விடுவிக்கும் முடிவை எடுப்பாயாக.

 

7507.   பாந்தளின் நெடுந்தலை வழுவி பாரொடும்

வேந்து என விளங்கிய மேரு மால்வரை

போந்தது போல் பொலந் தேரில் பொங்கிய

ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான்.

 

தேரில் அமர்ந்திருக்கும் மலையினைப் போல இருக்கும் கும்பகர்ணனை ஸ்ரீராமன் நோக்கினான்.

 

           

7508.   வீணை என்று உணரின் அஃது அன்று; விண் தொடும்

சேண் உயர் கொடியது வய வெஞ் சீயமால்;

காணினும் காலின் மேல் அரிய காட்சியன்;

பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்?

 

இவன் வீணைக்கொடி உடையவன் அல்லன். சிம்மக் கொடி கொண்டவன். மாவீரன். யார் இவன்?

 

           

7514.   ஆழியாய்! இவன் ஆகுவான்

ஏழை வாழ்வு உடை எம் முனோன்

தாழ்வு இலா ஒரு தம்பியோன்;

ஊழி நாளும் உறங்குவான்;

இராவணின் ஒப்பில்லாத தம்பி. எப்போதும் உறங்கக் கூடியவன்.

 

7518.   ஊன் உயர்ந்த உரத்தினான்;

மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;

தான் உயர்ந்த தவத்தினான்;

வான் உயர்ந்த வரத்தினான்;

 

பெரு வலிமை கொண்டவன். பெரும் நிமிர்வு கொண்டவன். உயர்ந்த தவம் படைத்தவன். வானளாவிய வரங்கள் பெற்றவன்.

 

           

7524.   “‘நன்று இது அன்று நமக்குஎனா

ஒன்று நீதி உணர்த்தினான்;

இன்று காலன் முன் எய்தினான்

என்று சொல்லி இறைஞ்சினான்.

 

சீதையைச் சிறை பிடித்திருப்பது நியாயமல்ல என்று இராவணனிடம் உரைத்தவன்.

 

7525.   என்று அவன் உரைத்தலோடும்,

    இரவி சேய், ‘இவனை இன்று

கொன்று ஒரு பயனும் இல்லை;

    கூடுமேல், கூட்டிக் கொண்டு

நின்றது புரிதும்; மற்று இந்

    நிருதர் கோன் இடரும் நீங்கும்;

நன்றுஎன நினைந்தேன்என்றான்;

    நாதனும், ‘நலன் ஈதுஎன்றான்.

 

தூயவனான கும்பகர்ணனை நம்முடன் இணைத்துக் கொள்வோம் என சுக்ரீவன் கூறினான்.

 

7526.   ஏகுதற்கு உரியார் யாரே? ‘

    என்றலும், இலங்கை வேந்தன்,

ஆகின் மற்று அடியேன் சென்று

    அங்கு அறிவினால் அவனை உள்ளம்

சேகு அறத் தரெுட்டி, ஈண்டுச்

    சேருமேல், சேர்ப்பன்என்றான்;

மேகம் ஒப்பானும், ‘நன்று, போக! ‘

    என விடையும் ஈந்தான்.

 

வீடணன் கும்பகர்ணனிடம் தான் சென்று நியாயத்தை எடுத்துச் சொல்கிறேன் என்றான். ராமனும் விடை தந்து அனுப்பினான்.

 

7527.   தந்திரக் கடலை நீந்தி,

    தன் பெரும் படையைச் சார்ந்தான்;

வெந்திறலவனுக்கு, ‘ஐய!

    வீடணன் விரைவின் உன்பால்

வந்தனன்என்னச் சொன்னார்;

    வரம்பு இலா உவகை கூர்ந்து,

சிந்தையால் களிக்கின்றான்தன்

    செறிகழல் சென்னி சேர்த்தான்

 

வீடணன் கும்பகர்ணனிடம் சென்று அடி பணிந்து வணங்கினான்.

 

7528.   முந்தி வந்து இறைஞ்சினானை,

    முகந்து, உயிர் மூழ்கப் புல்லி,

உய்ந்தனை, ஒருவன் போனாய்

    என மனம் உவக்கின்றேன் தன

சிந்தனை முழுதும் சிந்த,

    தெளிவு இலார் போல மீள

வந்தது என், தனியே? ‘என்றான்,

    மழையின் நீர் வழங்கு கண்ணான்

 

வீடணனை ஆரத் தழுவிய கும்பகர்ணன் ஏன் அரக்கர் சேனை நடுவே தனியே வந்தாய் என வினவினான்.

 

7529.   அவயம் நீ பெற்றவாறும்,

    அமரரும் பெறுதல் ஆற்றா

உவய லோகத்திலுள்ள சிறப்பும்,

    கேட்டு உவந்தேன், உள்ளம்

கவிஞரின் அறிவு மிக்காய்!

    காலன் வாய்க் களிக்கின்றேம்பால்

நவை உற வந்தது என், நீ?

    அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ?

 

உன்னை மரணம் சூழ்ந்திருக்கும் இவ்விடம் வந்தது ஏன்?

           

7530.   “‘குலத்து இயல்பு அழிந்ததேனும்,

    குமர! மற்று உன்னைக் கொண்டே

புலத்தியன் மரபு, மாயாப்

    புண்ணியம் பொருந்திற்று ‘‘ என்னா,

வலத்து இயல் தோளை நோக்கி

    மகிழ்கின்றேன்; மன்ன வாயை

உலத்தினை, திரிய வந்தாய்;

    உளைகின்றது உள்ளம், அந்தோ.

 

7535.   ஐய! நீ அயோத்தி வேந்தற்கு

    அடைக்கலம் ஆகி, ஆங்கே

உய்கிலை என்னின், மற்று இவ்

    அரக்கராய் உள்ேளார் எல்லாம்

எய்கணை மாரியாலே இறந்து,

    பாழ் முழுதும் பட்டால்,

கையினால் எள் நீர் நல்கி,

    கடன் கழிப்பாரைக் காட்டாய்.

 

நீ இராமனிடம் அடைக்கலம் ஆனது நல்ல முடிவு. அரக்கர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து இறுதிக்கடன் செய்வதற்கு நீ மட்டுமாவது எஞ்சுவாய்.

 

7537.   இருள் உறு சிந்தையேற்கும்

    இன் அருள் சுரந்த வீரன்

அருளும், நீ சேரின்; ஒன்றோ,

    அவயவமும் அளிக்கும்; அன்றி,

மருள் உறு பிறவி நோய்க்கு

    மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்

உருளுறு சகட வாழ்க்கை

    ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே.

 

           

7538.   எனக்கு அவன் தந்த செல்வத்து

    இலங்கையும் அரசும் எல்லாம்

நினக்கு நான் தருவென்; தந்து,

    உன் ஏவலின் நெடிது நிற்பென்;

உனக்கு இதின் உறுதி இல்லை;

    உத்தம! உன்பின் வந்தேன்;

மனக்கு நோய் துடைத்து,

    வந்த மரபையும் விளக்கு வாழி!

 

 

ஸ்ரீராமன் அளித்த இலங்கை அரசை நான் உனக்கு அளிக்கிறேன். நீ எங்களுடன் இணைந்து கொள்க.






           

7553.   நீர் கோல வாழ்வை நச்சி,

    நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்

போர்க் கோலம் செய்து விட்டாற்கு

    உயிர்கொடாது, அங்குப் போகேன்;

தார்க் கோல மேனி மைந்த!

    என் துயர் தவிர்த்தி ஆகின்,

கார் கோல மேனியானைக்

    கூடுதி கடிதின் ஏகி.

 

உலக வாழ்க்கை நிலையில்லாதது. அதன் மீது ஏற்படும் விருப்பத்துக்காக என் மீது நம்பிக்கை வைத்துள்ள இராவணனுக்கு உயிர் தராமல் போக மாட்டேன்.

 

           

7566.   வணங்கினான்; வணங்கி, கண்ணும்

    வதனமும் மனமும் வாயும்

உணங்கினான்; உயிரோடு யாக்கை

    ஒடுங்கினான்; ‘உரைசெய்து இன்னும்

பிணங்கினால் ஆவது இல்லை;

    பெயர்வதுஎன்று உணர்ந்து பேர்ந்தான்,

குணங்களால் உயர்ந்தான், சேனைக்

    கடல் எலாம் கரங்கள் கூப்ப.

 

7568.   எய்திய நிருதர் கோனும்

    இராமனை இறைஞ்சி, ‘ எந்தாய்!

உய்திறன் உடையார்க்கு அன்றோ

    அற நெறி ஒழுக்கம் உண்மை?

பெய்திறன் எல்லாம் பெய்து

    பேசினன்; பெயருந் தன்மை

செய்திலன்; குலத்து மானம்

    தீர்ந்திலன் சிறிதும் என்றான்.

 

           

 

 

7685.   மீட்டு அவன் கரங்களால் விலங்கல் ஆரை

மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்

வாட்டம் இல் வைத் தலை வயங்கு வாளிகள்

சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான்.

 

கும்பகர்ணனது அகன்ற நெற்றியின் மீது இரண்டு வாளிகளை இராமன் ஏவினான்.

 

7686.   சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ

நெற்றியின் நெடுங்கணை ஒளிர நின்றவன்

முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து

உற்று எழும் அருணனது உதயம் போன்றனன்.

 

நெற்றிக் குருதியால் நிறைந்த கும்பகர்ணனது முகம் செக்கச் சிவந்த வானத்தில் எழுந்த கதிரவன் போல் இருந்தது.



7687.   குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி

புன் தலைக் குருதிநீர் முகத்தைப் போர்த்தலும்

இன் துயில் எழுந்தனெ உணர்ச்சி எய்தினான்;

வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான்.

நெற்றியில் தாக்கப்பட்ட கும்பகர்ணன் மயக்கம் அடைந்தான்.

 

7689.   கண்டனன் நாயகன்தன்னை,

    கண்ணுறா,

தண்டல் இல் மானமும்

    நாணும் தாங்கினான்,

விண்டவன் நாசியும்

    செவியும் வேரொடும்

கொண்டனன், எழுந்து போய்த்

    தமரைக் கூடினான்.

 

சுக்ரீவன் கும்பகர்ணனது மூக்கையும் காதுகளையும் பிய்த்து எடுத்துக் கொண்டு சென்று வானர சேனையுடன் இணைந்து கொண்டான்.

 

7690.   வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன;

தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன;

மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;

வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே.

 

7691.   காந்து இகல் அரக்கன் வெங்கரத்துள் நீங்கிய

ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய

வேந்தனும் சானகி இலங்கை வெஞ்சிறைப்

போந்தனள் ஆம் எனப் பொருமல் நீங்கினான்.

 

           

 

7695.   எண் உடைத் தன்மையன் இனைய எண் இலாப்

பெண் உடை தன்மையன் ஆய பீடையால்

புண் உடைச் செவியொடு மூக்கும் போன்றவால்

கண்ணுடைக் குழிகளும் குருதி கால்வன.

 

7723.   பனிப் பட்டால் எனக் கதிர்வரப்

    படுவது பட்டது, அப்படை; பற்றார்

துனிப் பட்டார் எனத் துலங்கினர்

    இமையவர்; ‘யாவர்க்குந் தோலாதான்

இனிப் பட்டான்என, வீங்கின

    அரக்கரும் ஏங்கினர்; ‘இவன் அந்தோ,

தனிப் பட்டான்! ‘என, அவன் முகன்

    நோக்கி ஒன்று உரைத்தனன், தனிநாதன்.



7724.   ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை;

    எதிர் ஒருதனி நின்றாய்;

நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்,

    நின் உயிர் நினக்கு ஈவன்;

போதியோ? பின்றை வருதியோ?

    அன்று எனின் போர்புரிந்து இப்போதே

சாதியோ? உனக்கு உறுவது

    சொல்லுதி, சமைவுறத் தரெிந்து அம்மா!

 

களத்தில் தனியாய் நிற்கும் கும்பகர்ணனே! உன் உயிரை உனக்கு அளிக்கிறேன். நீ மீண்டும் திரும்பி வா. அல்லது உன்னை இப்போதே கொல்கிறேன். உனது விருப்பம் என்ன?

 

7725.   இழைத்த தீவினை இயற்றிலது ஆகலின்,

    யான் உனை இளையோனால்

அழைத்த போதினும் வந்திலை,

    அந்தகன் ஆணையின்வழி நின்றாய்;

பிழைத்ததால் உனக்கு அருந்திரு,

    நாெளாடு; பெருந்துயில் நெடுங்காலம்

உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்கு

    உறுவது ஒன்று? உரை என்றான்.

 

வீடணன் சொல் கேட்டு நீ எங்களுடன் இணையவும் இல்லை. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.

 

7726.   மற்று எலாம் நிற்க; வாசியும்,

    மானமும், மறத்துறை வழுவாத

கொற்ற நீதியும், குலமுதல் தருமமும்,

    என்று இவை குடியாகப்

பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து,

    தன் பெருஞ் செவி மூக்கோடும்

அற்ற எங்கை போல் என்முகம் காட்டி

    நின்று ஆற்றலென் உயிர் அம்மா!

 

செவியும் நாசியும் இன்றி நான் அரக்கர்கள் முன் முகம் காட்ட விரும்பவில்லை.

 

7727.   நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்;

    அவ் வகை நிலை நோக்கி,

தாக்கணங்கு அனையவள், பிறர்மனை

    எனத் தடுத்தனென் தக்கோர் முன்

வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன்

    செவி தன்னொடு மாற்றாரால்

மூக்கு இழந்த பின் மீளல் என்றால்,

    அது முடியுமோ? முடியாதாய்!

 

7733.   தாக்குகின்றன நுழைகில தலை;

    அது, தாமரைத் தடங்கண்ணான்

நோக்கி, இங்கு இது சங்கரன் கவசம்

    என்று உணர்வுற நுனித்து உன்னி,

ஆக்கி அங்கு அவன் அடுபடை

    தொடுத்துவிட்டு அறுத்தனன்; அது சிந்தி

வீக்கு இழந்தது வீழ்ந்தது,

    வரைசுழல் விரிசுடர் வீழ்ந்து என்ன.

 

கும்பகர்ணனுக்கு சங்கரன் கொடுத்த கவசத்தை அறுத்தான் இராமன்.

 

7738.   அலக்கண் உற்றது தீவினை; நல்வினை

    ஆர்த்து எழுந்தது; வேர்த்துக்

கலக்கம் உற்றனர், இராக்கதர்

    ‘கால வெங்கருங்கடல் திரைபோலும்

வலக் கை அற்றது, வாெளாடும்;

    கோளுடை வான மா மதி போலும்;

இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும்

    இராவணன் தனக்கும்என்று எழுந்து ஓடி.

 

7742.   ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி

    என்று இமையவர் தொழுது ஏத்த,

தோற்றுக் கையகன்று ஒழிந்தவன்

    நாள் அவை தொலையவும், தோன்றாத

கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட,

    நெடுங்கொற்றவன் கொலை அம்பால்,

வேற்றுக் கையையும் வேலையில்

    இட்டனன், வேறும் ஓர் அணை மான.

 

7746.   நிலத்தகால், கனல், புனல், என

    இவை முற்றும் நிருதனது உருவு ஆகி,

கொலத் தகாதது ஓர் வடிவு

    கொண்டால் என உயிர்களைக் குடிப்பானை,

சலத்த காலனை, தறுகணர்க்கு

    அரசனை, தருக்கினின் பெரியானை,

வலத்த காலையும், வடித்த வெங்

    கணையினால் தடிந்தனன் தனு வல்லான்.

 

7748.   .மாறுகால் இன்றி வானுற நிமிர்ந்து,

    மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,

சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து,

    மேல் தொடர்கின்ற தொழிலானை,

ஏறு சேவகன் எரிமுகப் பகழியால்,

    இருநிலம் பொறை நீங்க,

வேறு காலையும் துணித்தனன்,

    அறத்தொடு வேதங்கள் கூத்தாட.






7754.   புக்கு அடைந்த புறவு

    ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க

மைக் கடம் கார் மதயானை வாள்

    வேந்தன் வழி வந்தீர்!

இக்கடன்கள் உடையீர் நீர்

    எம் வினை தீர்த்து, உம்முடைய

கைக்கு அடைந்தான் உயிர்

    காக்கக் கடவீர், என்கடைக் கூட்டால்.

 

7755.   நீதியால் வந்ததொரு

    நெடுந் தரும நெறி அல்லால்,

சாதியால் வந்த சிறு

    நெறி அறியான், என் தம்பி;

ஆதியாய்! உனை அடைந்தான்;

    அரசர் உருக் கொண்டு அமைந்த

வேதியா! இன்னும் உனக்கு

    அடைக்கலம் யான் வேண்டினேன்.

 

7756.   வெல்லுமா நினைக்கின்ற வேல்

    அரக்கன்வேரோடும்

கல்லுமா முயல்கின்றான் இவன் ‘‘

    என்னும் கறு உடையான்;

ஒல்லுமாறு இயலுமேல்,

    உடன்பிறப்பின் பயன் ஒரான்;

கொல்லுமால், அவன் இவனை;

    குறிக்கோடி, கோடாதாய்!

 

7757.   தம்பி என நினைந்து, இரங்கித்

    தவிரான் அத்தகவு இல்லான்,

நம்பி! இவன்தனைக் காணின்

    கொல்லும்; இறை நல்கானால்;

உம்பியைத்தான், உன்னைத்தான்

    அனுமனைத்தான், ஒரு பொழுதும்

எம்பி பிரியானாக அருளுதி,

    யான் வேண்டினேன்.

 

இராவணனிடமிருந்து வீடணனைக் காக்குமாறு ஸ்ரீராமனிடம் வேண்டிக் கொண்டான் கும்பகர்ணன்.

 

7758.   மூக்கு இலா முகம் என்று

    முனிவர்களும் அமரர்களும்

நோக்குவார் நோக்காமை

    நுன் கணையால் என் கழுத்தை

நீக்குவாய்; நீக்கியபின்,

    நெடுந்தலையைக் கருங்கடலுள்

போக்குவாய்; இது நின்னை

    வேண்டுகின்ற பொருள் ‘‘ என்றான்

 

என் முகத்தை கடலில் அமிழ்த்திடுவாயாக.

 

7759.   வரம் கொண்டான்; இனி மறுத்தல்

    வழக்கு அன்றுஎன்று ஒரு வாளி

உரம் கொண்ட தடஞ்சிலையின்

    உயர் நெடுநாண் உள் கொளுவா,

சிரம் கொண்டான்; கொண்டதனைத்

    திண் காற்றின் கடும் படையால்,

அரம் கொண்ட கருங்கடலின்

    அழுவத்துள் அழுத்தினான்.

 

7760.   மாக்கூடு படர்வேலை

    மறி மகரத் திரை வாங்கி,

மேக்கூடு, கிழக்கூடு,

    மிக்கு இரண்டு திக்கூடு

போக்கூடு தவிர்த்து, இருகண்

    புகையோடு புகை உயிர்க்கும்

மூக்கூடு புகப்புக்கு

    மூழ்கியது அம் முகக் குன்றம்