சில நாட்களுக்கு முன்னால் எனக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். உரையாடிய சில கணங்களில் நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அவரது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன். அவர் குடவாயில் என்ற கிராமத்தில் வசிக்கிறார். ஊரிலிருந்து அவர் ஊருக்குச் செல்ல திருவாரூர் சென்று அங்கிருந்து குடவாயில் செல்ல வேண்டும் அல்லது கும்பகோணம் சென்று அங்கிருந்து குடவாயில் செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன். நண்பரிடம் ஊருக்கு வருவதாகச் சொன்னேன். எந்த வழி என்று கேட்டார். திருவாரூர் வழியாக என்றேன். ‘’வேண்டாம் பிரபு . சன்னாநல்லூர் வந்து ஸ்ரீவாஞ்சியம் வாங்க. அங்கிருந்து குடவாசல் வந்துடலாம்’’ என்றார் நான் மேற்படி 3 ஊர்களுக்கும் சென்றிருக்கிறேன். இருந்தாலும் இந்த மார்க்கம் ஒரு சுருக்கமான வழி என்பதை அறிய நேர்ந்தது புதியதாக இருந்தது. சன்னாநல்லூரிலிருந்து குடவாயில் வரை தொடர்ச்சியாக கிராமங்கள். செழிப்பான நெல் வயல்கள். ஒரு கிராமம் என்பது 1000 ஏக்கர் எனில் 500 ஏக்கர் நெல்வயல்கள். 500 ஏக்கர் தெருக்கள், வீதிகள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள். 500 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலம் ஊரில் 3 அல்லது 4 பேரிடம் இருக்கும். மீதி 460 ஏக்கர் 200 பேரிடம் இருக்கும். அந்த கிராமத்தின் ஒட்டு மொத்த பொருளியல் 200 பேரிடம் இருக்கும். 200 பேரிடம் என்றால் 200 குடும்பத்திடம். ஒரு குடும்பத்துக்கு 5 பேர் எனக் கணக்கிட்டால் 1000 பேரிடம். கிராமத்தின் மக்கள் தொகை 4000 எனக் கொண்டால் அதில் 1000 பேர் சிறு விவசாயக் குடும்பத்தினர். விவசாயம் தவிர்த்து இதர தொழில் செய்பவர்கள் 500 பேர் இருப்பார்கள். 1500 பேர் விவசாயத் தொழிலாளர்களாக இருப்பார்கள். ஏறக்குறைய தஞ்சைப் பிராந்தியத்தின் கிராமங்களுக்கு இந்த பொதுச் சித்திரத்தை அளித்திட முடியும். இங்கே விவசாயம் எப்படி நிகழ்கிறது என்றால் வயலின் நெல் விளைச்சலை அரசாங்கம் விலை கொடுத்து வாங்கி விடும். அரசாங்கம் தன் கருவூலத்திலிருந்து பெரும் தொகையை அளித்து நட்டத்துக்கு கொள்முதல் செய்கிறது. எனவே அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மாட்டார்கள். விவசாயிகள் உபரியாக நெல்லை விளைவிக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் விற்பனை விலையில் பாதிக்குப் பாதி விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியமாக சென்று விடும். மூலதனம் மட்டும் வட்டிக்கு 40 சதவீதம். 10 சதவீதம் லாபம் இருக்கும். ஒருவர் 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு வருடத்துக்கு ரூ.40,000 - ரூ.50,000 வருமானம் கிடைக்கும். இது மிக சொற்பமான வருமானம். கிராமத்தின் 1000 பேருக்கும் இதே விதமான வருமானம் இருப்பதால் மொத்த கிராம மக்களும் இதுவே யதார்த்தம் என இருப்பர். அவர்களால் இந்த பொருளியல் கணக்கையும் அவர்களுடைய பொருளாதார நிலையையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தெரியாது. இந்த கிராமங்களில் மக்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டுமென்றால் அங்கே பெரும் லாபம் தரக்கூடிய விவசாயப் பயிர்கள் உற்பத்தியாக வேண்டும். ஏன் மஞ்சள் உற்பத்தி செய்யும் ஈரோடு விவசாயிகள் பொருளியலில் வளர்ந்து காணப்படுகிறார்கள் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சிரமத்தில் இருக்கிறார்கள் என விவசாயிகள் யோசிக்க வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் தான் விவசாயிகளுக்கு ஏதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என முயல்கிறது. இந்த பொருளியல் புரிதலுடன் நான் கிராமங்களைக் காண்பேன் என்பதால் ஒவ்வொரு கிராமத்தையும் பார்த்தாலே அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது முதற்பார்வைக்கே புலப்பட்டு விடும் என்பதால் எனது ஒவ்வொரு கிராமப் பயணமும் சுவாரசியமானதே. இந்த பிராந்தியத்தில் அதிக அளவில் ஆலமரங்களும் அரசமரங்களும் இருப்பதைக் கண்டது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்புவது ஒரு கிராமத்தில் இருக்கும் கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் 10 ஆலமரமாவது தங்கள் கிராமத்தில் நட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அது அந்த கிராமத்தின் சமூக வாழ்வில் பெரும் மாற்றம் கொண்டு வரும் என்பது எனது நம்பிக்கை.
நண்பர் மிகவும் சுவாரசியமானவர். இசை, சிற்பம், வரலாறு , இலக்கியம் என பலதுறைகளில் ஆர்வமாக இருக்கிறார். நண்பர் குடவாயிலில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். 1000 சதுர அடி பரப்பு கொண்ட வீடு. வீடு நல்ல முறையில் எழும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் 60 நாட்களுக்கு பணி இருக்கிறது. தை மாதத்தில் குடி புகுந்து விடுவார். வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். பக்கத்தில் உள்ள கிராமத்தில் அவரது சொந்த வீடு இருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் அங்கே இருக்கின்றனர். அவரது நூல் சேமிப்பை எனக்குக் காட்டினார். இலக்கியம், கலை, நுண்கலை ஆகிய நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் அறிவுச் செயல்பாட்டில் ஆர்வம் கொள்ளும் எவருக்குமே ஊக்கமளிக்கும் புறச்சூழல் அமைந்திருக்க வாய்ப்பில்லை. அதனையும் தாண்டி ஒருவர் அறிவார்ந்த விஷயங்களின் மேல் ஆர்வமாக இருக்கிறார் என்றால் அது மிகச் சிறப்பான ஒன்றே. நண்பரால் குடவாயில் அகத்துக்கு அணுக்கமான ஊராகி விட்டது.