Thursday 25 April 2019

மலராதல்

வயல்வெளி ஓர
பாய்ச்சல் மடைகளில்
அவை வீற்றிருக்கின்றன
அல்லி மலர்கள்

மின்விசிறிக்கு நேர் கீழே
அமர்ந்து
முகவாயை
மார்பில் வைத்து
முகம் மறைய
தரையில் படறவிட்டிருக்கும்
அழகான இளம் பெண்ணின்
ஈர அடர் கூந்தல்
என
துவண்டிருக்கின்றன
தடாகத்துத் தாமரை மலர்கள்

எதிர்பாராமல்
நுழைந்து விடுகிறோம்
நாகலிங்கத்தின்
மணம் நிறையும்
எல்லையில்

கோடையை
நேசிக்கின்றன
காற்றில் உருளும்
வேப்பம் பூக்கள்

மலர் பார்த்தல்
ஓர் அனுபவம்
மலராதல்
ஒரு பெறும் பேறு