Wednesday, 10 December 2025

கேள்வியும் பதிலும்

 
எனது நண்பர் ஒருவர் மருத்துவர். மாநில அரசாங்கத்தில் பணி புரிகிறார். சுற்றுச்சூழல், யோக மார்க்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். கடுமையான வேலைப்பளு கொண்டவர். காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வண்ணம் இருப்பார். 

சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்த போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அவரது கேள்வி இதுதான் : ஊரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையிலும் ஊரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலும் சாலையின் இருபக்கமும் நிறைய நிலம் இருக்கிறதே அதில் ஏன் விவசாயிகள் மரங்கள் பயிரிடுவதில்லை ? அவ்விதம் மரங்கள் நட்டால் அவர்களுக்கு பொருளியல் பயன் அதிகம் இருக்குமே எனக் கேட்டார். 

முதற்பார்வைக்கு படக் கூடிய விஷயத்திலிருந்து நண்பர் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார். 

அதற்கு நான் ஒரு பதில் கூறினேன். அந்த பதில் சமூகவியல், பொருளியல், மானிட நடத்தையியல், நில வணிகம், நேரடி கள அனுபவம் என பல விஷயங்களின் கூறுகள் இணைந்த பதிலாகும் அது. அது என்னவென்றால்

‘’அதாவது, பிரதான சாலையை ஒட்டி இருக்கும் நிலம் ரியல் எஸ்டேட் மதிப்புப்படி பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு கொண்டதாக இருக்கும். அந்த நிலத்தின் உரிமையாளர் பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு தன்னிடம் இருப்பதாக எண்ணுவார். அவரிடம் இருப்பது யூகச் செல்வம். அந்த யூகச் செல்வம் இருப்புச் செல்வத்துக்கு சமமாகாது எனினும் தான் ஒரு லட்சாதிபதி என்றே எண்ணம் கொண்டிருப்பார். எனவே அவர் அந்த வயலை ஏதும் செய்யாமல் போட்டு வைத்திருப்பார். அதில் சீமைக்கருவை வளர்ந்து கொண்டிருக்கும். ஊர்க்காரர்களுக்கு சாலையை ஒட்டியிருக்கும் நிலம் என்பதால் பெரிய மதிப்புக்கு விற்பனை ஆகும் என்பது தெரியும். எனவே அவரிடம் ஏன் நிலத்தை ஏதும் செய்யாமல் வைத்திருக்கிறாய் என்று கேட்க மாட்டார்கள். அவ்விதம் கேட்டால் அந்த நிலத்தின் மீதான பொறாமையால் கேட்டதாக ஆகி விடும் என்பதால் யாரும் அந்த கேள்வியை எழுப்ப மாட்டார்கள். 100 நிலத்துண்டுகள் சாலைக்கு அருகில் இருந்தால் ஓராண்டில் ஒன்று அல்லது இரண்டு விற்பனையாவது அதிகம். எனினும் மேற்படி மனோபாவமே எல்லா நில உரிமையாளர்களிடமும் இருக்கும். பல ஆண்டுகளுக்கு நிலம் அப்படியே இருக்கும். அசையா சொத்துக்கள் அவை.’’

இதுதான் நான் கூறிய பதில். 

நான் கூறிய பதிலை கேட்டுக் கொண்டாரே தவிர இந்த பதில் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. 

இந்த பதிலைப் புரிந்து கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பார்த்தேன். 

மருத்துவம் அவரது துறை. அவர் ரியல் எஸ்டேட்டும் கூடுதலாக மேற்கொண்டால் அவருக்கு நான் கூறும் பதில் புரியலாம். இன்று நண்பர் ஃபோன் செய்தார். அவரிடம் இதனைக் கூறினேன்.