Tuesday 7 May 2019

தூது

என் வீட்டு மாடித் தோட்டத்தில்
சிறகு இமைக்கும்
வண்ணத்துப்பூச்சியை

பாதையில்
கம்பி வடங்களில்
அமர்ந்திருக்கும்
கரிச்சானை

வாசல் மாமரத்தின்
பொந்தில்
வசிக்கும்
பச்சைக்கிளியை

வீட்டுக்கு அருகிருக்கும்
சிறுவனத்தில்
அலைந்து திரியும்
நீலமயிலை

தூதாக அனுப்புகிறேன்
ஒரு சொல்லுடன்
அது எப்போதும்
உனது பெயராக இருக்கிறது

அவை தினமும்
உனைக் கண்டு
சொல் உரைத்து
திரும்பி வருகின்றன
உனது மௌனத்துடன்