Saturday 4 May 2019

சொல்லாதல்

நீ
ஒரு காட்சியாக
உள்நுழைந்தாய்
ஓர் இனிய காட்சியாக
உனது கண்கள்
உனது மென்மையை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தன
கருணையின் நீர்மையால்
ஈரம் கொண்டிருந்தன
இந்த உலகைப் பார்க்கும்
உனது கண்கள்
பிரியமானவை
உனது சொற்கள்
உனது சொற்களுக்கு இடையே
ஏற்படும்
இடைவெளிகளும் தயக்கங்களும்
மேலும்
பிரியம் கொண்டிருந்தன
உனது கனவுகளின் பிரதேசம்
வெள்ளிப் பனிமலைகளும்
அலைகடல் ஆழங்களும்
உனது காட்சியை
சொற்களாக்குகையில்
என்னைச் சூழ்கின்றன கார்மேகங்கள்
தென்றல் தீண்டிச் செல்கிறது
உடனிருக்கிறது அருவிச்சாரல்
அனல் நீக்கும் குளிர் நிறைகிறது
எங்கும்