நேற்று நண்பரின் வீட்டுக்குச் சென்ற போது அங்கே அவரது ஏழு வயது மகனைச் சந்தித்தேன். புத்தர் மகவாயிருந்த போது கொண்டிருந்த பெயரை உடையவன் அச்சிறுவன். மிருதங்கத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறான். நேற்று அவனிடம் உரையாடிக் கொண்டிருந்த போது உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் என்று கேட்டேன். கால்பந்து என்று கூறினான். இன்று காலை முதல் வேலையாக காலை 10 மணிக்கு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடை திறந்ததும் அங்கே சென்று ஒரு கால்பந்து வாங்கினேன். இரு சக்கர வாகனத்தில் நண்பரின் ஊருக்குச் சென்று அவர்கள் வீட்டில் குழந்தையிடம் எனது அன்புப் பரிசாக கொடுத்து விடுங்கள் எனக் கூறி அளித்து விட்டு வந்தேன். நண்பர் பணிக்குச் சென்றிருந்தார். நண்பரின் வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம். நேற்று இரவு வந்தவர் மீண்டும் வந்திருக்கிறாரே என. எனக்கு இலேசான இருமல் இருக்கிறது. அதனைக் கவனித்து பாலில் சுக்கு கலந்து கொடுத்தனர். அருந்தி விட்டு நண்பரிடம் ஃபோனில் விஷயத்தைக் கூறி விட்டு புறப்பட்டேன்.