மாலை
வீட்டு வாசலில்
அவசர அவசரமாய்
கதவைத் தட்டும்
சீருடையில் புழுதி பூசிய
பள்ளிக் குழந்தைகள்
போல்
நிற்கின்றன
நெடுஞ்சாலைப் புளியமரங்கள்
முன்பெல்லாம்
வருடா வருடம்
ஊர் ஏலத்தில்
புளியம்பழத்துக்காக
மட்டும்
உலுக்கப்படுபவை
இப்போது
ஜே சி பி யால்
அடிக்கடி
பெயர்க்கப்பட்டு
விறகுகளாகின்றன
சாலை விரிவாக்கத்துக்காக
இல்லாமல் போனாலும்
அங்கொன்றும் இங்கொன்றும்
இருந்தாலும்
சாலையின்
சாலை பற்றிய நினைவுகளில்
நீங்காமல் இருக்கின்றன
புளியமரங்கள்
நெடுஞ்சாலைப் புளியமரங்கள்