Sunday 31 March 2019

ஓர் இனிய தடாகம்

செம்பொன்னார் கோவிலிலிருந்து
நல்லாத்தூர்
செல்லும் வழியில்
இடது பக்கத்தில்
பச்சையாய் இலைகள்
எப்போதும் மூடியிருக்கும் குளப்பரப்பில்
ஒவ்வொரு சதுரடியிலும்
மலர்ந்திருக்கிறது
தாமரை
ஈர்க்கப்பட்டு
இறங்கினேன்
வழவழக்கும் கெண்டைகள்
உரசிச் சென்றன
சில்லென்ற உணர்வில்
நீரசைவில் எழுந்தன
மலரில் மறைந்திருந்த
தேன் சிட்டுகள்
ஓர் இனிய உறவைப் போல
ஓர் இனிய நினைவைப் போல
ஓர் இனிய தடாகமும்
வாழ்க்கையில்
எதிர்ப்படவே செய்கிறது