Sunday 6 January 2019

பிராத்தனை

பனித்துளிகள் நுனியில் நிற்கும் புல்தரையால்
சிவப்பு சூரியனால்
அதிகாரமாய் விளிக்கும் காகக் கரைதல்களால்
அங்கும் இங்கும் சிறகடிக்கும் சிட்டுக்குருவிகளால்
அன்றலர்ந்த வண்ண வண்ண மலர்களால்
குழந்தைகள் போல் நோக்கும் இளம் பச்சைத் தளிர்களால்
எளிய கூழாங்கற்களால்
தீர்த்தக் கரையால்

ஆனதாக இருக்கிறது
உனது சன்னிதானம்

என்னிடம்
கண்ணீர் இருக்கிறது
கடுந்துயர் இருக்கிறது
பெருவலி இருக்கிறது

காட்டுத் தீயென
என்னைச் சூழ்ந்து
அழிப்பாய்
என
உன் முன் நிற்கிறேன்